யாம், நமது குருநாதர் காண்பித்த அருள்வழி கொண்டு, பல ஊர்களுக்கும் சுற்றுப் பிரயாணம் செய்து கொண்டிருந்த சமயம், எமது தாய், வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருந்து கொண்டிருந்த பொழுது, குருநாதர் அதை எமக்கு உணர்த்தி, “உனது அம்மாவைப் பழைய நிலைகளுக்குச் செல்லும்படி விட்டுவிடாதே,
அவர்களை முதலில் விண் செலுத்த வேண்டும்,
அதன் பிறகுதான், நீ விண்ணுக்குப் போக முடியும்”
என்று நினைவுபடுத்தினார்.
ஆகையால், எமது தாயைச் சந்திக்கச் சென்றோம். அங்கு அவர்களைப் பார்க்கும் பொழுது, அவர்களால் சாப்பிட முடியவில்லை, கண் பார்வை முழுவதும் மங்கிவிட்டது, உடல் வீங்கியிருந்தது, எழுந்திருப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டார்கள்.
யாம் அது சமயம், சாமியம்மா அவர்களையும் உடன் அழைத்துச் சென்றிருந்தோம். ஆகையால், எமது தாய், சாமியம்மாவை, ‘வீரம்மா’… என்று பெயர் சொல்லி அழைத்து, “ஒரு முட்டையை எடுத்து வேக வைத்து, இரண்டு மிளகு, சிறிது உப்பு வைத்து என் நாக்கில் வை… வீரம்மா” என்றார்கள்.
ஏனென்றால், எமது தாய் முட்டை, கோழிக்கறி போன்றவைகளை விரும்பிச் சாப்பிடுவார்கள். யாமும், முன்பு முட்டை, கோழி என்றெல்லாம் சாப்பிட்டோம்.
எமது தாயால், அந்த இறுதிக் கட்டத்தில் சாப்பிடவே முடியாது. ஆனால், “வேக வைத்த கோழி முட்டையில், இரண்டு மிளகும், சிறிது உப்பும் வைத்துக் கொண்டுவா” என்றால்,
எமது தாயின் நினைவு எங்கிருக்கிறது?
கோழியின் மேல்தான் இருக்கின்றது.
இதைத்தான், குருநாதர், “உனது அம்மா முட்டையும், கோழி கறியும் நிறையச் சாப்பிட்டிருப்பார்கள், அதனின் அணுக்கள் அவர்கள் உடலில் விளைந்திருக்கின்றது” என்று கூறினார்.
எமது தாய்க்கு உதவியாக, சாமியம்மாவை இருக்கச் செய்துவிட்டு, யாம் தாரமங்கலம் வந்துவிட்டோம். ஏனென்றால், யாம் தாரமங்கலம் வருவதாக உரைத்து, ஊர் முழுவதும் விளம்பரமும் செய்துவிட்டார்கள். இதனால், தாரமங்கலத்திற்குத் தவிர்க்க முடியாமல் வரவேண்டியதாகி விட்டது. சேலத்தில் உள்ள அன்பர்களிடம் இந்தச் சூழ்நிலையைச் சொல்லிவிட்டுத் தாரமங்கலம் வந்துவிட்டோம்.
சேலத்து அன்பர்கள் தாரமங்கலம் அன்பர்களிடம், “ஞானகுரு அவர்களின் தாயின் உடல்நிலை மிகவும் குன்றியிருக்கிறது, ஆகவே, ஏதேனும் தகவல் வந்தால், ஞானகுரு அவர்களை உடனே வழியனுப்பி வையுங்கள்” என்று கூறியிருந்தார்கள்.
தாரமங்கலத்தில், யாம் கூட்டத்தில் உபதேசம் கொடுத்து முடித்து, தியானத்தில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது, எமது தாயின் ஆன்மா வெளிவருகின்றது.
அது சமயம், எமது குருநாதர் சொன்னது போன்று, எமது தாயை மனதில் நினைத்து, தியானம் செய்தோம். அப்பொழுது, அதனின் உணர்வின் நிலைகள் அங்கே தெரிந்தது. கூட்டத்தில் இருந்தவர்கள், யாரோ ஒரு பெரியம்மா போகின்றார்கள் என்றார்கள்.
இது, தாரமங்கலத்தில் நடந்த சம்பவம். அம்மாவின் உருவம், அதனின் உடைகள், அதனின் உணர்வுகள் அங்கே தெரிந்தது. அப்பொழுது, எமது தாயின் உயிரான்மாவை, சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தோம்.
எமது தாயின் உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து, உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்தபின்தான், அந்த உணர்வின் சக்தியின் துணை கொண்டு, சப்தரிஷி மண்டலங்களின் ஒளிகாந்த சக்தியினை, யாம் பெற முடிந்தது. அது வரையிலும், எம்மால் பெற முடியவில்லை.
அதுவரையிலும், எந்த ஒரு உயிரான்மாவையும் விண்ணிற்கு ஏற்ற முடியவில்லை. அன்னை, தந்தையின் உணர்வுகள் உனது உடலில் இருப்பதனால், அவர்களின் உயிரான்மாக்களை முதலில் விண்ணிற்கு ஏற்றவேண்டும், என்பதை எமது குருநாதர் எமக்கு உரைத்தார்.
“நான் உனக்கு குருவாக இருக்கலாம்,
அருள்ஞான உணர்வின் தன்மையை வளர்க்கலாம்.
அதனால், உன் அன்னை, தந்தையை விண்ணிற்குச் செலுத்த முடியும்.
அதன் உணர்வின் தன்மை கொண்டுதான்,
என்னையும் அங்கே அழைத்துச் செல்லமுடியும்” என்று குருநாதர் உபதேசித்தார்.
குருவாக்குத் தப்புவதில்லை, நாம் சாதாரண மனிதராக இருக்கின்றோம், என்று நினைக்கின்றோம்.. அது சமயம்தான், எமது தாயின் உயிரான்மாவை விண்ணிற்கு ஏற்றினோம். எமது தந்தையின் இறப்பின் பொழுதுகூட, யாம் அவர் அருகில் இல்லை.
அது சமயம், கரூரில் கால் நடையாகச் சுற்றிக் கொண்டிருந்தோம். இராஜபாளையத்திலிருந்து, கரூருக்கு கால் நடையாக வந்திருந்தோம். அது சமயம்தான், எமது தந்தையின் உயிரான்மா, உடலை விட்டுப் பிரிகின்றது. அப்போது, அதனின் உணர்வுகள் காட்சிகளாகத் தெரிந்தது. அருகே, ஒரு இடத்தில் போய் அமர்ந்தோம்.
அங்கே, ஏற்கனவே அறிமுகமான ஒருவர் இருந்தார். அந்த நேரத்தில், அவருக்கும் காட்சி தெரிந்தது. “ஐயோ, உங்கள் அப்பா போகிறாரே” என்றார், அருகிலிருந்த இன்னொருவர், “யாரோ ஒரு பெரியவர் போகிறார்” என்று சொன்னார். யாம் அங்கேயே அமர்ந்து, எமது தந்தையின் உயிரான்மாவை விண்ணிற்கு அனுப்பினோம்.
எம்மை ஈன்றெடுத்த தாய், தந்தைதான், எமக்குக் கடவுள். எம்மை மனிதனாக உருவாக்கியவர்கள் அவர்கள்தான், அதன் துணை கொண்டுதான், குருநாதர் காண்பித்த அருள்வழியில், அவர்களை விண் செலுத்தினோம்.
முதலில், எமது தந்தை விண் சென்றார். இருந்தாலும் எமது தாயையும் விண்ணிலே சேர்த்து, சிவசக்தியின் உணர்வுகளாக அங்கே வளர்க்கச் செய்யவேண்டும். அப்பொழுதுதான், ஒளியின் சரீரமாக வளர்க்க முடியும், என்று குருநாதர் உணர்த்தினார்.
அதன் பிறகு, இதன் உணர்வின் ஒளிகொண்டு, உன்னுடைய உணர்வுடனே வருகின்றேன். உணர்வின் ஒளியை உணர்த்துகின்றேன். என்னை விண்ணில் செலுத்திவிடு, உணர்வின் ஒளியாக இயக்கிவிடு என்று, குரு சொன்ன வாக்கின்படி, எம் அன்னை தந்தை விண் சென்றபின்தான், குருவின் உணர்வின் ஒலிகளை, அவர் காண்பித்த அறநெறிகள் கொண்டு, அவர்களையும் விண்ணிற்குச் செலுத்தும் நிலையாக, சில நிலைகளைச் செய்தோம்.
உடலை விட்டு பிரிந்த ஆன்மாக்களை, விண் செலுத்துவதற்காக, விண்ணின் ஆற்றலின் உணர்வின் தன்மையைப் பெறுவதற்கு, எம்மை கேதார்நாத், பத்ரிநாத் போன்ற இடங்களுக்குப் போகுமாறு செய்தார் குருநாதர்.
அங்கே, கடும் தவம் இருந்த ஆன்மாக்கள் உணர்வின் தன்மை எடுத்து, தம் உணர்வுக்குள் ஒளியாக மாற்றியது எப்படி? என்பதை, எம் அன்னை தந்தையை விண்ணிற்கு உயர்த்தியபின்தான், யாம் பேருண்மையின் உணர்வுகளை அறிய முடிந்தது. ஆகவே, இன்றைய நிலைகளில், யாம் உங்களுக்கு உபதேசிப்பது அனைத்தும், பேருண்மையின் உணர்வுகள்.
அருள் ஒளியின் உணர்வுகளை, உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் முன்னோரின் உயிரான்மாக்கள் இன்னோரு உடலுக்குள் சென்றிருந்தாலும், பரவாயில்லை.
நீங்களும், உங்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களும், ஒன்றாக துருவ தியானத்திலும், பௌர்ணமி நாட்களிலும் தியானத்தில் அமர்ந்து, எங்களுடன் வாழ்ந்து, வளர்ந்து, உடலைவிட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலத் தெய்வங்களான முன்னோரின் உயிரான்மாக்கள், சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும். உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் பேரின்பப் பெருவாழ்வு பெறவேண்டும் என்று எண்ணி, ஏங்கி தியானிக்க வேண்டும்.
முன்னோர்கள் பாசத்துடன் உங்களைக் காத்தார்கள். ஆகவே, அவர்களை விண் செலுத்தினால், அவர்களுடைய உணர்வின் தொடர், உங்களுக்குள்ளும் வரும்.
அவர்கள் விண்ணில் இருக்கப்படும் பொழுது, உங்களுடைய எண்ணத்தை அங்கே செலுத்தினால், சப்தரிஷிகளின் அருள் சக்தியை, ஆறாவது அறிவின் துணை கொண்டு, ஏழாவது நிலையை அடைந்தவர்களின் அருள் சக்தியை நீங்கள் எளிதில் பெறமுடியும்.
உங்களை வளர்த்து வழிகாட்டிய உணர்வுகள் நிலைக்கின்றது. இதனின் உனர்வின் தன்மை கொண்டு, உங்களுள் உணர்வின் ஒளியாக மாறுகின்றது. இதன் உணர்வின் தன்மையை, நீங்கள் எளிதில் பெறமுடியும். உங்களை நம்புங்கள். இதன் வழி செயல்படும் அனைவருக்கும், எமது அருள் ஆசிகள்.
(ஆகஸ்ட் 1998)
ஆன்மா நலம் ஆனால் எண்ணம் நலமாகும்
ஆன்மா நலம் ஆனால் சொல் நலமாகும்
ஆன்மா நலம் ஆனால் செயல் நலமாகும்
ஆன்மா நலம் ஆனால் உடல் நலமாகும்
ஆன்மா நலம் ஆனால் உயிரான்மா நலமாகும்
ஆத்மசுத்தி செய்வோமானால் ஆன்மா நலமாகும்.
ஒரு நூலுக்கு வலு குறைவு. பல நூலை ஒன்றாக திரித்து, கயிறாக மாற்றும் பொழுது அதனின் வலு கூடுகின்றது. இதைப் போன்று, நாம் அனைவரும் மகரிஷிகளின் அருளுணர்வின் வலிமையை நமக்குள் ஏற்றிக் கொண்டு, நம்முடன் வாழ்ந்து, வளர்ந்து, உடலைவிட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை, சப்தரிஷி மண்டலத்திற்கு உந்தித் தள்ளவேண்டும்.
அப்படியில்லாது, நாம் சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்வதற்கு, வேறு மார்க்கம் கிடையாது.
எவருக்கோ காசு கொடுத்து, முன்னோரை மோட்சத்திற்கு அனுப்புவேன் என்றால், அது முடியாது. நீங்கள்தான், உங்கள் உணர்வின் துணைகொண்டு, அருள்ஞானிகள் காண்பித்த அருள்வழி கொண்டு, மூதாதையர்களின் ஆத்மாக்களை விண்செலுத்த வேண்டும்.
ஒருவர் உங்களுடன் வாழ்ந்து, பின், உடலை விட்டுப் பிரிந்திருந்தால், 1 - லிருந்து 48 நாட்களுக்குள் அந்த ஆன்மாவைக் குறித்து, மகரிஷிகளின் அருள் உணர்வின் துணை கொண்டு, அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எண்ணி, தியானித்தல் வேண்டும்.
ஒரு இராக்கெட், உந்து விசையின் ஆற்றலால் விண்ணில் தன் எல்லையை அடைகின்றது. பின், அங்கிருந்து தான் கவரும் உணர்வுகளைத் தரை மார்க்கத்திற்கு அனுப்புகின்றது.
நட்சத்திரங்கள், விண்ணின் ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து, பெருக்கி, விஷத்தன்மை கொண்ட கதிரியக்கப் பொறிகளை உருவாக்கும், வல்லமை பெற்றது. இப்படி உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள், மற்ற பொருள்களுடன் கலந்து, புவிக்கு வருகின்றது. இவைகளைத்தான் விஞ்ஞானி பிரிக்கின்றான், சக்தி வாய்ந்ததாக இணைத்து, இராக்கெட்டில் ஏவுகின்றான்.
உணர்வின் அதிர்வுகளில் இருக்கும் மின்னணுவின் கதிர்களை, தனியாகச் சேமிக்கின்றான். உணர்வின் அதிர்வுகளை அதற்குள் இணைக்கின்றான். எப்படி, மின்னல், ஒளியாக்கும் உணர்வுகளை பூமிக்கு அழைத்து வருகின்றதோ, இதைப் போன்று, அது இயக்கும் தன்மை கொண்டு இங்கே ஈர்க்கப்பட்டு, அந்த உணர்வின் தன்மை கொண்டு, விண்ணின் ஆற்றலை அறிகின்றான் விஞ்ஞானி.
இதைப் போன்றுதான், நம்முடைய முன்னோரின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தல் வேண்டும். ஆனால், சாதாரணமாக சொல்லிக் கொண்டிருந்தால், போக முடியாது.
முதலில், உங்களிடத்தில் அருள் ஞானத்தின் நினைவாற்றலைப் பெருக்குதல் வேண்டும். அதனின் உணர்வாக, ஏங்கித் தியானிக்க வேண்டும்.
இதன் உணர்வின் வலுவின் துணைகொண்டு, நம்முடன் வாழ்ந்து, வளர்ந்து, உடலைவிட்டு பிரிந்து சென்ற உயிரான்மாக்களை, இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் பரவாயில்லை, நாம் தொடர்ந்து தியானிப்பதன் மூலம், அந்த உயிரான்மா இன்னொருவரின் உடலை விட்டு வந்தபின், விண் செலுத்தி, இன்னொரு உடல் பெறாத நிலைகளை உருவாக்கலாம்.
இன்றைய நிலைகளில், முன்னோர்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தியபின், அதன் வழி தொடர் கொண்டுதான், நாம் விண்ணின் ஆற்றலைப் பெறமுடியும்.
மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்திய பின், அதன் உணர்வின் துணை கொண்டு உங்கள் குடும்பத்தில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு, அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் துணை கொண்டால், உங்களை, அங்கே அழைத்துச் செல்கின்றது, உங்களுடைய உயிர்.
அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, யாம் உங்களுக்குள் பதிவு செய்ததன் நிலை கொண்டு, அருள் மகரிஷிகளின் அருளை எண்ணி, உங்களுடைய மூதாதையர்களின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யுங்கள், உடல் பெறும் உணர்வைக் கரையச் செய்யுங்கள்.
இன்றைய காலத்தில், குலதெய்வங்களை வணங்கும் முறைகள் அனைத்தும், அரசர்கள் காண்பித்த நிலைகளிலேயே தொடர்கின்றது. முதல் மூலக் குலதெய்வம், எதுவென்று கேட்டுப் பாருங்கள்? சொல்வார்கள், தீயில் மாண்டவர், எங்களுக்கு குலதெய்வமாக இருந்து, உதவிகளைச் செய்கின்றார் என்று கூறுவார்கள்.
அரச காலத்தில், அரசர்கள் தாங்கள் போர்களுக்குச் செல்லும் பொழுது, மந்திரங்களைக் கையாள்வார்கள். கூட்டமைப்பாகப் போர்களுக்குச் செல்லும் பொழுது, அதில் யாராவது ஒருவர், தங்கள் குழந்தையைக் கொடுத்து உதவி செய்வார்கள். அதனுடைய தாய், தந்தையரும் அங்கு இருப்பார்கள். இவர்களை, குலதெய்வங்களுக்கு தாய் என்று கூறுவார்கள்.
இத்தகைய நிலைகளில் அவர்களை வளர்த்து, அதற்கு என்னென்ன சாங்கியங்களோ அதைச் செய்து, அதற்கிணையான உணர்வுகளையும் கொடுத்து, பழி தீர்க்கும் எண்ணங்களையும், எதிரிகளை வீழ்த்தும் முறைகளையும் அவர்களுடைய உணர்வில் ஏற்றுவார்கள். அதன்பின், அவர்களைத் தீயில் எரித்து, இந்த மந்திர ஒலிகளில் எடுத்து ஏவல், பில்லி, சூன்யம் என்று, எதிரிகளின் மேல் பாய்ச்சுவார்கள்.
படைகளுக்குத் தலைமை தாங்கியவர்கள், அவர்களுடைய குல வழியில் நிறையப் பிரிக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, ஆக, ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு குலதெய்வம் என்ற நிலையாகிவிட்டது.
அதிலிருந்து பிரிக்கப்பட்ட உணர்வுகள்தான், சாதாரண மனிதனுக்குள் நுழைக்கப்பட்டு, இன்று நாம் குலதெய்வங்களாக வணங்கி வரும் நிலைகள். இதன் வழியில் உடலை விட்டுச் சென்றவர்களை, நாம் குடும்பப் பற்றுடன் ஈர்க்கப்படும்பொழுது, குடும்பத்தில் மீண்டும், அந்த உணர்வின் தன்மை நுழையும் பொழுது, பகைமை என்ற நிலைதான் வளர்க்கின்றது.
ஒரு சமயம் ஒரு பெண், தன் குலதெய்வத்தை வணங்கும் பொழுது, அந்தப் பெண்ணிடத்தில் அருளாடல் ஏற்பட்டு, கீழே விழுந்து, கை எலும்பு முறிந்துவிட்டது. இதனை, குருநாதர் எமக்கு,க் காண்பித்து விளக்கினார். குலதெய்வம் என்று ஆட்டம் ஆடியது. அந்தக் குடும்பத்திற்கு, அருள் வாக்கு கொடுத்தது. ஆனால், அந்த ஆன்மா கால் பிசகி, கீழே விழும் பொழுதுதான், அந்தப் பெண்ணிற்குக் கை முறிந்தது.
எல்லோரையும் காக்க வந்த அந்த ஆன்மா, முதலில், அந்த பெண்ணைக் காக்க வேண்டுமல்லவா? என்று குருநாதர் வினாக்களை எழுப்பி, இதுவெல்லாம் எந்த வழியில் நடந்து கொண்டிருக்கின்றது? என்ற நிலையைக் காட்சிபூர்வமாகக் காண்பித்து, இந்த உணர்வுகள், எப்படி தொடர் வரிசை கொண்டு இங்கே புகுகின்றது, அவர்களுடைய எண்ணங்கள், எப்படி இங்கே செயல்படுகின்றது? என்ற நிலையைத் தெளிவாக காண்பித்தார்.
மனிதன் ஒருவன் இறந்தபின், அவனுடைய நிலை என்னவென்று நீங்கள் அறிதல் வேண்டும். இதனின் நிலைகளை, நாம் கண்கூடாகவும் பார்க்கின்றோம். ஒருவன் உடலில் ஆவி புகுந்தபின், ஆவியை விரட்டுகிறோம் என்று, என்னென்னவோ செய்கின்றனர். ஆனால், முடிவதில்லை.
மனித உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா, இன்னொரு உடலுக்குள் புகுந்து, கொன்றிடும் நிலையும், புசிக்கும் நிலையும் அடைகின்றது. மனிதனின் உணர்வுகள் இப்படித்தான் மாற்றப்பட்டு, தேய்பிறை என்ற நிலைக்கே செல்கின்றது. ஆகவே, மனித வாழ்க்கையில், நாம் மீண்டும் தேய்பிறை என்ற நிலைக்குச் செல்லாது, நம் உணர்வுகளை அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில், செலுத்த வேண்டும்.
தியானவழி அன்பர்கள் அனைவரும், ஒருவருக்கொருவர், இதைப் போல தியானத்தைக் கடைப்பிடித்து, மூதாதையர்களின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து, உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்திடும் நிலையைப் பழகவேண்டும்.
இதன் தொடர்கொண்டு, நம்முடைய எண்ணங்களும், அங்கே துரித நிலையில் செல்கின்றது. விண்ணின் ஆற்றலை நம்முள் கவர்ந்து, நம் இரத்த நாளங்களில் பெருக்க உதவுகின்றது.
ஆகவே, இதன்வழி கொண்டு, நாம் மூதாதையர்களின் உயிராத்மாக்களை, விண் செலுத்துவோம். விண் சென்ற மூதாதையர்களின் அருள் துணை கொண்டு, நாம் நம்முள் விண்ணின் ஆற்றலைப் பெறுவோம். நாம் நம்முள் அறியாது சேர்த்த இருளை அகற்றுவோம். உடல் பெறும் உணர்வை நீக்கி, பிறவியில்லாப் பெருநிலை பெறுவோம்.
எவரொருவர், இதன் உணர்வு கொண்டு தம்முள் உயர்ந்த உணர்வின் தன்மையை வளர்க்கின்றனரோ, அவர் சப்தரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து, தெளிந்த மனதுடன், மகிழ்ந்திடும் உணர்வுடன், தொழில் வளத்துடன், மன நலத்துடன், மன பலத்துடன், உடல் நலத்துடன் வாழ்ந்து, மரணமில்லாப் பெருவாழ்வு என்ற, பெருவீடு பெருநிலையைப் பெறும் தகுதியைப் பெற்று, எல்லாக் காலத்திலும் பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருள் ஆசிகள்.