
ஒருமுறை ஒரு ஊரில் பயங்கரமான புயல் வீசிக்கொண்டிருந்தது. மரங்களை வேறோடு பிடுங்குவதும் வீட்டு கூரைகளை வானத்திலே பறக்க வைப்பதுமாய் பெரும் சேதத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஒருவன் அதைக்கண்டு பாதுகாப்பாக வீட்டிற்குள் ஓடி வந்தான். ஆனாலும் அவனுக்கு புயலை பார்க்க வேண்டுமென்ற ஆசை காணப்பட்டது. அதனால் வீட்டு கதவை திறந்து புயலின் கோர காட்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அங்கே பறந்துகொண்டிருக்கிற கூரையையும் மணலையும் பார்த்த அவன், தன் வீட்டிலுள்ளவர்களிடம் நான் அந்த பிரதான சாலைக்குப் போய் புயலை ரசிக்கப் போகிறேன் என்றான். குடும்பத்தினரும் அவனை தடுத்தனர். அவனோ அவர்களை அலட்சியப்படுத்திவிட்டு வேகமாக பிரதான சாலைக்கு ஓடினான். ஆனால், நடந்தது என்ன தெரியுமா? புயலை ரசிக்க வந்த இவனை சில விநாடிகளில் புயல் ரசிக்கத் தொடங்கிவிட்டது.
ஆம், திடீரென்று ஒரு மரத்தின் கிளை ஒடிந்து, சுழல்காற்றால் வீசியெறியப்பட்டு சரியாய் அவனுடைய தலைமேல் வந்து பலமாய் விழுந்தது. ஐயோ, பரிதாபம், அவன் வீதியிலே விழுந்து, துடிதுடித்துச் செத்துப் போனான்.
அடைக்கலத்தை அறிந்திருந்தவன், அடைக்கலத்தின் மிக அருகிலே இருந்தவன் அடைக்கலத்தை விட்டு வெளியே வந்தபடியால் அவன் மரிக்க வேண்டியதாயிற்று. ஆம், இதைப்போலதான் இன்று இயேசு கிறிஸ்து நமக்கு அடைக்கலமாய் இருக்கிறார். இயேசு என்னும் அடைக்கலப் பட்டணத்திற்குள் நாம் வரும்போது நமக்குப் பாதுகாப்பு உண்டு. இயேசுதான் அடைக்கலப் பட்டணம் என்று அறிந்தும்கூட அந்த அடைக்கலப் பட்டணத்திற்குள் வர யோசிக்கிறார்கள். நாட்கள் பொல்லாதவைகளானபடியினால் காலத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்வோம். ‘‘கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடி சுகமாயிருப்பான்’’ - (நீதி 18: 10), தாவீது என்ற பக்தன் சொல்கிறார்: ‘‘உம்மை என் ஆத்துமா அண்டிக்கொண்டிருக்கிறது. விக்கினங்கள் கடந்து போகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்’’ - (சங்கீதம் 57: 1). ஏசாயா என்னும் தீர்க்கதரிசி சொல்கிறார்: ‘‘உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனை பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்’’ - (ஏசாயா 26: 3). இயேசு நம்மைப் பார்த்து சொல்கிறார்: ‘‘அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன். என் நாமத்தை அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்’’ - (சங்கீதம் 91: 14). அந்த அடைக்கலத்திற்குள் செல்வோம்; ஆனந்தம் அடைவோம்.
- பரமன்குறிச்சி பெவிஸ்டன்


