Pages

கடன் உபாதைகளை அறுக்கும் கருணாமூர்த்தி


நாவல் மரங்கள் அடர்ந்த காட்டினுள் எழுந்தருளி நடனம் செய்யும் பிரான் இந்த நாவலேஸ்வரப் பெருமான். கெடில நதி என்பது கங்கை நதியின் மறு உருவம். கங்கையின் புத்ரி என்பர் சித்தர்.

‘‘கெடிலமெனுந் நீர் பிரவாகமது
கங்கா தேவியின் அச்சென
விளங்க, அதிலதிகாலை நீராடி
நாமநல்லூரானை தொழ
கிட்டாதேது’’

-என்கிறார் சுக்கிராச்சாரியார். நவகிரகங்களில் சுக்கிரன் என்பது முக்கியமான ஒன்று. ஒவ்வொரு கிரகத்திற்கும், அதனதன் தசை நடக்கையில் அதற்கேற்ப இத்தனை ஆண்டுகள், இந்த கிரக தசை நடக்கும் என்பது ஜோதிட ஆய்வு. இதில் சுக்கிர தசை ஒன்றுக்குத்தான் இருபது ஆண்டுகள். மற்ற எந்த கிரகத்திற்கும் இத்தனை ஆண்டுகள் தசை நடப்பு இல்லை. கல்வி, ஆராய்ச்சி, பெருமை, அழகு, ஆரோக்யம், தனம், சுகம் மற்றும் சௌபாக்யம் என வாழ்வின் அத்தனை சுகபோகத்திற்கும் இந்த சுக்கிரனே ஆதாரம். இவர் அசுரர்களுக்கு புரோகிதர். சகல மந்திர, மாயா ஜால, ஏவல் சூன்ய வித்தைகளில் நிபுணர். இவருக்கு சமம் எவருமில்லை. சஞ்சீவி மந்திரம் என்ற, இறந்தவரை எழுப்பும் சக்தி நிறைந்த ஜீவிதத்தில் நிபுணர்.

இப்படிப்பட்ட சீரிய ஆற்றலை உடைய சுக்கிர பகவான் தொழுத மூர்த்தி - ஆராதித்த மூர்த்தியாம் சுக்கிர லிங்கனார் கோயில் கொண்டுள்ளது இந்த திருநாவலூரில்தான்.

‘‘விஷ்ணுவுக்கும் மேலோன்-
குருவுக்கும் வைரி - அசுரர்க்கு
ஆயோன் ஆராதித்த மூர்த்தியினை
ஆராதிப்போர் அல்லல் போம்-
அருவினை போம். சொல்லொணா துயர்
போம். ஏவலுடன் மாந்த்ரீகமெல்லாம்
பட்டென படுமன்றோ சத்யமிது’’

-என்கிறார் கொங்கண சித்தர், தனது கொங்கண வாக்கிய நாடி வாயிலாக. எல்லா இனத்தவருக்கும் பிரியமான சிவன் என்பதால், சுந்தரப் பெருமான் இந்த நாவலூர் ஈசனை, பக்த ஜனேசுவரர் என போற்றுகின்றார். ‘‘வன்தொண்டனானேன், பக்தஜனேசுவரனருளதினாலே’’ - சுந்தரரைக் குறித்து பாம்பாட்டி சித்தர் கூற்று இது. ஆலால சுந்தரர் தம்மை அன்னை மனோன்மணி மாதா ஆட்கொண்டமையால், அம்பிகைக்கு சுந்தரநாயகி என்றொரு பெயரும் உண்டாயிற்று. கெடில நதியின் வடகரையில் குடிகொண்டுள்ள திருநாவலேஸ்வரர் சகல ஐஸ்வர்யங்களையும் தரவல்லவர் மட்டுமல்ல; சகல பீடைகளையும் தோஷங்களையும் எரித்து, நம்மை நற்கதி அடைய வைப்பவர்.

திரு ஆரூரான் என்ற சுந்தரருக்கு தானே நின்று மணமுடித்து, முக்தியும் தந்தான் எனில் இந்த ஈசனின் பெருமையை எப்படி சொல்வது!

‘‘சுக்கிராச்சாரியர் தொழுத பொல்லாப் பிள்ளையாரை தொழுதக்கால், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்’’

என்கிறார், கண்வ மகரிஷி.‘‘பொல்லாப் பிள்ளை

தொழுதக்கால்
என்பால் எழுந்த பீடை யகலுமே.
நேத்திராடன தோஷங் கருகுமே’’

-என்கிறார், கண்வர். இங்குள்ள நவகிரகங்களில், சுக்கிர பகவான் முன் எழுந்தருளி இருக்கும் லிங்கம், சுக்கிர லிங்கம் எனப்படும். வாரம் தோறும் வெள்ளிக் கிழமையில், சுக்கிர ஓரையில் இவரைத் தொழுது, மொச்சை பயிறு சுண்டல் நைவேத்யம் செய்து வந்தால், தனம் பெருகும். கடன் உபாதை அடைபடும் என்பது அகத்தியர் வாக்கு.

‘‘சுங்கநாளில் சுங்கனாக்கிய
சிவனை நாமநல்லூரேகி தொழ
மொச்சை கொண்டாராதிப்போருக்கு
திருமகள் அருளும் மலைமகள்
கருணையுஞ் சேரப் பாரீர்’’.

எவ்வளவு எளிமையான பூஜை! கடுவிரதம் தேவை இல்லை; பெரும்பொருள் செலவு செய்து தானமோ, யாகமோ செய்ய வேண்டியதில்லை. சுங்க நாள் என்றால், சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமை எனப் பொருள். இங்குள்ள நவகிரகங்களுள் சூரியன் மட்டும் மேற்கு நோக்கித் திரும்பி, மூலவரான திருநாவலேஸ்வரரை தரிசனம் செய்கின்றார். பங்குனி மூன்றாம் வாரத்தில் சூரியன் தனது ஒளியை மூலவர் மேல் விழச் செய்து பூஜிப்பது கண்கொள்ளாக் காட்சி. அருணகிரிநாதர் சித்தருள் சிறந்தவர். ஆழ்ந்த சிந்தனையாளர். அவர் பெற்ற பேறு அரிதானது. சிவ தரிசனம் செய்கையில் இறைவன், சண்டேசுவரரின் வரலாற்றை காட்சியாக காட்ட, இன்றும் அந்த வரலாறு மூலவரின் கருவறையில் இருப்பதை நாம் காணலாம். அன்று தொட்டு அருணகிரிநாதரின் மேனியில் இருந்த குன்ம நோய் பூரண குணம் பெற்றது.

கண்வ மகரிஷி தனது பாடலில்,
‘‘கிளிவடிவான சித்தன் மேனி நின்ற
குட்ட மகல நாவலூருறை ஈசன்
சண்டேசுவரனின் வாழ்வு சித்தரித்தனனே
காட்சி கண்டவனின் மேனி
பளிங்கொப்ப
சொலித்ததறியீரோ’’

கருவறையில் நாம் சண்டேசுவர சிற்பங்களை தொழுதால், சரும பீடை அகலும். ஜபம் சித்தியாகும். நல்ல குரு அல்லது ஆச்சாரியன் நமக்கு கிடைப்பார் என்பது முற்றிலும் உண்மை. தெய்வ நிந்தனை கொடிய தோஷம் ஆகும். தன்னை ‘பைத்தியக்காரன்’ என நிந்தித்த திரு ஆரூரானை, வன் தொண்டனாக்கிய கருணை வள்ளல் குடிகொண்டுள்ள திருநாவலூரில், அம்பிகை சுந்தர நாயகியாய், மனோன்மணி மாதாவாய் அருள்பாலிக்கின்றார். மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறு நீங்கிட எலுமிச்சம்பழ தீபம் நெய் விட்டு ஏற்றினால் விலகும்; பிள்ளைப்பேறு கிட்டும். படி ஏறி சென்று வரதனை காணல் புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. இங்கு சற்று உயரத்தில் ஸ்ரீதேவி- பூமி தேவியருடன் வரதராஜப் பெருமாள் ஆறு அடி உயரம் கொண்டு ஆஜானுபாகுவாய் காட்சி தருகிறார்.

சுக்கிர பகவானின் ஒரு கண்ணை இந்த வரதப் பெருமான், வாமன ரூபத்தில் வந்து ஒளியிழக்கச் செய்ய, விமோசனம் கேட்டு சுக்கிரன் நின்ற இடம் இது. திரு வெள்ளியங்குடியில் இழந்த ஒளி சேரும் என்றார் விஷ்ணு. குருபகவானால் சோதனை கொண்டோருக்கும் இங்கு பரிகாரம் கிட்டும். தட்சிணாமூர்த்தியான வியாழன், இடப வாகனத்தின் மேல் வலக்கரம் வைத்து, இடக்கரத்தில் நந்தி நாடியை ஏந்தி சுக்கிரபகவானுக்கே உபதேசித்த தலம் இது. இந்த உபதேசம் பெற்ற சுக்கிரபகவான், தனது வக்கிர தோஷம் நீங்கப் பெற்றார் என்றால், இந்த தலத்தின் மகிமையை சொல்லவும் வேண்டுமோ!

‘‘தம்பியாரூரான் நின்றவூர்
சுங்கனவன் வினை யறுபட்டவூர்
மாதவனும் மகிமையாய் மகேசனை
தொழுத ஆர் நரசிங்க முனையர்
முக்தி கண்ட ஆர் நாவலூரிதனை
யண்டி கலியில் கலியை கடப்பீரே’’

-என்கிறார் கோலர் என்னும் சித்தர். இவர் கொல்லூர் என்ற ஊரில் மூகாம்பிகையின் கோயிலில் அரூபமாய் இன்றும் தபசு புரிகின்றார். பிறவி என்னும் பெரும் பிணி நீக்கும், நாடிய காரியம் சித்தி தரும், வைரியர் தம்மை ஓடச் செய்யும், கடன் உபாதைகளை அறுக்கும் மூர்த்தி, இப்புண்ணிய மூர்த்தியாம் பக்த ஜனேஸ்வரர்.

‘‘பிறவி யறுக்கும் காரியமது சித்தியாக்கும்
வைரியரை மடக்கும் மற்றுமுள்ள
பீடையெல்லாங் கறுக்கும் - கடனு
பாதை
யழிய யண்டுவீர் பக்தசனே
சனையே’’

-குதம்பை முனிவர். நாமும் ஒருமுறை திருநாவலூரை அடைந்து சிவனை தொழுது உய்வு பெறுவோமே!