Pages

31. குழந்தைகளுக்கு நாம் எப்படி தியானிக்க வேண்டும்?

நமது குடும்பத்தில், குழந்தைகள் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, சந்தர்ப்ப பேதத்தால் படிப்பு குறைந்து போனால், “ஐயோ, நன்றாகப் படித்துக் கொண்டிருந்த குழந்தை, இப்படி ஆகிவிட்டதே” என்று வேதனைப்பட்டு, குழந்தைகளை எண்ணவே கூடாது.


அந்த மாதிரி சொற்கள் வந்தாலே, “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும், என்று எண்ண வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.


இந்த மாதிரி, நம் உடலுக்குள் அதைச் செலுத்தி, குழந்தையை நினைத்து, அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியும், துருவ மகரிஷியின் அருள் சக்தியும், சிந்தித்துச் செயல்படும் அந்த சக்தி பெற வேண்டும், நல்ல மனவலிமை பெறவேண்டும், கல்வியில் சிறந்த ஞானம் பெறக்கூடிய அருள் சக்தி பெற வேண்டும், என்று நமது உடலில், இதை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.


நாம் இதை எண்ணினாலே போதும். கல்வியில் சிறந்த மாணவனாக, மாணவியாக வர வேண்டும் என்று நாம் குழந்தைகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த உணர்வோடு பார்த்து, நீ வெற்றி பெறுவாய், தேர்வில் முன்னனியில் வருவாய், என்று மனதில் எண்ணிப் பார்த்தால் போதும்.


பள்ளிக்குப் போகும் பொழுது, ஆசீர்வாதம் கேட்டால், இதே போன்று சொல்லால் சொல்லி, அந்த உணர்வைப் பாய்ச்சி அனுப்ப வேண்டும்.


அதே சமயத்தில், குழந்தைகள் மற்ற நேரங்களில், சில செயல்களில் அவர்கள் உணர்வுக்குத்தக்கச் சில குறைபாடுகள் வருகிறது என்றால், அந்த உணர்வு நமக்குள் வந்துவிடும்.


அந்த உணர்வு நமக்குள் வராதபடி, “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.


பின் பையனை எண்ணி, சிந்தித்துச் செயல்படும் சக்தியும், மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும், மகிழச் செய்யும் உணர்வுகளும் அவனுக்குள் வளரவேண்டும். தெளிந்த மணமும், தெளிவான நிலை அவன் பெறவேண்டும் என்று அவன் உணர்வை எடுத்து, நமக்குள் மாற்றி உருவாக்கிவிட்டால், அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த எண்ணம் வரும்.


இல்லாவிடில், குறை வந்துவிட்டால் அவனை எண்ணும் பொழுதெல்லாம் கோபம் வரும். நம் உணர்வு அவன் மேல் பாயும், அப்பொழுது, அந்த உணர்வின் எண்ணங்கள் அவன் மீது, “இப்படியே பண்ணிக் கொண்டிருக்கிறானே”, என்ன ஆகப்போகிறானோ?” என்று எண்ணும் போது, அவன் சிந்தனை பூராவுமே குறைக்கப்பட்டு, அவன் சிந்திக்கும் தன்மையையே இழந்து விடுகிறான்.


அதனால், நாம் இந்தக் குடும்பங்களிலே அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் ஒவ்வொரு நொடியிலேயும் நம் உடலுக்குள்ளேயும், குழைந்தைக்குள்ளேயும், தொழில் செய்யும் பொழுதும், எடுத்துப் பழக வேண்டும்.



32. தீய உணர்வுகளைக் கடலுக்குள் கரைக்கும் நிலை
விநாயகர் சதுர்த்தி நன்னாளில், விநாயகர் உருவத்தைக் களிமண்ணால் செய்து, பூஜித்து, பின் கடலில் கரைக்கின்றோம்.


இதைப் போன்றுதான், சந்தர்ப்பத்தால், நமக்குள் சேர்ந்த தீய உணர்வுகளை வளராது தடுத்து, “அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், எல்லாக் குடும்பங்களும் நலம் பெறவேண்டும், எங்கள் பகைமைகள் அழிய வேண்டும்” என்று ஏகோபித்த நிலையில் பிரார்த்திக்கும் பொழுது, நம் உடலிலும், நம் பகைவர்களின் உடலிலும் பதிந்த, தீய உணர்வுகள் அனைத்தும் கரைந்து விடுகின்றன.


ஒரு மரம், எந்த நறுமணத்தின் உணர்வுகளைக் கொண்டிருக்கின்றதோ, அதனின் உணர்வின் சக்தியைக் காற்றில் இருந்து ஈர்க்கின்றது.


ஆனால், அதனுடைய வேரை அறுத்துவிட்டால், அது நீரைக் கவரும் திறனை இழந்து, தன் ஜீவ சக்தியை இழந்து, தன் இனத்தைக் கவரும் தன்மையையும், அது இழந்து விடுகின்றது.


இதைப் போன்றுதான், நமக்குள் மற்றவரின் உணர்வின் தன்மையைப் பதிவு செய்து, அதனின் நினைவாற்றல் வராதபடி, தடுத்து நிறுத்தும் நிலையாக, மகரிஷிகளின் அருள் சக்தியை இணைக்கப்படும் பொழுது, தீய உணர்வுகளின் விழுதுகள் தடைப்படுகின்றன.


இவ்வாறு தடைப்பட்டபின், நாம் அனைவரும் ஏகோபித்த நிலையில், எல்லோரும் நம் நண்பர்கள் என்று வளரப்படும்போது, நம் அனைவரிடமும் இருந்து வெளிப்பட்டிருந்த, காற்றில் கலந்துள்ள தீய உணர்வுகள், நகர்ந்து, கடலின் ஈர்ப்புக்குள் சென்று மறைந்து விடுகின்றன.


அப்பொழுதுதான், இந்த பூமியில் பரிசுத்த நிலைகள் பெருகி, அதே சிந்தனை மக்களின் மத்தியிலும் தோன்றுகின்றது.


ஏனென்றால், உலக மக்கள் அனைவரும் ஓரினம், நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள், நாம் ஈசனின் இயக்கத்தால்தான் இயங்குகின்றோம். நம்மை இயக்கும் உயிரான ஈசனுக்கு, மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, வெறுப்பையோ, குரோதத்தையோ, கொடுத்துவிடக் கூடாது.


ஆகவேதான், நமது உயிரான ஈசனுக்கு செய்யக் கூடிய கடமைகள் எதுவென்று உணர்ந்து, நமது வாழ்க்கையில் நல்ல குணங்களைச் சுதந்திரமாக்க, அருள் ஞானிகளின் உணர்வைக் கவசமாக மாற்றிட வேண்டும்.


அரசியல், மத, இன, மொழி பேதங்களால் விளைந்த தீய உணர்வுகள் இந்த பூமியில் படர்ந்து இருக்கின்றது. இவைகளில் இருந்து நாம் விடுபட்டு, நமது நல்ல உணர்வுகளைச் சுதந்திரமாக செயல்படச் செய்ய வேண்டும்.


அவ்வாறு செயல்பட்டு, தீமையற்ற உலகைப் படைப்போம். தீமையற்ற உலகத்தை முதலில், நம்மிடத்தில் உருவாக்க வேண்டும். இதைச் செய்தோமானால், பேருலகத்தையும் படைக்க முடியும்.


நாம் எதை எண்ணுகின்றோமோ, அதைப் படைக்கும் திறன் பெற்றது நமது உயிர். ஆகவே உயிரை ஈசனாக மதித்து, உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் சிகரமாக்குவோம்.


நம் முன் படர்ந்து கொண்டிருக்கும் தீய உணர்வுகள், நமக்குள் ஊடுருவ இடம் கொடுக்காது, துருவ நட்சத்திரத்தின் துணைகொண்டு, அதனைக் கடலுக்குத் துரத்தியடிக்க வேண்டும்.


ஏனென்றால், தீய உணர்வுகளை ஈர்ப்பதற்கு இடமில்லையென்றால். அது, வேறு வழி இல்லாது, இறுதியில், கடலின் ஈர்ப்பிற்குச் சென்று மறைந்துவிடும். இவ்வாறு, இனி தீய உணர்வுகளுக்கு, இங்கு இடமில்லை என்று செய்வோம்.


துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை, இவ்வுலகமெங்கும் படரச் செய்வோம். அனைவரிடத்திலும் பகைமையை நீக்குவோம். மத, இன, மொழி, அரசியல் பேதங்களை அகற்றுவோம்.


அனைவரும் ஒன்றுபட்டு வாழ, எல்லா மகரிஷிகளின் அருளை வேண்டிப் பிரார்த்திப்போம். இவ்வுலகில் அமைதி படர்ந்து, அனைவரும் “பிறவா நிலை எனும் நிலை” எய்த வேண்டும், என்று எண்ணி நாம் தவமிருப்போம்.


இதன் வழியில், மகரிஷிகளின் அருள் வழியைப் பின்பற்றி, செயலாக்கி வரும் அனைவருக்கும், எமது ஆசீர்வாதங்கள்.