Pages

(அக்டோபர் 1994)
இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்து தன்னையும், உலகையும், உணர்வையும் அறிந்துணர்ந்த ஞானிகள், இந்த மனித வாழ்க்கையில் ஏற்படும் தீமைகளில் இருந்து விடுபடவேண்டும் என்ற நோக்குடன் பெற்ற, அந்த உணர்வின் துணையால், உண்மையின் உணர்வை அறிந்து, தன் நிலைகளில் உணர்வை ஒளியாக மாற்றி, விண் சென்ற ரிஷிகள் பலர்.
இந்த உடலான சிறையில் இருந்து விடுபட்டு,
இந்தப் புவியின் ஈர்ப்பைக் கடந்து,
என்றும் சுதந்திரமாக,
தம்மை எந்த உணர்வும் அழித்திடாது இன்றும் விண்ணில் மின்னிக் கொண்டிருக்கின்றனர், சப்தரிஷிகள்.


ஒருவன் குற்றம் செய்தால், அவனைத் தண்டிக்கின்றோம். இது அரசர்கள் காட்டிய வழி. ஒருவன் ஒரு தவறு செய்கின்றான் அல்லது பிறருக்கு இம்சைகளைச் செய்கிறான் என்றால், அவனுக்கு இம்சை தரக்கூடிய தண்டனைகளையே தந்தனர் அரசர்கள்.


ஆனால் மகரிஷிகளோ, ஒருவர் உடலில் அறியாது புகுந்த,
தீமை விளைவிக்கக் கூடிய உணர்வினை நீக்கி, உயர்ந்த கருத்தினை அவரினுள் செலுத்தி,
அவர்தம் உடலில் வரும் தீமையினை அடக்கி,
அதற்கு தண்டனை அளித்து,
இணைந்து செயல்படும் உணர்வினை, வளர்த்துக் கொண்டார்கள். அதையே மக்களுக்கு உணர்த்தினார்கள்.


மகாத்மா காந்தி, நம்மை இயக்கும் தீய உணர்வுகளில் இருந்து நாம் விடுபடவேண்டும் என்றும், அதே சமயம், ஆங்கிலேயர்களும் நம் சகோதரர்களே என்று சொல்லி, அவர்களிடம் இருக்கும்,
“மற்றவர்களை அடிமைப்படுத்தும் உணர்வைத்தான்
விலக்க வேண்டும்” என்று மகாத்மா காந்தி பாடுபட்டார்.


உலக மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர், ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து, அந்த உடலில் இருக்கும் நல்ல உணர்வின் தன்மையைச் சகோதர உணர்வுடன் பாவிக்க வேண்டும் என்பதைத்தான் “ராம ராஜ்யம்” என்றார்.


நாம் எடுக்கும் உயர்ந்த குணங்கள் எதுவோ, அது மகிழ்ந்திடும் நிலையாக நமது செயல் இருக்கும் பொழுதும், நம் உடலில் இருக்கும் சலிப்பு, சங்கடம், கோபம், குரோதம் போன்ற உணர்வுகள் அனைத்தையும் நீக்கி, மகிழ்ச்சி என்ற உணர்வுகளில் நாம் எண்ணும் பொழுது, நமக்குள் அது ஒருக்கிணைந்து, நம்மை மகிழ்விக்கச் செய்கின்றது. இதுதான் ராம ராஜ்யம்.


நமது பூமியே, நமக்குத் தாய். நாம் மகிழ்ச்சியுடன் இருக்கும் பொழுது, அதனைக் காணும் தாய் மனமும் மகிழ்ச்சி அடைகின்றது. அது போன்று, நாம் மகிழ்ச்சியடையும் பொழுது வெளிப்படும் மூச்சலைகள், நமது தாய்பூமியில் படர்கின்றது.


இந்த மகிழ்ச்சியான உணர்வுகள் பரவும் பொழுது,
நமது தாய் நாடு மகிழ்ந்திருக்கும்.
இதில் வாழும் கோடிக்கணக்கான
மக்களும் மகிழ்ச்சியின் உணர்வுகளைப் பெறுவர்.


பூமியில் ஒரு வெடிகுண்டை வீசினால், அதனின் நச்சுத் தன்மை காற்றில் பரவி, அதனைச் சுவாசிக்க நேர்பவர்கள் மடிகின்றனர்.


ஆனால் மகிழ்ச்சியான உணர்வுகள் காற்றில் பரவும் பொழுது, அதனை நுகர்பவர்கள், மகிழும் நிலை வருகின்றது.


நமது பூமியே, நமக்குத் தாய் என்கின்ற பொழுது, அந்த தாய்க்கு, நாம் சேவை செய்வது எவ்வாறு இருக்க வேண்டும்?, என்ற நிலையில் சிந்தித்து,
இந்தப் பூமியில் பிறந்த நாம்,
இந்தத் தாயின் பிள்ளைகள் என்று ஒருங்கிணைந்து,
தாயுடன் நாம் எவ்வாறு அரவணைத்துச் செல்கின்றோமோ,
தாய் எவ்வாறு நம்மை அரவணைத்து வாழ்த்துகின்றதோ,
இது போன்று, நாம் தாயுடன் அணுகிய நிலைகள் கொண்டு,
நாம் அனைவரும் சகோதரர் என்றும்,
இன பேதமின்றி, மத பேதமின்றி, மொழி பேதமின்றி, மன பேதமின்றி,
நாம் வாழ்நிடுவதே நலம்.


நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள், என்று எண்ண வேண்டும். இந்த எண்ணமானது நம் பூமியைக் காக்கும்.



இந்த பூமித்தாயைக் காப்பது போன்று, நம்மை ஈன்ற தாயும், மகிழ்ந்திடும் நிலையாக நாம் செயலாற்றிட வேண்டும். நமது தாய் தந்தையர், எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில், நம்மிடத்தில் அன்பைக் காட்டி, நல்லறிவை ஊட்டி நம்மை வளர்த்தனர். உணவும் உடையும் கொடுத்துக் கல்விக்கு வேண்டிய வசதிகளும் செய்து கொடுத்தனர்.


ஆகவே நாம், நம் தாய், தந்தையை மகிழ்ந்திடச் செய்யும் நிலை பெறவேண்டும். தீய உணர்வுகளை அடக்க வேண்டுமென்றால், தாயின் பேரன்பைப் பெறவேண்டும்.


தாயின் பேரன்பைப் பெற்றால், மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெற முடியும். அதைப் பெற்று, உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய உணர்வுகளை அடக்கி, மெய்ஞானிகளின் உணர்வை உங்களில் வளர்த்து, அன்னை தந்தையை, பேரின்பப் பெருநிலை பெறச் செய்ய வேண்டும்.


அன்னை, தந்தை, அவர்கள் பெறுகின்ற மகிழ்ச்சியினால்
வெளிப்படும் மூச்சலைகள், இந்த பூமியில் படர்கின்றன.
நம் தாய் பூமியான இந்த பூமியில்,
நாம் அனைவரும் மகிழ்ந்திடும் உணர்வை வெளிப்படுத்தினால்
தாய் பூமியும் மகிழ்ந்திடும் நிலை உருவாகும்.




(நவம்பர் 1994)
“உண்டு” என்பவருக்கு ‘உள்ளதாகவும்’,
“இல்லை” என்பவருக்கு ‘இல்லாததாகவும்’
செய்விக்கின்ற உணர்வின் தன்மையை அறிந்து,
தன் ஆன்ம ஞானத்தை வளர்ப்பவருக்கு
அனைத்தும் கைகூடும்.


விநாயகர் சதுர்த்தி நன்னாளில், விநாயகர் உருவத்தைக் களிமண்ணால் செய்து, பூஜித்துப் பின் கடலில் கரைக்கின்றோம்.


இதைப் போன்றுதான், சந்தர்ப்பத்தால், நமக்குள் சேர்ந்த தீய உணர்வுகளை வளராது தடுத்து, “அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், எல்லா குடும்பங்களும் நலம் பெறவேண்டும், எங்கள் பகைமைகள் அழிய வேண்டும்” என்று ஏகோபித்த நிலையில் பிரார்த்திக்கும் பொழுது,
நம் உடலிலும்,
நம் பகைவர்களின் உடலிலும் பதிந்த,
தீய உணர்வுகள் அனைத்தும் கரைந்து விடுகின்றன.


ஒரு மரம், எந்த நறுமணத்தின் உணர்வுகளைக் கொண்டிருக்கின்றதோ, அதனின் உணர்வின் சக்தியைக் காற்றில் இருந்து ஈர்க்கின்றது.


ஆனால், அதனுடைய வேரை அறுத்துவிட்டால், அது நீரைக் கவரும் திறனை இழந்து, தன் ஜீவ சக்தியை இழந்து, தன் இனத்தைக் கவரும் தன்மையையும், இழந்து விடுகின்றது.


இதைப் போன்றுதான், நமக்குள் மற்றவரின் உணர்வின் தன்மையைப் பதிவு செய்து,
அதனின் நினைவாற்றல் வராதபடி,
தடுத்து நிறுத்தும் நிலையாக,
மகரிஷிகளின் அருள் சக்தியை இணைக்கப்படும் பொழுது, தீய உணர்வுகளின் விழுதுகள் தடைப்படுகின்றன.


இவ்வாறு தடைப்பட்டபின்,
நாம் அனைவரும் ஏகோபித்த நிலையில்,
எல்லோரும் நம் நண்பர்கள் என்று வளரப்படும்போது,
நம் அனைவரிடமும் இருந்து வெளிப்பட்டிருந்த,
காற்றில் கலந்துள்ள தீய உணர்வுகள், நகர்ந்து,
கடலின் ஈர்ப்புக்குள் சென்று மறைந்து விடுகின்றன.
அப்பொழுதுதான், இந்த பூமியில் பரிசுத்த நிலைகள் பெருகி, அதே சிந்தனை மக்களின் மத்தியிலும் தோன்றுகின்றது.


ஏனென்றால், உலக மக்கள் அனைவரும் ஓரினம், நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள், நாம் ஈசனின் இயக்கத்தால்தான் இயங்குகின்றோம். நம்மை இயக்கும் உயிரான ஈசனுக்கு மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, வெறுப்பையோ, குரோதத்தையோ கொடுத்துவிடக் கூடாது.


ஆகவேதான், நமது உயிரான ஈசனுக்கு செய்யக் கூடிய கடமைகள் எதுவென்று உணர்ந்து, நமது வாழ்க்கையில் நல்ல குணங்களை சுதந்திரமாக்க, அருள் ஞானிகளின் உணர்வைக் கவசமாக மாற்றிடவேண்டும்.


அரசியல், மத, இன, மொழி பேதங்களால் விளைந்த தீய உணர்வுகள் இந்த பூமியில் படர்ந்து இருக்கின்றது. இவைகளில் இருந்து நாம் விடுபட்டு, நமது நல்ல உணர்வுகளை சுதந்திரமாக செயல்படச் செய்ய வேண்டும்.


அவ்வாறு செயல்பட்டு, தீமையற்ற உலகைப் படைப்போம். தீமையற்ற உலகத்தை முதலில், நம்மிடத்தில் உருவாக்க வேண்டும். இதைச் செய்தோமானால், பேருலகத்தையும் படைக்க முடியும்.


நாம் எதை எண்ணுகின்றோமோ, அதை படைக்கும் திறன் பெற்றது நமது உயிர். ஆகவே உயிரை ஈசனாக மதித்து, உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் சிகரமாக்குவோம்.


நம் முன் படர்ந்து கொண்டிருக்கும் தீய உணர்வுகள், நமக்குள் ஊடுருவ இடம் கொடுக்காது, துருவ நட்சத்திரத்தின் துணைகொண்டு, அதனைக் கடலுக்கு துரத்தியடிக்க வேண்டும்.


ஏனென்றால், தீய உணர்வுகளை ஈர்ப்பதற்கு இடமில்லையென்றால். அது, வேறு வழி இல்லாது, இறுதியில், கடலின் ஈர்ப்பிற்கு சென்று மறைந்துவிடும்.


இவ்வாறு, இனி தீய உணர்வுகளுக்கு, இங்கு இடமில்லை என்று செய்வோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இவ்வுலகமெங்கும் படரச் செய்வோம். அனைவரிடத்திலும் பகைமையை நீக்குவோம். மத, இன, மொழி, அரசியல் பேதங்களை அகற்றுவோம். அனைவரும் ஒன்றுபட்டு வாழ, எல்லா மகரிஷிகளின் அருளை வேண்டி, பிரார்த்திப்போம். இவ்வுலகில் அமைதி படர்ந்து, அனைவரும் “பிறவா நிலை எனும் நிலை” எய்த வேண்டும், என்று எண்ணி நாம் தவமிருப்போம்.


இதன் வழியில், மகரிஷிகளின் அருள் வழியைப் பின்பற்றி, செயலாக்கி வரும், அனைவருக்கும் எமது ஆசீர்வாதங்கள்.




(டிசம்பர் 1994)
இன்று விஞ்ஞானிகள், ஒலி அலைகளை காந்த அலைகளாக மாற்றி, அதனை ஒலி நாடாவில், காந்த வடிவில் பதிவு செய்கின்றனர். மின் காந்த அலைகளை விரிவு படுத்தி, ஒலி அலைகளாக வெளிப்படுத்துகின்றான்.
அதே போன்றுதான் நமது உயிர்,
காந்தப் புலனை ஈர்க்கக் கூடிய நிலையும்,
காந்தப் புலனை உருவாக்கக் கூடிய நிலையும்,
காந்தப் புலனை தனக்குள் பெருக்கும் நிலையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஆகவே, அதற்கு ஈசன் என்று பெயரிட்டனர் ஞானிகள்.


காருக்குள் “இஞ்சின் இயக்கம்” எப்படி முக்கியமோ, அவ்வளவு முக்கியம் நம் உடலுக்குள் “உயிரின் இயக்கம்”.


பரிணாம வளர்ச்சியில் நாம் வளரும் பருவத்தையும், நமக்குள் வளர்க்கும் நிலையையும் அறிந்து கொள்வதற்காக, மெய்ஞானிகள் உயிருக்கு “ஈசன்” என்று பெயரிடுகின்றார்கள். “உருவாக்கும் திறன்” நமக்குள் இயங்கிக் கொண்டே உள்ளது.


ஒரு மோட்டாருடன் இணைக்கப்பட்ட இயந்திரங்கள், எதன் பணிக்காக அமைக்கப்பட்டு உள்ளதோ, அதனதன் பணிகளை அது அது செய்கின்றன. அது போன்றுதான், உலகின் இயற்கையின் தன்மைகள், எது எது அதனுடன் இணைகின்றதோ, அந்த உணர்வின் செயலாக அது அது இயங்குகின்றது என்பதை மெய்ஞானிகள் அறிந்திருந்தனர்.


உயிரான ஈசனின் துடிப்பால், வெப்பம் ஏற்படுகின்றது. நெருப்பின் மீது பாத்திரத்தை வைத்து, அதனுள் நீரை ஊற்றி, மேலும் அதனுள் எப்பொருள்களை போடுகின்றோமோ, அப்பொருள்கள் அனைத்தும் நெருப்பின் வெப்பத்தால் ஒன்றோடு ஒன்று இணைந்து, புதுப் பொருளாக, குழம்பாக மாறுகின்றது.


அது போன்று, உயிரின் துடிப்பால் ஏற்படும் வெப்பத்தின் காரணமாக, ஈர்க்கும் சக்தி அங்கே உருவாகின்றது.


நமது எலும்புகள் அனைத்தும் மேக்னட் (காந்தம்) தன்மை கொண்டது, அதாவது, ஒலி அலைகளை காந்தப் புலன்களாக மாற்றி, ஒலி நாடாவில் பதிவு செய்வதைப் போன்றது. உயிரின் துடிப்பால் இயக்கப்படும் பொழுது, அது காந்தப் புலனை இயக்க, அதனின் தொடர் வரிசையில் அது இயக்குகின்றது.


இந்த உணர்வின் தன்மை நமக்குள் இயக்கப்படும் பொழுது, உயிரின் இயக்கத்தால் எதனின் உணர்வின் தன்மையை நாம் பார்க்கின்றோமோ, கண்களில் உள்ள காந்தப் புலன் அதைக் கவர்கின்றது. ஆனால் அதே சமயத்தில் கண்ணுக்குள் இருக்கக் கூடிய கருவிழி மற்றொன்றை படமெடுக்கின்றது.


அது நமது எலும்புக்குள், “ஊனாக” உருவாகின்றது. ஆக அதைப் பதிவு செய்து கொள்கின்றது. அந்த உணர்வின் தன்மையை, தனது ஆன்மாவாக மாற்றிக் கொள்கின்றது.


இவ்வாறு ஆன்மாவாக மாறியது, எப்படி ஒலி நாடாவில், நாம் பதிவு செய்து கொள்கின்றோமோ, அந்தப் பதிவின் அலைகள் வரிசையில் வரும்.


பின் நம் உயிரின் காந்தப் புலன், சுவாசத்தால் அதைக் கவர்கின்றது. இந்த உணர்வின் அலைகளை இயக்குகின்றது. உடல் முழுவதும் இந்த அலைகளைப் பரப்புகின்றது. அதில் ஏற்படும் காந்தத்தை, உணர்வின் சத்தை உடலாக்குகின்றது. மற்ற கழிவைக் காற்றாக வெளிப்படுத்துகின்றது.


ஒரு மின் விசிறி சுழல்கிறதென்றால், அது தன் சுழற்சியின் போது, பின்புறத்தில் இருந்து காற்றை இழுத்து, முன்புறமாக தள்ளுகின்றது. அது போன்றுதான், இந்த உணர்வின் தன்மையை வடிகட்டி, உணர்வின் ஆத்மாவாக மாற்றுகின்றது.


அதனுடைய நிலைகளை, காற்றலைகளைத் தான், நாம்
“மூச்சலைகள்” (ஆன்மா) என்று சொல்கின்றோம்.
இவைகளெல்லாம், அன்று மெய்ஞானிகளால் கண்டுணரப்பட்ட பேருண்மைகள்.