Pages

தரித்திரமே போ…! - 2

இப்படித்தான் ஒரு அம்மாவுக்கு என்ன செய்தது? அந்த அம்மா கோயம்புத்தூர். அதற்கு ரொம்பக் கஷ்டம். சொத்து எல்லாம் போய்விட்டது. வீட்டைக் கூட வைத்துக் கொண்டு, ரொம்பத் தொல்லை கொடுக்கிறார்கள். எப்படியாவது இந்தச் சொத்து வந்துவிட்டால், நான் பிழைத்துக் கொள்வேன் என்று எம்மிடம் கேட்டது.

யாமும் சரி என்று சொல்லி, “இந்த தியானத்தைத் தொடர்ந்து செய். உனக்கு வீடு திரும்பக் கிடைக்கும்” என்று வாக்கைக் கொடுத்தோம்.


“சொத்தை வைத்துக் கொண்டு, கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், கொடுக்கவே மாட்டேன் என்கிறார்கள்” என்று எம்மிடம் அந்த அம்மா சொல்கின்றது.


“வீட்டைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று சொல்வதை விடம்மா”, உனக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணி எடு. உனக்குக் கிடைக்கும் என்று யாம் சொன்னோம்.


அந்த அம்மா “எங்கெங்க, எங்கெங்க கொடுக்கின்றார்கள்” என்று திரும்பத் திரும்ப, அதையே சொல்லிக் கொண்டே இருக்கின்றது.


அப்புறம் யாம் கோபமாகச் சொல்லி, “உனக்குக் கிடைக்கும், நீ கிடைக்கும் என்று எண்ணி தியானம் செய்”, என்று அழுத்தமாகச் சொல்லி, “அடுத்து நல்லதாகத்தான் நடக்கும்” என்று சொன்னோம்.


“அப்படீங்களா, சரி” என்று சொல்லி தியானத்தைத் தொடர்ந்து செய்து, அந்த அம்மாவுக்கு, வீடு திரும்பக் கிடைத்தது. வீடு கிடைப்பதற்கு, கோர்ட்டுக்கும் பணம் இல்லை என்றார்கள். அதுவும் எப்படியோ கிடைத்து, கேஸ் ஜெயித்து, இந்த அம்மாவுக்குச் சாதகமாக முடிந்தது.


சந்தோஷமாகச் செய்தார்கள். கேஸ் ஜெயித்து வந்தவுடன், அந்த அம்மா என்ன செய்கிறார்கள்? சொத்து வந்துவிட்டது, அதோடு விட்டால் பரவாயில்லை. ஆனால், “இன்னைக்குப் பிழைப்பிற்குப் பணம் ஒண்ணும் இல்லை, ஏதாவது, தொழில் செய்ய வேண்டுமென்றால். அதற்குப் பணம் இல்லை, நான் என்ன செய்வது?” என்று சொல்லுகின்றது. அதற்கு யாம் என்ன செய்வது?


“இந்த வீடு இன்றைக்குத் திரும்பக் கிடைத்தாலும், வருமானத்திற்கு ஒன்றும் இல்லையென்றால் நான் என்ன செய்வது? என்று சொல்லி, திரும்பத் திரும்பத் தன் கஷ்டத்தையே எண்ணி அழுது கொண்டே இருக்கின்றது.


யாம் சொல்லும் முறைப்படி, இந்த தியானத்தைச் செய்து, தொழில் செய்ய வேண்டுமென்று எண்ணுங்கள். அதற்குண்டான அமைப்பு கண்டிப்பாகக் கிடைக்கும் என்று அந்த அம்மாவிடம் சொன்னோம்.


அந்த அம்மாவோ, “எங்கெங்க நடக்கப் போகின்றது” என்று சொல்கிறது.


“முதலில், உனக்கு எப்படி வீடு திரும்பக் கிடைத்தது?
அதே போல எண்ணினால், தொழிலும் சீராக வரும் அல்லவா”
என்று யாம் சொன்னோம்.


“வரும், ஆனால், இன்றைக்குப் பிழைப்புக்குச் சொல்லுங்கள்” என்று எம்மிடம் திரும்பவும் சொல்லுகின்றது. ஏனென்றால், இந்தக் கஷ்டத்தை எடுத்துக் கொண்டு, அதையே தான் பேசிக் கொண்டிருக்கின்றது அந்த அம்மா. நடந்த நிகழ்ச்சி இது.


அப்புறம் யாம் கோபமாக, “இந்தத் தியானத்தைத் தொடர்ந்து கடைப்பிடியுங்கள், அதன்படி செய்து, இந்தத் தரித்திரத்தை விடுங்கள்” என்று சொன்னோம்.


அதற்கும் அந்த அம்மா, “எங்கெங்க என் தரித்திரம், என்னை விட்டுப் போகப்போகின்றது” என்று மீண்டும் சொன்னது.


யாம் உடனே, தரித்திரத்தை “சீ... போ...” என்று யாம் சொன்னோம். அப்பொழுது அந்த அம்மா என்ன செய்கின்றது?


“சீ போ..” என்று என்னை சாமி சொல்லிவிட்டார். இங்கே சாமியிடம் வந்தாலும் கூட, அவர் என்னிடம் கோவித்துப் பேசுகின்றார் என்று சொல்லுகின்றது.


ஆக, தரித்திரம் போகட்டும், நல்ல காலம் வரட்டும் என்ற நல்ல வாக்கை யாம் சொன்னாலும் கூட, ஏற்றுக் கொள்ளும் மனம் அங்கே இல்லை.


“கோவென்று’ அந்த அம்மா அழுக ஆரம்பித்துவிட்டது. அந்த அம்மா என்ன செய்கின்றது? “என் கஷ்ட காலம், சாமி கூட என்னைக் கோபமாகப் பேசுகின்றார் என்று சொல்கின்றது


நான் எதைச் சொல்கின்றேன் என்ற, அந்த அர்த்தத்தைப் புரிந்திடாது, அதனுடைய உணர்வுகளிலேயே அந்த அம்மா இருக்கின்றது. நடந்த நிகழ்ச்சி இது. பிறகு என்ன ஆகின்றது? “சாமி என்னைப் போகச் சொல்லிவிட்டார்” என்று அழுதுகொண்டே அந்த அம்மா போய்விட்டது.


ஆக, இந்த அழுத்தங்கள் இப்படியானாலும் அங்கே யாம் கொடுத்த வாக்கு, அந்த அம்மாவுக்கு நிறைவேறுகின்றது.


“ஒருவர் வட்டியில்லாமல், பணம் கொடுக்கின்றேன் என்று சொன்னார். நான் கடை வைத்தேன். ஏதோ, ஓரளவிற்கு இரண்டாவது தரம் எனக்கு பணம் வந்துவிட்டது. சாமி என்னை நீங்கள் காப்பாற்றுங்கள்” என்று அந்த அம்மா எம்மிடம் வந்து சொல்கின்றது.


அன்றைக்குத்தான், யாம் விளக்கத்தை அந்த அம்மாவிற்குக் கொடுத்தோம். அதாவது,
“அன்றைக்கு உன் தரித்திரத்தைத்தான், நான் போகச் சொன்னேன்.
ஆனால், நீ கோபித்துக் கொண்டு போய்விட்டாய் அம்மா
என்று யாம் சொன்னோம்.


“என்ன பண்ணுவது? என் தரித்திர நேரம், எதையுமே நல்லதைக் கேட்க முடியவில்லை” என்று அந்த அம்மா சொல்கின்றது. இப்பொழுது தரித்திரம் போய்விட்டது. இப்பொழுது இங்கே வந்திருக்கின்றேன். கடையில் நன்றாக வியாபாரம் ஆகின்றது, என்று சொன்னது. நடந்த நிகழ்ச்சி இது.


ஆக, பொதுவாக என்ன செய்கின்றார்கள். தரித்திரத்தைத் தான் இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படி இருக்கும் பொழுது, “தரித்திரம் போகும்” என்று, யாம் சொன்னால், உங்களுக்கு எவ்வளவு கோபம் வருகின்றது?


ஆக, அந்த அம்மா கோபித்துக் கொண்டு, எம்மிடம் ஒன்றும் சொல்லாமலேயே போய்விட்டது. எல்லாம் நடந்த பிறபாடுதான் வந்து சொல்லுகின்றது.


ஏனென்றால், இதையெல்லாம் மறைமுகமாக யாம் சொன்னாலும் கூட, ஏற்றுக் கொள்ளக்கூடிய பண்பு இல்லை.