Pages

மங்கலம் அருள்வார் மங்காமல் காத்த ஐயனார்


கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம், திருநாரையூர் கிராமத்தில் ஒரு ஐயனார் கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் ஊருக்குத் தெற்கே தனித்திடலில் அமைந்து, தனிச் சிறப்பு பெறுகி றது. திருக்கோயிலை ஒட்டி சுமார் 2 ஏக்கர் பரப்பில் திருக்குளமும் தலவிருட்சங்களும் சிறப்பாகக் காட்சியளிக்கின்றன. பரிவார தேவதைகளும் பலிபீட மும் கொண்டு, தொன்மைச் சிறப்புடன் மிளிர்கிறது, இந்த ஐயனார் கோயில். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலக் கருவறையில் உள்ள தனிபீடத்தில் ஐயனார், தனது தேவியர்களான பூரணை மற்றும் புஷ்கலையுடன் அமர்ந்து தரிசனம் அளிக்கிறார். முன்பு வழிபாட்டில் இருந்த மூலவரின் திருவுருவத்தின் இடது கால் சற்று பின்னமடைந்ததால் அவரை எடுத்து வேறு தனி மேடையமைத்து பக்கத்தில் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

ஐயனார் வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை மடித்து ஊன்றி வைத்து சுகாசனத்தில் அமர்ந்திருக்கிறார். வலது கையில் சாட்டையைப் பிடித்தி ருக்கிறார். இடது கை இடது முழங்கால் மீது பதிந்துள்ளது. தலையில் ஜடாபாரம் அமைந்துள்ளது. காதுகளில் பத்ரகுண்டலம் சூடியுள்ளார். மார்பில் மூன்று ஹாரங்கள் அணிந்துள்ளார். இடுப்பில் உடுத்தியுள்ள ஆடை தொடை வரை உள்ளது. ஐயனாரின் வலது பக்கம் அவரது தேவியான பூரணை அமர்ந்துள்ளாள். தலையில் கரண்ட மகுடம், இடது கையில் பூச்செண்டு பிடித்தும் வலது கையை தொடை மீது வைத்தும் அருட்கோலம் காட்டுகிறாள். இடது பக்கம் மற்றொரு தேவியான புஷ்கலை அமர்ந்துள்ளாள். வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு, ஐயனாரின் இடதுபுறம் ஒரே மேடையில் அமர்ந்துள்ளாள்.

வலது கை மலர்ச்செண்டை ஏந்த, இடது கை தொடையில் ஊன்றியுள்ளது. தலையில் கரண்ட மகுடமும் கால்களில் மகர குண்டலங்களும் அழகு செய்கின்றன. மார்பில் மணிமாலைகள் எழிலூட்டுகின்றன. இவ்வாறு மூலவர் ஐயனார் தனது தேவியர்களோடு ஒரே மேடையில் எழுந்தருளி பக்தர்களுக்கு வேண்டிய வரமளிக்கும் இன்முகத்தோடு காட்சி தருகின்றார். தற்போது உள்ள மூலவரின் காலம் 17ம் நூற்றாண்டு ஆகும். அதற்கு முந்தைய வழிபாட்டுக்குட்பட்ட பழைய ஐயனாரின் உருவ அமைப்பைக் கொண்டு பார்க்கும்போது இது, 15ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியமுடிகிறது.

ஆலயத்தில் விநாயகப் பெருமான் தனி மேடையில் எழுந்தருளியுள்ளார். தலையில் கரண்ட மகுடம், அகண்ட தலையில் யானையின் காதுகள் அமைந் துள்ளன. விநாயகரின் தும்பிக்கை இடது பக்கமாக பழத்தைக் கவ்விய நிலையில் உள்ளது. இடது முன் கை மோதகம் ஏந்தியும் பின் கை பாசத்தை தாங்கியும் உள்ளன. இந்த விநாயகப் பெருமானும் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஆலயத்திற்குக் கிழக்கே தனித்தனி மேடைகளில் மிகப் பிரமாண்டமான உருவத்தில் இரண்டு குதிரைகள் நின்ற நிலையில் காட்சி தருகின்றன. குதிரை கள் வடக்கும் தெற்குமாகப் பார்த்தபடி எதிரும் புதிருமாக கம்பீரமாக காட்சியளிக்கின்றன. ஆலயத்தின் கிழக்கில் பலிபீடத்தின் தென்புறமாக தலவிருட்ச மான வேப்பமரம் அமைந்துள்ளது. இது ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

பழைய மரம் நடுவில் பட்டுப்போன பிறகு அதன் கீழிருந்து துளிர்விட்டு இந்த மரம் வளர்ந்துள்ளது, அற்புதமான நிகழ்வாகும். தல விருட்சமாக, வீரன் சந்நதிக்கு பின்புறம் மற்றொரு ஆலமரமும் அமைந்துள்ள து. ஆலயத்தின் தெற்கு பக்கத்தில் ஐயனார் கோயில் குளம் எனும் பெயரில் திருக்குளம் அமைந்துள்ளது.
இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இத்திருக் குளத்தில் நீராடி ஐயனாரை வலம் வந்து வழிபாடு செய்வது மரபாக உள்ளது. தல விருட்சத்தையும் வீர னார் சாமியையும் குதிரை வாகனங்களையும் இவ்வூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் திரளாக வந்து வழிபடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும் தைப்பொங்கல் பண்டிகை, தமிழ் வருடப்பிறப்பு நாட்களிலும் இந்த ஐயனாரைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள், உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து பெருந்திரளாக வந்து வழிபடுவது பிரமிப்பாக இருக்கும்.

அவர்கள், திருக்குளத்தில் நீராடி பொங்க லிட்டு மாவிளக்கேற்றி, முடி காணிக்கை தந்து, காது குத்தி, தத்தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்று கின்றனர்.
ஐயனாருக்கு எதிரில் தனிச் சந்நதியில் வீரனார் காட்சி தருகிறார். இவரிடம் வேண்டிக் கொள்வதற்காக வெள்ளிக்கிழமைகளில் பரம்பரை பக்தர்களும் பிறரும் திரளாக வந்து கூடுகின்றனர். ஐயனார் என்பவர் பிட்சாண்டவராக வந்த சிவபெருமானுக்கும் மோகினியாக வந்த திருமாலுக்கும் ஏற்பட்ட காத லால் உருவான கடவுளாகும்.

காவல் தெய்வமான ஐயனார் தம்மைக் குலதெய்வமாகக் கொண்டு வழிபடும் பக்தர்களின் குடும்பங்கள் சீரோடும், சிறப்போடும் வாழும் வகையில் அ ருள்பாலித்து வருகிறார். தொன்று தொட்டு வாழையடி வாழையாக மக்கட் செல்வத்துடன், பிற எல்லா வளமான செல்வங்கள் யாவும் பெற்று வளமுட னும் நலமுடனும் வாழ வைப்பதால் இந்த ஐயனார், ‘மங்காமல் காத்த ஐயனார்’ என்றும் வணங்கப்படுகிறார். அல்லவை தேய்ந்து நல்லவை வளர வாழ்வளிக்கும் ஐயனாரை தரிசித்து பலனடைவோம்.