Pages

நாம் சேர்க்க வேண்டிய "அழியாப் பெரும் சொத்து"





அருள் மகரிஷிகள் இருளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றியவர்கள். ஒளியின் சரீரமாக நிலை கொண்டவர்கள் மகரிஷிகள். அதனின்று வெளிப்படும் சத்துதான், ரிஷியின் மகன் நாரதன், நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்.


நாராயணன் என்பது சூரியன். அது ஒளியின் சுடராக எதைத் தனக்குள் கவர்ந்தாலும், அதன் இனத்திற்கு அறிவாக ஊட்டுகின்றது. அதன் நிலைகளில் அதை வளர்க்கின்றது.


இதைப் போலத்தான் சூரியன் எப்படி, அதனதன் நிலைகள் கொண்டு, உலகை அது உருவாக்குகின்றதோ, உணர்வின் அறிவாக இயக்குகின்றதோ, அதன் வழிகளிலே அதை வளர்ச்சி செய்கின்றது.


இதைப் போலத்தான், மனிதன் இருளைப் போக்கி, உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக இருக்கும். மகரிஷியின் அருள் சக்தியை நாம் நுகருவோம் என்றால், அந்த உணர்வின் சத்தையும் சூரியனின் காந்தசக்திதான் கவருகின்றது.


அது அலைகளாகப் படரப்படும் பொழுது, அந்த நினைவை நமக்குள் பதிவு செய்தால்தான், அதிலிருந்து வந்த உணர்வை நாம் நுகர முடியும். அதுவே நினைவில் இல்லாதபடி நாம் இதை எடுப்போம் என்றால், முடியாது.

அதனால்தான் இன்று, துருவ நட்சத்திரத்தை தம் கண்ணிலே பார்க்கும் நிலை பெற்றவர்கள். மனிதனின் நிலைகளில் உணர்வின் ஒளியாக மாற்றிவர்கள் “சப்தரிஷிகள்”.


துருவ நட்சத்திரத்தை எண்ணி, அதனைப் பின்பற்றிவர்க்ள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக அதன் ஈர்ப்பு வட்டத்தில் வருகின்றார்கள்.


சூரியனில் வளர்ச்சி பெற்ற நட்சத்திரங்களும், கோள்களும், சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் வருகின்றது.


இதைப் போன்று, இந்தப் பிரபஞ்சத்திற்குள் உயிரணு தோன்றி, இந்தப் பிரபஞ்சத்தின் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய,
அந்த உயிரணுவின் மாற்றம்
இன்று எந்த துருவத்தின் நிலை கொண்டு
இந்த பூமி உணவாக எடுக்கின்றதோ,
அதே துருவ நிலைகளைத் தனக்குள் எடுத்து
ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கின்றார், “துருவ மகரிஷி”

இதுதான் நம் குருநாதர் காட்டிய நிலைகள்.


அந்த உண்மை வழிப்படி, அதை உற்று நோக்கிப் பதிவு செய்து, அதிலிருந்து விளைந்த உணர்வின் தன்மையை சிருஷ்டித்துக் கொண்டவர்கள் மகரிஷிகள்.


ஆறாவது அறிவின் துணை கொண்டு, ஏழாவது நிலை பெற்றவர்கள் சப்தரிஷிகள். அந்த உணர்வின் நாதங்களாகத் தனக்குள் சிருஷ்டித்துக் கொண்டவர்கள். அந்த சப்தரிஷிகள் உருவாக்கிய அந்த உணர்வுகளை நாம் பெறவேண்டும்.


துருவ மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும். அதனின்று பெற்ற சப்தரிஷி மண்டலங்களின் நிலைகள் நாம் பெறவேண்டும். இந்த உணர்வுடன் ஒன்றி, அதனின் நிலைகளை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

அப்படி வளர்த்துக் கொண்டு, வரும் தீமைகளை நீக்குவதற்கு,
ஒவ்வொரு நொடியிலும், “ஈஸ்வரா” என்று உயிரை வேண்டி,
துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்,
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெ\றவேண்டும் என்று
நாம் இதைச் சேமிக்க வேண்டும்.
இதுதான் அழியாப் பெரும் சொத்து.
உயிரான்மாவிற்கு நாம் சேர்க்க வேண்டிய சொத்து.


அப்படி அதைச் சேமிக்கும் பொழுது, இந்த உடலுக்குப் பின், நாம் நிச்சயம் பிறவியில்லா நிலை என்ற நிலை அடைந்து, அழியா ஒளிச் சரீரம் பெறுவோம். இது உறுதி.