Pages

38. தீமையை நீக்கி, “துருவ நட்சத்திரம் சென்று பழகும் நிலை”

நாம் இன்று பரிணாம வளர்ச்சியடைந்து, மனிதனாக வந்து இருக்கிறோம். பரிணாம வளர்ச்சியடைந்து வந்த நாம், இனி எப்படி இருக்க வேண்டும்?


அகஸ்தியனும் பரிணாம வளர்ச்சியில் வந்தவன் தான். கதிரியக்கங்களை அகஸ்தியன் தனக்குள் நுகர்ந்து, உடல் பெறும் உணர்வை மாற்றி, உயிரைப்போல உணர்வின் அணுக்களை மாற்றி, உணர்வின் ஒளியின் சரீரமாக, துருவ நட்சத்திரமாக இன்று நிலை கொண்டிருப்பவன். மனிதனில் அவன் வளர்ச்சி பெற்றவன்.


அவ்வாறு ஆன, அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நாம் ஒவ்வொரு நேரத்திலும், வெறுப்போ, வேதனையோ, சலிப்போ, பகைமையோ, இதைப் போன்ற உணர்வுகள் நாம் எடுத்து, தவறின் உணர்வுகள் இயங்கச் செய்வதை, அதைத் தடுத்து, அதன் உணர்வின் தன்மைகளை அடக்கவேண்டும்.


எப்படி காரம், புளிப்பு, உப்பு என்று தனித்தனித் தன்மையாக இருக்கும்போது, அந்த உணர்ச்சிகள் அதை ஊட்டுகின்றது, அதன் வழியில் செயலாக்குகின்றது. இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்த்து, மனிதனின் ஆறாவது அறிவு கலவையாக்கி, சுவையான, உணவாக உட்கொள்கின்றோம். அந்த சுவையாக மாற்றும் தன்மையை, நம் வாழ்க்கையில் பெறுதல் வேண்டும்.


நாம் நமது வாழ்க்கையில், எப்பொழுதெல்லாம் பகைமை உணர்வு வருகின்றதோ, அதை அடக்க உங்களுக்குள், இப்பொழுது தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பதிவு செய்கின்றோம்.


அதன் உணர்ச்சியின் வேகமாக, உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பதிவு செய்ததை, அதன் நினைவு கொண்டு நீங்கள் எடுக்க வேண்டும். ஆக நினைவு கொண்டு எடுத்து, உங்களைக் காக்க உங்கள் எண்ணம்தான் உதவும்.


திட்டியவனின் உணர்வை நுகர்ந்தபின், அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் வருகின்றது. அதன்வழி எண்ணும் பொழுது, அவனை வெறுக்கும் தன்மை, வருகின்றது, அந்த வெறுக்கும் தன்மை உங்களுக்குள் வரும்பொழுது, ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முடியாதபடி, அது தடையாக வருகிறது.


இத்தகைய தடைகள் வருவதைத் தடுப்பதற்கும், அந்த உணர்வின் தன்மையை அடக்குவதற்கும்தான், அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை, இப்பொழுது உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்வது. அப்பொழுது, இந்த உணர்வை எடுத்தால், அந்தத் தீமைகளை மாற்றி அமைக்க முடியும்.


ஆக என்னுடைய ஜெபமே, என்னுடைய தியானமே, யார் யார் கேட்டறிந்தனரோ, அவர்களுக்கெல்லாம், அவர்கள் எண்ணும் பொழுதெல்லாம், அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் கிடைக்க வேண்டும் என்று, உணர்வின் வலுவை ஊட்டிக் கொண்டிருக்கின்றேன். இதை நீங்கள் எடுத்து வளர்ந்தால்தான், நாட்டுக்கும் நல்லது, நம் அனைவருக்கும் நல்லது.


ஏனென்றால், நாளை வரும் எதிர்காலம், மிகவும் விஷத்தன்மையாக மாறும் பொழுது, அதைக் கழித்து, வடித்து, நாம் இந்த உடலில் இந்த உணர்வின் அணு, எந்த நிமிடம் ஆனாலும், அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்றுவிடலாம்.


இல்லையென்றால், இந்த பூமியில் மாற்றங்கள் துரித நிலைகள் ஆகிவிட்டால், பூமி கொஞ்சம் நகர்ந்தால், ஐஸ் பாறையாக மாறிவிடும். அந்த ஐஸ் பாறையாக மாறியபின், விஞ்ஞான அறிவில் உள்ளவர்களும், சிலர் தப்பலாம்.


ஆனாலும், இங்கே அசுத்தமான நிலைகள், பனிப்பாறைகள் மூடி உள்ளுக்குள் சென்றுவிட்டால், யார் காப்பாற்றுவது? அந்த நிலைகள் சீக்கிரம் வரத்தான் செய்யும்.


அதற்குள், நாம் இதிலிருந்து பூமியை விட்டு, நாம் வளர்த்த, இந்த உலகத்தின் தன்மை கொண்டு, அங்கே தப்பிச் சென்ற அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கி, நாம் இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது, நாம் அங்கே (துருவ நட்சத்திரம்) சென்று, பழகும் தன்மை வர வேண்டும்.


எந்த நிலையிலும் சரி, இந்த உடல் நமக்கு சொந்தமல்ல. உயிரின் உணர்வு வந்து, ஒளியாகும் தன்மை வரப்போகும் பொழுது, ஒளியாக மாற்றும் தன்மை பெற வேண்டும்,


அதற்குத்தான் இந்த உபதேசமே தவிர, நான் சொத்தைச் சம்பாரிக்க வேண்டும், இதைச் செய்தேன், என் பிள்ளை இப்படி இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தால், அந்த பிள்ளையின் தவறின் உணர்வை, நாம் வளர்த்தால், தவறின் உணர்வுகள்தான் நமக்குள் விளைகின்றது.


அவன் செய்யும் தவறின் தன்மை, வீரியத்தன்மை பெற்றது, இப்படிச் செய்கிறான் என்று, பாசத்தால் நுகரப்படும்போது, இங்கே நல்ல குணங்கள் அனைத்தையும் வீழ்த்தி விடுகின்றது.


ஆகவே, நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து, அவன் உணர்வு நம்மை இயக்கிடாது, அவனுக்கு, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்; அவனுக்குள் நல்ல உணர்வுகள் வர வேண்டும்; அவன் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும் என்று அவன் உடலிலே, இந்த உணர்வின் தன்மையை பாய்ச்சி, அவனை மாற்றி அமைக்க வேண்டும்.


ஆகவே, பிற தீமைகளின் உணர்வுகள், நம்மை இயக்கிவிடக்கூடாது. சிந்தித்துப் பாருங்கள், ஏனென்றால், உங்களைப் பக்குவப்படுத்துவதற்காக, யாம் இந்த நிலைகளைச் செய்தது.


நமக்குள், இதைப் பேணிக்காக்கும் திறன் வர வேண்டும். இவ்வாறு, அந்த பேணிக்காக்கும் திறன் இருக்கும்போதுதான், ஞானிகள் மற்றவர்களுக்கு இதைக் கொடுப்பார்கள்.


அவ்வாறு, இந்த அருள் உணர்வுகளை நீங்கள் அனைவரும், ஒவ்வொரு நாளும் வளர்த்து, அதைப் பேணிக்காக்கும் திறன் பெற்றிட, எமது அருளும், குரு அருளும் உறுதுணையாக இருக்கும்.