ஜோதிடத்தில் குரு
குரு காரகத்துவம்
தனம், புத்திரோற்பத்தி, சமூக அந்தஸ்து, ஆன்மீக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரிகள் கட்டுதல், வங்கி, அரசு கஜானா போன்ற இடங்களில் வேலை கிடைத்தல் நிதி, நீதித்துறையில் பணிபுரிவது, நீதிபதி, அரசு உயர்பதவிகள் போன்றவற்றை அளிக்கும் வல்லமை உடையவர் குரு பகவான். அறிவு, ஞானம் போன்றவற்றிற்கு மூலகாரணமும் இவரேயாவார். தென் தமிழ்நாட்டில், திருமண வயதில் உள்ள பெண்ணின், பையனின் ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டி எப்பொழுது வியாழ நோக்கம் வரும்? என்று கேட்பார்கள். அதாவது, கோட்சாரத்தில் வியாழபகவான் குடும்ப ஸ்தானத்தைப் பார்த்தால் திருமணத்திற்கு உரிய சிறந்த நேரம் வந்துவிட்டது என்று பொருள், டும் டும் கொட்ட வேண்டியதுதான். அதனைத்தான் வியாழநோக்கம் என்று கூறுவார்கள்.
குரு தசா
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் ஜனித்த ஜாதகருக்கு தொடக்க தசையாக குரு தசை வரும். குரு தசை மொத்தம் 16 வருடங்கள். தொடக்க தசையாக வரும்போது பெரும்பாலும் 16 வருடத்தை விட குறைவாகவே வரும். இடையில் வரும் தசையாக இருந்தால், 16 வருடம் முழுமையாக வரும். மேற்கூறிய நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை, நட்சத்திரத்தை எவ்வளவு பாகம் கடந்துள்ளதோ அவ்வளவு விகிதம் தசையில் கழிவு ஏற்படும். அதனை ஜோதிடத்தில் ”கர்ப்பச்செல்” என்று குறிப்பிடுவார்கள். குரு தசையில் குரு – காரகத்துவம் என்ற தலைப்பில் கூறப்பட்ட விஷயங்கள் ஜாதகருக்கு பலன்களாக நடைபெறும், மேலும் ஜாதகரின் ஜென்ம லக்கினத்தைப் பொறுத்து, பாவ (Bhava) அடிப்படையில், குரு தரும் பலன்களும் நடைபெறும்.
இனி ஜோதிட ரீதியாக குருவின் பயோடேட்டாவை பார்க்கலாம்.
குரு - பயோடேட்டா
ஆட்சி பெறும் ராசி
தனுசு, மீனம்
உச்சம் பெறும் ராசி
கடகம்
நீச்சம் பெறும் ராசி
மகரம்
நட்பு பெறும் ராசிகள்
மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம்,
சமம் (நியூட்ரல்)
கும்பம்
பகை பெறும் ராசிகள்
ரிஷபம், மிதுனம், துலாம்
மூலத்திரிகோணம்
தனுசு
சொந்த நட்சத்திரம்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
திசை
வடக்கு
அதிதேவதை
பிரம்மன்
ஜாதி
பிராமணன்
நிறம்
மஞ்சள்
வாகனம்
யானை
தானியம்
கடலை
மலர்
முல்லை
ஆடை
மஞ்சள், பொன்னிறம்
ரத்தினம்
புஷ்பராகம்
செடி / விருட்சம்
அரச மரம்
உலோகம்
தங்கம்
இனம்
ஆண்
அங்கம்
இதயம்
நட்பு கிரகங்கள்
சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை கிரகங்கள்
புதன், சுக்கிரன்
சுவை
இனிப்பு
பஞ்ச பூதம்
நெருப்பு
நாடி
வாதம்
மணம்
ஆம்பல்
மொழி
சமஸ்கிருதம், தெலுங்கு
வடிவம்
உயரமானவர்
குருவுக்குரிய கோயில்
திருச்செந்தூர், ஆலங்குடி
குருவருள் கிடைக்க
ஆன்மீகத்தில் உயர்நிலையை அடைய, மனதை ஒருமுகப்படுத்தி, தியானத்தில் வெற்றி பெற, குடும்பத்தில் தனலாபம், புத்திரச் செல்வம் போன்றவற்றை அடைய, பிள்ளைகள் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல், நல் வழியில் நடக்க, திருமண வயதை அடைந்த பின்னும் திருமணமாகாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் இனிது நடை பெற, தங்கு தடையின்றி கோவில் திருப்பணிகள் நிறைவேற குருவின் அருள் வேண்டும். இதற்கு, ஜோதிட ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் பின்வரும் நற்செயல்களை செய்து, குருவின் அருளைப் பெறலாம்.
· வியாழக்கிழமைகளில், பகலில் விரதம் இருந்து, மாலையில் சிவன் கோயிலுக்கு சென்று, தட்சிணா மூர்த்தியை வழிபடுவதன் மூலம் குருவின் அருளைப் பெறலாம்.
· வியாழக்கிழமைகளில், கொண்டக் கடலை சுண்டல் செய்து, பக்தர்களுக்கும், ஏழைகளுக்கும் தானம் செய்வதாலும், குரு பகவானின் அருளைப் பெறலாம்.
· ஒரு ஏழைப் பெண்ணின் பிரசவ செலவை ஏற்பதன் மூலமும், குருவின் அருளைப் பெறலாம்.
· ஒரு ஏழைக் குழந்தையின் கல்விச் செலவை ஏற்பதன் மூலமும், குருவின் அருளைப் பெறலாம்.
· தாங்கள் படித்த பள்ளியின் ஆசிரியர் எவரேனும், ஓய்வு பெற்றவர் இருப்பின் அவரைத் தேடிச் சென்று வணங்கி, அவருக்கு ஏதேனும் உதவி தேவைப்படின் செய்து, ஆசி பெறுவதால், குருவின் அருளைப் பெறலாம்.
· வியாழக்கிழமை மாலை வேளைகளில், வீட்டில் தீபத்தின் முன் அமைதியாக உட்கார்ந்து குருவே துணை என்று 108 முறையோ 1008 முறையோ அல்லது அதற்கு மேலோ மனதில் சொல்லி வந்தால் போதும், தங்கள் மனக்குழப்பத்தை தீர்த்து, குடும்பத்தில் அமைதியை நிலவச்செய்வார்.
· சிவனை வழிபடுபவர்கள் எனில் வேதத்தில் சொல்லப்பட்ட பஞ்சாட்சர மந்திரமான “ஓம் நமசிவாய” என்ற மூல மந்திரத்தை மனதில் தியானித்தால் மௌன குருவான சிவனே, உங்களுக்கு வழித்துணையாக வருவார், இது உறுதி !
எல்லாம் சிவமயம் !! அன்பே சிவம் !!
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்!