Pages

வாஸ்து குறை தீர்க்கும் செவலூர் பூமிநாதர்


தேடி வருவோருக்கு அருளை வாரி வழங்குபவர் பூமிநாதர் சுவாமி. வாஸ்து கோளாறு வீட்டையே ஆட்டி படைக்கும் என்பார்கள். அத்தகைய வாஸ்து பிரச்னைகளை தீர்த்து வீடு கட்ட வரம் அருளும் பூமிநாதர் புதுக்கோட்டை மாவட்டம் செவலூரில் குடிகொண்டுள்ளார். தமிழகத்தில் உள்ள வாஸ்து ஸ்தலங்களில் செவலூர் பூமிநாதர் ஆரணவல்லி கோயில் சிறப்பு வாய்ந்ததாகும். புதுக்கோட்டை, பொன் னமராவதி நெடுஞ்சாலையில் செவலூர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் இருந்து 3கி.மீ தூரத்தில் உள்ளது இவ்வாலயம். கி.பி 12ஆம் நூற்றாண்டில் பாண்டியமன்னர் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள் பழமை வாய்ந்த கோயிலாகும்.

இக்கோயில் சிவபெருமானுக்கு 16 பட்டைகள் உள்ளது. இதில் ஒவ்வொரு பட்டையும் பூமாதேவி பூஜைசெய்த ஸ்தலமாக கூறப்படுகிறது. மேலும் இக்கோயிலில் அபிஷேக தீர்த்தம் பூமிக்குள்ளேயே சென்றுவிடும்படி அமைக்கப் பட்டுள்ளது சிறப்பு வாய்ந்தது. மனைகள் வாங்க, புதிய வீடு தடையின்றி கட்டி முடிக்க மற்றும் அனைத்து வாஸ்து குறைகளையும் தீர்க்கும் ஆலயமான செவலூர் பூமிநாதர் ஆரணவல்லி திருக்கோயிலில் ஒவ்வொரு வாஸ்து நாளன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

வாஸ்து நாட்களில் இக்கோயிலில் வாஸ்து ஹோமம் வளர்க்கப்படுகிறது. அவ்வாறு வாஸ்து ஹோமத்தில் வைத்து பூசிக்கப்படும் செங்கல்லை வாங்கி சென்றால் கட்டிடப் பணிகள் துரிதமாகவும் தங்கு தடையின்றி முடியும் என்பது ஐதீகம். பூஜைக்கான ஏற்பாடுகளை பூமிநாதர் ஆரணவள்ளி வாஸ்து பூஜை நற்பணி மன்றத்தினர் செய்து வருகின்றனர்.