லலிதா பரமேஸ்வரியின் சேனாதிபதியாக வழிபடப்படுபவள், பகளாமுகி தேவி. இவளுக்கு தண்ட நாதா என்றும் தண்டினி என்றும் பெயர்கள் உண்டு. தஸமஹா வித்யாவில் எட்டாவது அம்சமாய்த் திகழ்கிறாள் இவள்.
கிருதயுகத்தின் தொடக்கத்தில் ஒரு மகாப் பிரளயம் ஏற்பட்டது. நான்கு புறங்களிலும் கடல் பொங்கி சூறாவளிக் காற்றுடன் பெருமழை பெய்தது. அதனால் கடலில் யோக நித்திரை கொண்டிருந்த திருமால் பரமேஸ்வரனைத் துதிக்க, பரமேஸ்வரன் பகளாமுகியின் மூல மந்திரத்தை நாரணனுக்கு நல்கினார்.
நாரணன் நாவில் பகளாமுகி மந்திரம் உருவேறிற்று. அண்ணனின் அன்பான ஜபத்தால் அகமகிழ்ந்த அன்புத் தங்கை சௌராஷ்டிர பிரதேசத்தில் உள்ள மஞ்சள் நீர் நிரம்பிய தீர்த்தத்தில் நீராடி ‘ப்ரஹ்மாஸ்த்திர ரூபிணி’யாய் ஆவிர்பவித்தாள். இவள் மூவுலகையும் ஸ்தம்பிக்க வைக்கும் சக்தியுடையவளாய் இருந்ததால் சூறாவளியும் கடல் கொந்தளிப்பும் நின்றன. அனைத்தையும் ஸ்தம்பிக்க வைக்கும் சக்தி தேவிக்கு இருந்ததால் தேவர்கள் இவளை ‘ஸ்தம்பினி’ எனப்போற்றினார்கள். நாரணனுக்கு பகளாமுகி மந்திரத்தை உபதேசித்த தமோ குண வடிவினனான மகாதேவனே ஆராதிக்கும் பகளாமுகி தேவி மிகச் சிறந்த சக்தி படைத்த தேவியாவாள்.
இவள் இருந்த இடத்திலிருந்தே அனைத்தையும் ஸ்தம்பனம் (நிறுத்தச்) செய்பவள். வல்கா என்றால் லகான் என்று பெயர். வாக்குக்கு லகான் போட்டு நிறுத்தும் சக்தி உடையவள் வல்காமுகி. வல்காமுகியே ‘பகளாமுகி’யானாள்.
அம்ருதக் கடலின் மத்தியில் நவமணிகளால் ஆன மாளிகையில், ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்தவள். தங்கத்தைப் பழிக்கும் திருமேனி கொண்டவள். வைர, வைடூர்யங்களாலான அணிகலன்களை அணிந்து ஒளி வீசுபவள். அடியார்க்கு சாந்தமும் அல்லார்க்கு பயமும் காட்டும் முகத்தினள். வானவில் போன்ற புருவத்தைக் கொண்டவள். ஒரு திருக்கரம் எதிரியின் நாக்கைப் பிடித்துக் கொண்டும் மற்றொரு திருக்கரம் அபயம் தரித்தும் மற்ற இரு திருக்கரங்களில் முத்கரம், வஜ்ராயுதம் ஏந்தியும் அருட்கோலம் காட்டுபவள். இத்தேவியின் தேஜோமயமான திருமுக மண்டலத்தை ‘தவளானன ஸுந்தரி’ என்றும் சந்த்ர பிம்பம் போன்று இருப்பதை ‘இந்து பிம்பானனா’ என்றும் மந்திர சாஸ்திரங்கள் பரக்கப் பேசுகின்றன.
வேதங்கள் ‘ஹிரண்ய வர்ணாம்’ என இவளைத் துதிக்கின்றன. தங்க நிறம் முற்றி தன் பொலிவைக் குறைத்தால் மஞ்சள் நிறமாக மாறுகிறது. உலகியலிலும் மீதி வர்ணங்களின் பிரகாசம் குறைய மஞ்சள் வர்ணம் சேர்வதை நாம் கண்டுள்ளோம். அதன்படியே பிறரின் ப்ரபாவம் குறைய ‘பீதாம்பரி’ என அழைக்கப்படும் பகளாமுகியின் தியானம் தந்த்ரங்களில் விதிக்கப்பட்டுள்ளது. சத்ருக்களை வெல்வது இவளின் உபாசனையின் முக்கிய பலன்.
இந்த அம்பிகையின் பூஜா சாதனங்கள் அனைத்தும் மஞ்சள் நிறமேயாகும். பக்தன் மஞ்சள் நிற ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிற ஆசனத்தில் அமர்ந்து சாமந்தி, செண்பகம் போன்ற மஞ்சள் நிறப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். மஞ்சளால் ஆன மாலை கொண்டு ஜபம் செய்ய வேண்டும்.
ஆதியில் கயிலையில் பூத கணங்களோடும் முனிவர்களோடும் நந்தியம் பெருமானுடனும் பரமன் அகிலாண்ட கோடி ப்ரமாண்ட நாயகியாம் அன்னை உமையுடன் கொலு வீற்றிருந்தபோது, முருகன் அசுரர்களை வெல்லும் விதிமுறைகள் பற்றி பரமேஸ்வரனிடம் கேட்டார். பரமன், ‘ப்ரஹ்மாஸ்த்திரம்’ என வழங்கப்படும் பகளாமுகி மந்திரத்தை முருகனுக்கு அருளினார். இதிலிருந்தே இத்தேவியின் மகிமை விளங்கும். இந்த தேவியின் உபாசனையை ‘இந்த்ரயோனீ வித்யை’ என்றும் தேவி உபாசகர்கள் போற்றுவர். ‘ஹ்ர்லீம்’ பீஜத்தில் உறைபவள் இந்த
அம்பிகை.
ஐம்புலன்களையும் ஆமைபோல் உள்ளே இழுத்துக் கட்டுப்படுத்தும் சக்தி, இவள் ஆராதனையால் ஏற்படும். சித்து வேலைகள் புரிவோரால் இந்த தேவியின் உபாசகரை ஏமாற்ற முடியாது. வாக்குவாதத்திலும் பெரிய மாநாடு, கூட்டங்கள் போன்றவற்றிலும் இவளைத் தியானிக்க, வாக்குவன்மை மேலோங்கும். வழக்குகளில் வெற்றி பெற இவள் அருள் கட்டாயமாகத் தேவை. வாதாடும் திறமையை அருள்பவள். எலுமிச்சம்பழ சாதத்தை நிவேதனம் செய்தால் சடுதியில் அருள்பவள்.
மனநிலை பாதிக்கப்பட்டோருக்காக யாரேனும் பகளாமுகிக்கு நேர்ந்துகொண்டு பூஜைகள் செய்தால் தேவி உடனே மனநோயிலிருந்து பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாள்.
இந்த தேவியின் ஆராதனை, உபாசிப்பவர்தம் குலத்தைக் காக்கும். புகழை மங்காமல் இருக்கச் செய்யும். எதிரிகள் தூள் தூளாவார்கள். ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் தொலையும். நீருக்குள்ளும், நெருப்புக்குள்ளும் எந்தவிதத் தீங்கு நேராமல் இருக்கும் ஸித்தியைத் தரும்.
பகளாமுகி நம் சரீரத்தில் சங்கினி எனும் நாடியில் உறைவதாகச் சொல்லப்பட்டுள்ளது.
நம் காமக்ரோதாதி உள் சத்ருக்களை வெல்ல வைத்து ஆத்மஞானம், குபேரன் போன்ற செல்வம், நல்ல பதவி போன்றவற்றை அருளும் பகளாமுகிதேவிக்கு ராஜகுரு ஸ்ரீஸ்ரீசூரியன் நம்பூதிரி சுவாமிகளால் திருநெல்வேலி மாவட்டம், தெற்கு பாப்பான்குளம், கல்லிடைக்குறிச்சியில் ஆலயம் எழுப்ப தேவியின் திருவருளால் உத்தரவாயிற்று. அதன்படி சுமார் ஆறு கோடி ரூபாய் மதிப்பில் அன்னைக்கு ஆலயத் திருப்பணிகள் நடந்தேறி வருகின்றன. ஊர் கூடித் தேர் இழுப்பது என்பார்கள். இந்த இறைபணியில் அனைவரும் கலந்து கொண்டு ஆலய வளர்ச்சிக்கு உதவலாம்.
இந்தத் தலத்தில் 2012 ஜனவரி முதல் அமாவாசை அன்று, இரவு 7 மணிக்கு எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட பகளாமுகி சத்ரு சம்ஹார யாகம்.
சுக்லாஷ்டமி அன்று, இரவு 7 மணிக்கு நோய் நொடிகளிலிருந்து விடுபட பகளாமுகி சர்வரோகசமன மந்திர யாகம்.
பௌர்ணமி அன்று இரவு 7 மணிக்கு காரியத்தடைகள் நீங்க சர்வகார்ய சித்தி யாகம் ஆகியவை நடைபெற உள்ளன.
பக்தர்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் இந்த யாகங்களில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், 9094234343, 9841676163, 04634293375 ஆகிய தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளலாம். நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் விண்ணப்பித்தால், அவர்கள் பெயரில் யாகத்தில் சங்கல்பம் செய்யப்பட்டு பிரசாதம் அனுப்பி வைக்கப்படும் என்று ஆலய



