Pages

வெறுங்கையுடன் அனுப்பமாட்டான் வேலவன்!


சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - வள்ளியூர்

‘‘பூர்ணகிரி யுடை புண்ணியனை
பூஜிப்போம் தம் நேத்திராடனப்
பீடையோடு வைரியர் தாம்
வைத்த வைப்பகலக் கண்டு நின்றோங்
கேளீர் - வள்ளியூர் நின்றானை வள்ளி
மணாளனைத் தொழுதக்கால் கிட்டும்பேரு
பெரிது பெரிதே’’

-என்கிறார், குதம்பைச் சித்தர். அகத்தியரால் போற்றப்பட்ட புண்ணிய பூமி இந்த வள்ளியூர் அம்பலம். ‘ஓம்’ என்ற பிரணவ வடிவம் விநாயகர். அதைப் போன்றே ஓம் என்ற பிரணவத்தின் அமைப்பில் பூலோகத்தில் அமைந்துள்ள சக்தி மிகுந்த கோயில் இந்த வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோ யில். இங்கு எழுந்தருளியுள்ள சுப்பிரமணிய சுவாமியை தொழுத எவரும் வெறுங்கையுடன் சென்றதே இல்லை என்கிறார், வன்மீகர் என்னும் சித்தர்.

‘‘குடமுனி கொண்ட இல் இதிலுறை
யீசனாஞ் செயண்டீசனை தொழுத
பின் வள்ளி மணாளனை
சரணஞ் செய்தார் அருணகுமரனைக்
கண்ட வறியனொப்பே’’

-குடமுனி என வர்ணிக்கப்படும் அகத்தியன் போற்றிப் புகழ்ந்த இந்த எழில்மிகு அம்பலத்தில் ஜெயந்தீஸ்வரன் குடி கொண்டிருக்கின்றார். இவரைத் தொழுத பின்னரே வள்ளி மணாளனைத் தொழ வேண்டும். அப்படி சுப்பிரமணிய பெருமானை சரணமடைந்தவர்கள், கொடை வள்ளலும் ‘இல்லை’ என சொல்லத் தெரியாதவனுமான சூரிய குமாரன் கர்ணனிடத்து ஒரு வறியவன் சென்று யாசித்தால் எப்படி வெறுங்கையுடன் கர்ணன் அனுப்ப மாட் டானோ, அதைப் போன்று சுப்பிரமணிய சுவாமியும் தன்னை சரணடைந்த பக்தர்களை வெறுங்கையுடன் அனுப்ப மாட்டார் என்பதாம்.

‘‘வாரிசு வேண்டி வந்தார் பின்னே
ஏக்கமது நீங்கி புனர் தரிசனம்
செய்து புண்ணியமது பெறுவாரே -
ஏவலுஞ் சூனியமுமேந்தி நைந்து
நின்றார் தீவினையறுந்து இன்ப
மென துள்ளி நின்று வள்ளி
மணாளனை தொழ சத்யமிது தப்பாது’’
-என்கிறார், சட்டை முனி சித்தர்.

குழந்தை இல்லையே என ஏங்கி இங்கு வந்து தொழுது சென்றவரெல்லாம், வாரிசைக் கையில் ஏந்தி, மீண்டும் இந்த வள்ளியூர் சுப்பிரமணிய சுவா மியை தொழுவது உண்மை. ஏவல், சூன்யம் என்று மாந்த்ரீக விஷயங்களினால் பல்வேறு அவஸ்தைகளை அடைந்த சட்டைமுனி சித்தர், அவற்றிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெற்று, புனர் தரிசனம் செய்வது உண்மை என்று கொண்டாடுகின்றார். வள்ளி அழகில் மிகவும் சிறந்தவள். முருகன் என்ற சொல்லுக்கு அழகன் என்று பொருள். இந்த தேவசேனா-வள்ளி சமேத சுப்பிரமணிய சுவாமியை தொழுவோர்
அழகு கூடப் பெறுவீர் என்பதில் ஐயமில்லை.
இடைக்காடர் என்னும் சித்தர்,
‘‘பூர்ண கிரியை குடைந்து நின்ற
வள்ளி மணாளரை தொழுதக்கால்
வாடா வனப்பும் மெருமேற
தேடா திரவியமுங் கூடுங்
கண்டோமே’’

-என்கிறார். பூரணகிரி மலையைக் குடைந்து உருவான இந்த சுப்பிரமணிய சுவாமி-வள்ளியம்மை தம்மை சிரத்தையுடன் தொழுவோருக்கு அழகு கூ டும். மேனி பளபளக்கும். செல்வம் தானே சேரும் என்று கூத்தாடுகின்றார், இடைக்காடர்.

‘‘அருத்தகுடி யமர் மகேந்திரன்
தம்மோடு வியாழனையுங்
கண்டு தொழுவார் வைரியர்
பிடியிலிருந்து விடுபடுவர்,
நிரந்தரமே’’
-என்றார், கருவூரார்.

அர்த்தமண்டபம் தன்னில் குடி கொண்ட வீர மகேந்திரரையும் தட்சிணாமூர்த்தியாம் குரு பகவானையும் சரணஞ் செய்வோர், எதிரிகளின் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபடுவர் என்கிறார், கருவூரார். திருவண்ணாமலை, குன்னக்குடி, பழநி போன்ற புகழ்பெற்ற தலங்களில் கிரிவலம் செய்து வழிபடுதல் போல், இங்கும் வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மலை வலம் செய்து வழிபட்டால் நாட்பட்ட வியாதிகள் விலகும். குலத்தில் பரம்பரையாய் துலங்கும் நாகதோஷம், சனி தோஷம், கால சர்ப்ப தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்றன கண்டிப்பாக விலகும். சித்ரா பௌர்ணமி, கார்த்திகை ஜோதி போன்ற நாட்களில் பலன்கள் பன்ம டங்கு உண்டாகும்.

அகத்திய சித்தரே கார்த்திகை மாதம் முழுமதியில் சரவணப் பொய்கையில் நீராடி கிரிவலம் வந்து சுப்பிரமணியக் கடவுளை தரிச னம் செய்தார். இதனால் பன்மடங்கு தவ வலிமை கொண்டார் என்று பேசுகின்றார், திருமூலர்.

‘‘குடத்துதித்தான் கொண்ட வேலால்
கண்ட பொய்கைபுக்கு நன்னீராடி
வள்ளியூர் மணாளன் கிரிதமை
விருச்சிக மதியொளி நாளதனில்
வலஞ்செய்தே நிற்க - அருணகிரி
யானும் அஃதொப்பவே
நிற்ப தவசு பலம் ஒதற்கரிதே’’

-அருணகிரி நாதரும் ராமாயணத்தைத் தமிழில் வடித்துக் கொடுத்த கவிச்சக்ரவர்த்தி கம்பனும் போற்றி தொழுத அம்பலம் இது. வள்ளியின் வேண்டுகோளை ஏற்று, முருகப்பிரான் தனது வேலால் உருவாக்கிய பொய்கையே சரவணப் பொய்கை. அது, இன்றும் மலையை ஒட்டி இருக்கிறது. இந்தப் புண்ணிய தீர்த்தம் வறுமையை ஒழிக்கும். மேனி அழகை கூட்டும். மகேந்திரகிரி வனதேவதாக்கள் அன்றாடும் நீராடும் ஆனந்த புஷ்கரணி இது என்கிறார், இடைக்காடர்.
மேற்கு பார்த்த ஈஸ்வரனின் தரிசனம் மிக புண்ணியமானது. பாவங்களை நாசம் செய்ய வல்லது.

பிறவி என்னும் பெரும் பிணியை நீக்கும். பேய்-பிசாசு போன்ற வடிவங்கள் நம்மை அண்டாது கவசமாய் காக்கும். இங்கு குடிகொண்டுள்ள ஜெயந்தீசர் மேற்கு பார்த்தும் வள்ளி மணாளனார் நான்கு கரங்களுடனும் நிற்பது மிகவும் மகிமை வாய்ந்தது. சித்தர்களுக்கு பிடித்த பொக்கிஷம் இந்தப் புண்ணிய பூமி. மூன்று கண் அம்மையாம் ஆதி பராசக்தியும் இசக்கி அம்மையும் அன்புடன் சீராட்டிய செல்லப்பிள்ளை இந்த வள்ளியூர் நாதன், வள்ளி மணாளனார், சுப்பிரமணிய சுவாமி. நம் வினைகள் களைய இந்த கார்த்திகை ஜோதியன்று இந்த வைபோக தலத்தைக் கண்டு பிறவி எடுத்த பயனை நாமும் அடைவோமே!