Pages

தீமைகளைக் கூர்மையாகப் பிளக்கும் பேராற்றல்



1 வராக அவதாரம் - நாற்றத்தைப் பிளத்தல்
வராகன், தான் எவ்வாறு கெட்டதை நீக்கி நீக்கி, நாற்றத்தை நீக்கி, நல்ல உணர்வினைத் தனக்குள் எடுத்தது? என்று ஞானியர்கள் சொன்னார்களோ, அதைப்போல, இப்பொழுது உங்கள் எண்ணங்களை, மகரிஷிகள் காட்டிய மெய் உணர்வுகளைக் கூர்மையாகக் கவர, உங்களின் நினைவின் ஆற்றலை விண்ணை நோக்கிச் செலுத்துவதற்கே, இந்த உபதேசம்.

ஆகவே, இந்தக் கூர்மை அவதாரம் என்பது, நாற்றத்தைப் பிளந்துவிட்டு, சாக்கடைக்குள் இருக்கும் நல்ல பொருளைப் பன்றி நுகர்ந்து எடுக்கின்றது. மண்ணைப் பிளந்துவிட்டு, தன் உணவின் தன்மையைத் தன் நுகரும் ஆற்றலால், அது எடுத்து உணவாக உட்கொள்கின்றது. அப்படித் தீமையை நீக்கி, நல்லதை உட்கொண்ட உணர்வின் சத்து, அதே ஞானமாக அதை எண்ணிய நிலைகள் கொண்டு, எதை எண்ணியதோ, அது காந்தம் லட்சுமி, இதைக் கவருகின்றது.

தன் உடலிலிருந்து கெட்டதை நீக்கிவிட்டு, நல்லதைப் பெற வேண்டுமென்ற ஞானத்தின் எண்ணங்கள் அங்கே அது கவருகின்றது. இவையனைத்தையும், எடுத்துக் கொண்ட தன் உணர்வான வெப்ப காந்தங்கள் படைக்கின்றது என்ற இந்த உண்மையின் நிலைகளைத் தெரிந்து கொள்வதற்குத்தான், இந்த மூன்று உணர்வுகளின் நிலைகள், ஆயுதங்களாக ஒவ்வொரு உடலிலும் இயங்கியதை, அதை உணர்த்த, ஆயுத பூஜை என்று வைத்தது.


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர், எம்மைச் சாக்கடையில் உட்கார வைத்து, உபதேசித்தார். இப்பொழுது, நீங்கள் சாக்கடையில் உட்காரவில்லை. நல்ல இடத்தில் மகிழ்ச்சியான இடத்தில் உட்கார்ந்து இருக்கின்றீர்கள். எம்மைச் சாக்கடையில் உட்கார வைத்துத்தான், உபதேசம் கொடுத்தார்.


அந்த மகிழ்ச்சியான எண்ணங்களில், இந்த உணர்வை எண்ணி, நீங்கள் பெற வேண்டும் என்பதற்காக யாம் சொல்லுகின்றோம். அன்று பைத்தியத்திடம் சேர்ந்து, சாக்கடையில் உட்கார்ந்து இருக்கின்றேன், என்று எம்மைக் கிண்டல், கேலி செய்தார்கள்.


சாக்கடை உபதேசத்தில், எம்மை டீ, காபி வாங்கிவரச் சொல்லி, சாக்கடையில் இருந்த கழிவைப் போட்டுக் “குடி” என்கிறார் குருநாதர்.


“அய்யய்ய” என்று யாம் மறுக்கின்றோம்.


இந்தக் கூர்மை அவதாரம், வராக அவதாரம் எவ்வாறு இருக்கும்? நீ கூர்மையாக நாற்றத்தை எண்ணுகின்றாய். அந்த உணர்வின் சத்து, உனக்கு நாற்றமாகின்றது. அடுத்தவர்கள் என்ன செய்வார்கள்? என்று எண்ணுகின்றாய், அந்த உணர்வின் சத்து உனக்குள் வருகின்றது.


ஆக, இந்தப் பன்றியானது என்ன செய்கின்றது? நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை எடுத்தது. அது நாற்றத்தை எண்ணவில்லை. நீ நாற்றத்தை எண்ணுகின்றாய். அடுத்தவன் என்ன சொல்லுகின்றான்? என்று எண்ணுகின்றாய்.


இப்போது இதைச் சேர்த்துக் கொள்கிறாயா? அல்லது அதைச் சேர்த்துக் கொள்கிறாயா? நீ உயர்ந்த நிலையைச் சேர்த்துக் கொள்கின்றாயா? அல்லது நாற்றத்தை நீக்க வேண்டும் என்று எண்ணுகின்றாயா? நாற்றத்தை எண்ணியவுடனே, நீ எதை எண்ணுகின்றாயோ, அதை உன் உயிர் படைக்கின்றது, அதுவாகின்றாய்.


கீதையிலே, “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்” என்று உணர்த்தப்பட்டுள்ளது. “அய்யய்ய” என்று கண்ணில் பார்க்கின்றேன். நாற்றம் என்று எண்ணுகின்றேன். அப்பொழுது எந்த எண்ணம் வரப்படும் பொழுது, கண்ணன் என்ன சொல்கிறான்?


நாற்றம் என்கிற பொழுது, நாற்றத்தை ஈர்த்துப் பார்க்கச் செய்கின்றது. அதை (என் கண்கள்) இழுத்தவுடனே, நாற்றம் என்றவுடனே அதிகமாகிவிடுகின்றது. அந்த நாற்றம், உடலினுள்ளே சென்றவுடன் விளைந்து விடுகின்றது.


“நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்”. இந்த நாற்றத்தை நீக்கி, நல்ல பொருளை எடுக்க வேண்டும் என்று எண்ணினால், நீ அதுவாகின்றாய். இதைத்தான் கண்ணன் கீதையிலே சொன்னது.


அதைப் போல, என்னைக் கேவலமாகப் பேசுவார்களோ? என்று அவர்களைப் பார்க்கின்றேன், நாற்றத்தில் எவ்வாறு இருக்கும்? என்று எம்மைச் சாக்கடையில் வைத்துத்தான், நமது குருநாதர் உபதேசம் கொடுக்கின்றார்.


சாக்கடை அருகில் உட்கார்ந்தால், நீங்கள் என்ன சொல்வீர்கள்? “பாரு, எல்லாம் காசு ஆசை பிடித்துப் போய், சாமியாரிடம் வித்தையைக் கற்றுக் கொள்வதற்காக வேண்டிச் செல்கின்றார்கள். ஏனென்றால், அந்தச் சித்து, இந்தச் சித்து, தங்கம் செய்வது, வெள்ளி செய்வது, என்றுதான், சாமியார் பின்னால் போகின்றார்கள்.


மனிதனுடைய வாழ்க்கையில் இப்பொழுது, கூர்மை என்ன செய்கின்றது? அவர்கள் என்ன நினைப்பார்கள்? இவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று அதை வலுவாக எடுக்கும் பொழுது, வராக அவதாரமாக மாறிவிடுகின்றது. இந்த நாற்றத்தை எனக்குள் சேர்த்து விடுகின்றது.


வராகன் என்ன செய்கின்றது? என்று இவ்வாறு, பல நிலைகளில் என்னை அல்லல்பட வைத்து, எண்ணங்கள் உருவாகி, உன் உடலுக்குள் உணர்வுகள் எதைக் காட்டுகின்றது? அந்த உணர்வை எடுத்தவுடன் உனது ஆன்மாவாக எவ்வாறு மாறுகின்றது? ஆன்மாவிலிருந்து சுவாசித்தவுடன், உயிரில் எவ்வாறு படுகின்றது? அந்த உயிர், நீ சுவாசித்ததை இயக்கி, “அய்யய்ய நாற்றம்” என்று இந்த உடலை அழைத்துச் செல்கின்றது. இது கூர்ம அவதாரம்.


ஆக அதே சமயத்தில், கூர்மையாக நாற்றத்தைப் பார்க்கின்றோம். அதனின் உணர்வு வலுவாகச் சுவாசித்தால், வராக அவதாரம். அதனுடைய வலிமை கொண்டு, நாற்றம் நாற்றம் என்று நீ போகின்றாய்.


அவ்வாறு சென்று, கூர்மை அவதாரத்திற்கும், வராக அவதாரத்திற்கும், இரண்டுக்கும் இணை சேர்த்து, அதிலே நீ எதைக் கூர்மையாக எண்ணுகின்றாயோ, அதனின் உணர்வு உனக்குள் சென்றவுடன், ஈசனான உயிர், அதை வலுவாக்கி, அதனின் நிலைகள் கொண்டு, அதே எண்ணத்தை எண்ணும் பொழுது, இந்தக் கண் என்ன செய்கின்றது? இதையே எடுத்து, நுகர்ந்து, “அய்யய்ய” என்கிற பொழுது, விலக்கிச் செல்லும்.


நீ எதை நினைக்கின்றாயோ, அதுவாகின்றாய். இந்தச் சாக்கடையை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்று எண்ணுகின்றாய். ஆனால், எடுத்துக் கொண்ட உணர்வே, இங்கே சாக்கடையாக உள்ளே நுகர்கின்றது, என்ற இந்த நிலையை அங்கே பக்குவப்படுத்துவதற்காக, அந்தச் சாக்கடைப் பக்கமே, இவ்வளவு உபதேசம் கொடுக்கின்றார் குருதேவர்.


இதே மாதிரிப் பார்த்துவிட்டு, எனக்குக் காபி, அவருக்கு டீ, இரண்டையும் சாக்கடைக்குப் பக்கத்தில் வைத்து, அதிலே சாக்கடையிலிருந்து அள்ளிப் போட்ட, குப்பை இரண்டைப் போட்டு, என்னைக் “குடி” என்கின்றார் குருதேவர்.


அப்பொழுது, என்னுடைய பார்வை என்ன செய்கின்றது? இந்தச் சாக்கடையையும் பார்க்கின்றேன், ஆள்களையும் நினைக்கின்றேன். இவரிடம் சிக்கிக் கொண்டேன் என்று நினைக்கின்றேன். இந்தக் காபியை எவ்வாறு குடிப்பது? என்றும் என்ணுகின்றேன்.


இதைத்தான் கீதையிலே, நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய் என்றது. இப்பொழுது, அவர் சாக்கடையைக் குடி என்கிறார். அதை எண்ணியவுடனே, எவ்வாறு குடிப்பது என்று விலக்கிச் செல்கின்றது.


ஆக இந்த எண்ணத்தால், அவ்வாறே திகைத்துக் கொண்டு இருக்கின்றேன். காபியில் இதை அள்ளிப் போட்டார். குடிக்க முடியவில்லை. எல்லோரும் நைனாவிற்குப் (சாமிகளுக்கு) பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்கின்றார்கள். ரோட்டில் போகின்றவர்கள், பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். இதையும் கேட்கின்றேன்.


அப்பொழுது, நான் நகர்ந்து செல்கின்றேன். போகப் போக, இந்தப் பக்கம் போகலாமா? அந்தப் பக்கம் போகலாமா? இந்த மனம் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அப்பொழுதுதான், உணர்வின் இயக்கங்கள் நாம் எதை எண்ணுகின்றோமோ, அதை உயிர் இயக்கி, உடல் முழுவதும் பரவச் செய்து, தன் இனத்தை எவ்வாறு எண்ணுகின்றோமோ, அதே இனம் நமக்குள் நின்று, அதே இயக்கமாக எவ்வாறு இயங்குகின்றது? என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார், குருதேவர்.


அப்பொழுது, அந்த நிலையிலிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி? என்று பார்த்தேன், முடியவில்லை.


“சரி, நீ போய் டபாரா செட்டைக் கொடுத்துவிட்டு வா” என்றார் குருதேவர்.


கடையில் கொண்டு போய்க் கொடுத்தால், வாங்கவா செய்வார்கள்? நீ உன் வீட்டிலேயே வைத்துக் கொள் என்றார்கள். டபரா செட்டிற்குக் காசு கொடுத்தேன். வாங்க மாட்டேன் என்றார்கள். இவ்வாறாகி விட்டது.


அப்பொழுது, நீ வரும் பொழுது, கொஞ்சம் முறுக்கு, கடலைப் பருப்பு, பொட்டுக் கடலை வாங்கிவா, என்றார் குருநாதர். மூன்றையும் வாங்கிக் கொண்டு வந்தேன். சாக்கடை அருகில், ஏழெட்டுக் கோடு போடச் சொன்னார். முதலில், பொட்டுக் கடலையைச் சாக்கடையில் போடச் சொன்னார். இரண்டாவதாக, முறுக்கைச் சாக்கடையில் போடச் சொன்னார். மூன்றாவதாக, நிலக்கடலையைச் சாக்கடையில் போடச் சொன்னார்.


அங்கிருந்து பன்றி வருகின்றது வந்தவுடனே, ஒவ்வொன்றாக மோந்து பார்க்கின்றது. அப்பொழுது, பொட்டுக் கடலை முன்னால் இருக்கின்றது. அதை விட்டுவிடுகின்றது.


அடுத்து, முருக்கு, வேகமாக எணணெய் வாசனை வருகின்றது. நாற்றத்திற்குள் இதைக் கண்டுபிடித்துப் போகின்றது. அந்த முறுக்கை எடுக்கின்றது.


அடுத்து, எண்ணெய் வாசனை இருக்கின்றது. கடலைப் பருப்பைச் சாப்பிடுகின்றது. அடுத்துப் பொட்டுக்கடலை இருக்கின்றது. அதை விட்டுவிட்டது. மாற்றி, அந்த வாசனையைத்தான் நுகர்ந்து எடுக்கின்றது.


சாக்கடைக்குள் பார்த்தாயா? என்றார் குருநாதர். அது நாற்றத்தை எடுக்கவில்லை, நீ எதை எடுக்கின்றாய்? என்றார். காபி இருக்கின்றது, நீ பிரித்துப் பார்க்க முடியவில்லை, உன் உடல், நீ ஆகாரம் சாப்பிட்டவுடனே, சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள நாற்றத்தை, உன் உடல் பிரித்துவிடுகின்றது.


உன் உடலிலிருந்து, வரக்கூடிய ஆறாவது அறிவு, இதைப் பிரிக்கக் கூடிய சக்தியாக இருக்கின்றது. நீ ஏன் இதைப் பிரிக்க முடியவில்லை? என்று கேட்கின்றார் குருநாதர். நான் என்ன பதில் சொல்வது?


நமது குருநாதர், சாக்கடைக்குள் அமர்ந்து, உண்மை நிலையை எமக்கு எடுத்துக் காட்டினார். சாக்கடைக்குள் இருக்கும் நல்ல பொருள்களை, பன்றி எப்படி நுகர்ந்து எடுத்து, நல்ல உணர்வைத் தனக்குள் எடுத்து, நாற்றமான உடலில் கலந்து, நாற்றத்தை நீக்கிடும் உணர்வுகளை வளர்த்ததோ, அதே போல, பல சரீரங்களைத் தனக்குள் எடுத்து, இதே உயிர்தான், நம்மை மனிதனாக ஆக்கியிருக்கின்றது.


மனிதனாக ஆனபின், சந்தர்ப்பத்தால் ஏற்படும் உணர்வின் நஞ்சு கொண்ட நிலைகளும், உணர்வின் எண்ணத்தால் ஈர்க்கும் செயல்களையும், இதை நீ எவ்வாறு மாற்றுவது? என்றும் மாற்றிக் கொள்ள முடியும் என்ற நிலைகளையும், தெளிவாக எடுத்துக் கூறினார், குருநாதர்.


இதனின் உணர்வின் ஆற்றலை, நீ எண்ணத்தால் எப்படிப் பன்றி, சாக்கடையில் உள்ள நாற்றத்தைப் பிளந்து, நல்ல உணர்வை நுகர்ந்த மாதிரி, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும், சாக்கடையான காற்று மண்டலத்திலிருந்து, நல்லவற்றை எடுக்கக் கற்றுக் கொடுத்தார், நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.


இதிலே, நாம் எந்தக் குணத்தைக் கொண்டு எடுக்கின்றோமோ, அதே குணம், அந்தக் குணத்தின் உணர்வின் தன்மையாக இயங்கி, நமக்குள் எடுத்துக் கொள்ளும்.


இன்று கழிவுப் பொருள்களை எடுப்பவர்கள், கழிவுப் பொருள்களின் நிலைகளில் இருந்தாலும், கழிவுப் பொருளை நுகர்வது இல்லை. அதை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இருக்கும் பொழுது, கழிவுப் பொருளின் மணம், அவர்களுக்கு வருவதில்லை.


கழிவுப் பொருளை எடுத்ததை நாம் பார்த்தவுடன், “ஐய்யய்யோ நாற்றமாகின்றது” என்று சொல்லி, இந்த நாற்றத்தை உடலுக்குள் கலக்கவிட்டு, கழிவுப் பொருளின் சத்தையெல்லாம் நமக்குள் சேர்த்துக் கொள்கிறோம்.


ஆக, எதனின் உணர்வை நாம் சேர்க்கின்றோமோ, அந்த உணர்வின் தன்மை நமக்குள் சென்று, நமக்குள் நாற்றமாகும் நிலையும், நாற்றத்தைக் கண்டு, வெறுப்பின் நிலையில் எண்ணங்கள் உருவாகும் பொழுது, யாரைப் பார்த்தாலும், அசிங்கமாகத் தெரியும். “இது சுத்தம் இல்லை, அது சுத்தம் இல்லை” என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் உடலில் பாருங்கள். நாற்றம் வந்து கொண்டே இருக்கும். சட்டைத் துணியினை, நுகர்ந்து பாருங்கள், நாற்றம் இருக்கும்.


நாற்றத்தைப் பிடிக்கவில்லை என்று, நாற்றத்தைத்தான் நுகருகின்றார்கள். இதுவெல்லாம், நாம் எடுத்துக்கொண்ட உணர்வின் இயக்கங்கள்,


அப்பொழுதுதான், வராக அவதாரமும், கூர்மை அவதாரமும், எதைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ, அதனின் வலுக்கொண்டு, அதனின் வலிமையாக, அடுத்த உருவை உருவாக்குகின்றது என்ற நிலையை அங்கே காட்டுகின்றார் குருதேவர்.