Pages

தீப ஒளி திருநாள்


தீபத்தின் ஒளியால் இருள் அகன்று,
இருளில் இருந்த பொருள் தெரிவதைப் போன்று,
சப்தரிஷிகளின் அருள் உணர்வால்,
உயிரில் கலந்த, நஞ்சான இருள் அகன்று,
மெய்ப்பொருளைக் காணும் சக்தி பெறுகின்றோம்.


நாம் ஒரு தீபத்தை ஏற்றினோம் என்றால், அதிலிருந்து வரும் ஒளி அங்கு சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி, அங்கிருக்கும் பொருள்களைத் தெரியச் செய்து, அதிலுள்ள நன்மைகளையும், தீமைகளையும் அறியச் செய்கின்றது.


இது போன்றுதான், நமது ஆறாவது அறிவின் தன்மை, “கார்த்தி” என்றால், வெளிச்சம். நமது ஆறாவது அறிவிற்கு, கார்த்திகேயா, என்று பெயர். ஒளியின் சொரூபமான, நமது உயிர், நமக்குள்ளிருந்து, நன்மை தீமைகளை அறியச் செய்து, நன்மைகளை நாடச் செய்கின்றது.


நமது வாழ்க்கையில் நன்மைகளையே செய்து வந்தாலும், பிறிதொருவர் வாழ்க்கையில் வேதனைப்படுவதை, நாம் கண் கொண்டு உற்றுப் பார்க்கும் பொழுதோ, அல்லது காதால் கேட்டறியும் பொழுதோ, அவருடைய வேதனையின் உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றன. நம்முள் உள்ள, நல்ல குணங்களை வீழ்த்திவிடுகின்றன.


பல கோடி சரீரங்களைப் பெற்று, அதில், தன்னைக் காத்திடும் உணர்வினை வளர்த்து, இன்று மனிதனாகப் பிறந்திருக்கின்றோம். இப்படிப் பெற்ற இந்த மனித சரீரத்தில், வேதனையின் உணர்வுகளையும், கோப உணர்வுகளையும், வளர்க்கும் பொழுது, அது, மனிதனுக்குண்டான நல்ல குணங்களை அடிமைப்படுத்தி விடுகின்றது.


ஏனெனில், வேதனை என்பது விஷம், வலிமை மிக்கது. அது நமது தெளிந்த மனதில், இருள் சூழச் செய்துவிடுகின்றது. இதைத்தான் அசுரன் என்பது.


சண்டையிடுபவர்களை சாந்தப்படுத்துவதற்காக, நாம் நியாயங்களை எடுத்துச் சொல்வோம். ஆனால், அங்கே நல்லதை எடுத்துச் சொல்வதற்காக, சண்டையிட்டவர்களுடைய உணர்வுகளை, நாம் கேட்டறிய வேண்டியிருக்கின்றது.


அவ்வாறு, பலருடைய கார உணர்வுகளைக் கேட்டறிய நேர்வதனால், அவர்களுடைய உணர்வுகள் அனைத்தும், நம் உடலில் வந்து சேர்கின்றன.


இது போன்ற சந்தர்ப்பங்களால், நம்மிடத்தில் உண்டாகும் வெறுப்பு, வேதனை, கோபம் போன்ற உணர்வுகள், நமது உடலில் உள்ள அணுக்களில் கலந்து, இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களை உருவாக்கி விடுகின்றன.


மேலும், இந்த நஞ்சான அசுரன் வளர்ந்து, நமது கை, கால்களை முடக்கிவிடுகின்றன. மென்மேலும் நஞ்சான நிலைகள் நம்மிடத்தில் குவியும்பொழுது, அது நமது உயிரில், இருள் சூழச் செய்யும் நிலைகளாக வளர்ச்சி அடைந்துவிடுகின்றன. எனவே,
நமது ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால்,
ஒளியின் சொரூபமான உயிரை,
நஞ்சான இருள் சூழ்ந்து கொள்ளும் என்பதை அறிந்து,
ஆறாவது அறிவின் துணை கொண்டு,
மகரிஷிகளின் அருள் உணர்வை நம்முள் இணைத்து,
நம்மிடத்தில் சேரும்,
நஞ்சான நிலைகளை நீக்குவதற்கு,
நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

நஞ்சினை நீக்கி, உணர்வினை ஒளியாக்கி, இன்றும் விண்ணுலகில் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார், துருவ மகரிஷி. அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள், இன்றும் பூமியில் படர்ந்து, பரவிக் கொண்டுள்ளன.


அவரிடமிருந்து வெளிப்படும், உணர்வின் அலைகளைத் தனக்குள் கவர்ந்து வளர்த்துக் கொண்டவர்கள் இன்று, ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக்கி, உயிரில் உணர்வினை ஒளியாக்கி, சப்தரிஷி மண்டலங்களாக, வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள். அவர்களிடமிருந்து, அவர்களுள் விளையவைத்த உணர்வின் அலைகள் வெளிப்பட்டு, இந்த பூமியில் படர்ந்து பரவிக் கொண்டுள்ளது.


அவரகளின் ஆற்றல் மிக்க சக்தியை, நாம் எண்ணத்தால் கவர்ந்து, நம் உயிரில் இணைக்கும் பொழுது, மகரிஷிகளின் ஆற்றல் மிக்க உணர்வுகள் நம்முள் அறியாது சேர்ந்த, நஞ்சான உணர்வை, அசுரனை, உயிரில் இருள்சூழும் நிலையினைப் பிளக்கின்றன.


உயிர் சுடரின் ஒளியினை, வளர்க்கின்றன.
இதனை நினைவுபடுத்தும் விதமாக,
ஞானிகளால் உருவாக்கப்பட்டது தான்,
“தீபாவளி” திருநாள்.