Pages

நம்மையறியாமல் இயக்கும் உணர்வுகள்



1. பிறரைத் துன்புறுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகள்
குமாரபாளையத்தில் யாம் சுற்றுப்பயணம் செய்யும்போது, பண்டரி கோவிலில் இருக்கும் பொழுது, ஒரு அம்மா வரும். அந்த அம்மா, “ஐய்யய்யோ, எனக்கு உடம்பெல்லாம் எரியுதே” என்று விழுந்தடித்து ஓடி வரும்.


சாப்பிடப் போய் உட்கார்ந்தால் போதும், உடம்பெல்லாம் எரியும். அந்த அம்மாவின் வீட்டுக்காரர், இந்த அம்மா சொன்னபடியெல்லாம் கேட்பார். ஆனால், இந்த அம்மா, தன் மாமியாருக்குச் சாப்பாடு போடாதபடி, உதை உதை என்று உதைத்து, சாகப்போகும் பொழுது, இந்த நிலைகளிலே இறந்தது.


அனுபவத்திற்காக வேண்டி, யாம் உலகம் முழுவதற்கும் சுற்றி, “ஒவ்வொரு மனிதனுடைய உணர்வும், எப்படி இயங்குகின்றது? என்று, ஒவ்வொரு ஊரில் தங்கியிருந்து, கண்டறிந்த உண்மையை யாம் சொல்லுகின்றோம். அதே குமாரபாளையத்தில் கூட பல எதிர்ப்பு, பல துன்பங்கள் எப்படியெல்லாம் வந்தது என்று, அங்கிருந்தோருக்கும் தெரியும்.


ஏனென்றால், உண்மையை அறிவதற்காக, ஒரு மனிதன் தன்னையறியாது, அந்த உணர்வின் செயல்கள் எவ்வாறு இயங்குகின்றது? என்று அறிந்து உணர்வதற்குத்தான், யாம் மூன்று இலட்சம் பேரைச் சந்திக்க வேண்டியிருந்தது.


ஒரு மனிதனுக்குள் இருக்கும் உணர்வலைகள் எவ்வாறு இயங்குகின்றது? அதை நாம் எப்படியெல்லாம் கண்டறிவது? அந்த உணர்வின் தன்மையினுடைய நிலைகளை, நமது குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு, இதை யாம் அறிந்துணர்ந்தோம்.


ஆகையினால், இப்பொழுது யாம் ஒவ்வொரு மனிதனுக்கும், அவர்களை அறியாமல் இயக்கக்கூடிய ஆற்றலிலிருந்து, தன்னைத் தானே மீட்டுக் கொள்வதற்கு, இந்த நிலைகளைச் செய்கிறோம்.


ஆக, அந்த அம்மா வந்தவுடனே, பார்த்தவுடனே, கப கப என்று எரியும். அங்கிருந்து விழுந்து, எழுந்து ஓடும். பிறகு யாம், நீ வீட்டில் போய்
உன் மாமியாரை நினைத்து,
அவர் உயிராத்மா நல்ல நிலைகள் பெறவேண்டும்,
எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி, அந்த உயிராத்மா பெறவேண்டும்.
வீட்டில் வைத்து இதைப் போன்று எண்ணுங்கள் என்று சொன்னோம்.


அவ்வாறு செய்து வந்த, பத்து நாட்களுக்குள் நன்றாக இருக்கும். பத்து நாள் கழித்து, யாம் சொன்ன மாதிரி செய்ததை விட்டுவிட்டால், மறுபடியும் விழுந்தடித்து ஓடி வரும். இது யாம் கண்ட அனுபவம். இதை விட்டுவிட்டால், மறுபடியும் வரும்.


இதே மாதிரித்தான் ஒவ்வொரு அனுபவமும். இதைப் போன்று, ஒவ்வொரு மனித உடலுக்குள் இயங்குகின்றது. நாம் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் அந்த நிகழ்ச்சியை நடத்திவிடும். அதிலிருந்து மீட்டுக் கொள்ளும் வழியைப் பின்பற்ற வேண்டும்.


மெய்ஞானியின் அருள் சக்தியை, நீங்கள் பெற்றுக் கொண்டால்தான், எப்பொழுதெல்லாம் உங்களையறியாமல், துன்பங்கள் வந்து, உங்களைத் துன்புறுத்துகின்றதோ, அப்பொழுது, ஆத்ம சுத்தி என்ற இந்த ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள்.


அப்படி ஆத்ம சுத்தி செய்யும் போது, உங்களைத் துன்புறுத்தும் இந்த உணர்வின் ஆற்றலை மாய்த்து, உங்கள் சொல்லுக்குள் மனவலிமை பெற்று, யார் உங்களைத் துன்புறுத்துகின்றார்களோ, நீங்கள் எடுக்கும் இந்த அருள் உணர்வுகள் அவருக்குள் ஊடுருவி, துன்புறுத்தும் ஆற்றலை அங்கு குறைத்து, உங்களுக்குள் இன்புறச் செய்யும்.


அந்த நல்ல உணர்வின் ஆற்றலை, நீங்கள் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். இதை, நீங்கள் ஒவ்வொருவரும் பின்பற்றுங்கள். உங்களை நீங்கள் நம்புங்கள் தாய் தந்தையைத் தெய்வமாகக் கருதுங்கள். உங்கள் உயிரை, ஈசனாக மதியுங்கள். உங்கள் உடலைக் கோவிலாக மதியுங்கள்.


ஒவ்வொரு நிமிடமும், “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணினால், உங்களுக்குள் மகிழ்ச்சியும், மனவளமும் பெருகி, இந்த வாழ்க்கையின் புனிதத் தன்மையை, உங்களுக்குள் நீங்கள் காணலாம்.



2. தீமையான உணர்வுகள் நல்ல அணுக்களை விஷமாக மாற்றும் நிலை
உதாரணமாக, பெண்கள் தங்களது குழந்தைகள்மீது அன்பாக இருப்பார்கள். பாசமாக இருப்பார்கள். ஆனால், பையன் சேட்டை செய்யும்பொழுது, “சும்மா சேட்டை செய்கிறானே, தொலைஞ்சு போறவன்”. என்று, பெண்கள் தங்களது பையனைப் பேசிவிடுவார்கள்.


தம் குழந்தை மேல் பாசமாக இருந்தாலும், கோபத்தில் “தொலைஞ்சு போறவனே” என்ற வார்த்தையை சுலபமாகச் சொல்லிவிடுவார்கள்.


இதே போன்று, மாமியார் மருமகளைப் பார்த்து, ஒரு வேலையாக “ஏம்மா இப்படிச் செய்கிறாய். அதைச் செய்தால் என்ன” என்று, ஒரு முறைக்கு இரு முறையாகச் சொல்லிவிட்டால், போதும்,


உடனே மருமகள் “சும்மா சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி, நான் செய்ய மாட்டேனா எனக்குத் தெரியாதா?” என்று வெறுப்பை வெளிக்காட்டி விடுவார்.


ஆக, இந்த உணர்வின் அலைகள் புவியின் ஈர்ப்பால், வீட்டில் பதிந்துவிடுகின்றது. பதிந்தபின், இந்த உணர்வுகள் அலைகளாக வெளிப்படுகின்றது.


நுகர்ந்த உணர்வுகள் அங்கே வெறுப்பாகின்றது. வெறுப்பான உணர்வுகள், இருவரிடத்திலும் படரப்படும் பொழுது, அது அவர்களிடம் விஷ அணுக்களை உருவாக்கத் தொடங்குகிறது, அவர்களது உடலில் நல்ல குணத்திற்கு, எதிர்மறையான உணர்வுகள் மோதும் பொழுது, அவர்களது உடலில் அரிப்பு வரும்


சில வீடுகளில் சங்கடமும், சஞ்சலமும் இருந்தால் போதும். அங்கிருப்பவர்களுக்கு உடலில் அரிப்பு வரும். பார்க்கலாம். அதுவும் சிறிது நாள் சென்றால், அவர்களுடைய தலைகளில் சீலைப் பேனாக மாறிவிடும். வீட்டில், சஞ்சலமும், சலிப்பும், சங்கடமும், வேதனையும் கொண்டவர்களுடைய தலையில், நிச்சயம் பேன் வரும்.


சந்தோஷத்தை உருவாக்கிப் பாருங்கள். பேன் இருக்கும் இடம் தெரியாமல், காணாமல் போய்விடும். ஏனெனறால், பேனிற்கு மனிதரின் சந்தோஷமான உணர்வுகள் எதிரி.


வீட்டில் சலிப்பு, மாமியாரின் கோபம், பையனின் சேட்டை, கடை வியாபாரத்தில் மந்தம், பக்கத்து வீட்டுக்காரரின் வம்பு, என்று பலவற்றை எண்ணி, சலித்து, வெறுத்துப் பேசிக் கொண்டிருந்தால் போதும், நிச்சயம் அவர்கள் தலையில் பேன் வரும்.


அந்தப் பேன் அவர் தலையை விட்டு இறங்கினால், அடுத்து சஞ்சலம் கொண்ட, இன்னொருத்தரிடம்தான் போகுமே தவிர, மற்றவர்களைப் பார்த்தால், அஞ்சி ஓடிவிடும். ஒரு வீட்டில் நாலைந்து பேர் இருந்தாலும், சஞ்சலம் கொண்டவரிடத்தில் மட்டுமே, பேன்கள் உருவாகும்.


இது எதனால் ஆனது? நமக்குள் எடுத்துக் கொண்ட மூச்சையும், நாம் வெளிப்படுத்தும் எண்ண ஒலி அலைகளையும், சூரியனின் காந்தச் சக்தி எடுத்து வைத்துக் கொள்கின்றது. மீண்டும், அதை நம்முள் சேர்த்தவுடனே, அது ஜீவ அணுவாக மாறுகின்றது.


நம் உடலிலிருந்து வந்தது, நம் உடலிலேயே பாய்கின்றது. இந்த உணர்வின் தன்மையை ஒட்டி, இதனுடைய சக்தியை எடுத்து, அது அணுவாக மாறுகின்றது. நம் உடலுக்குள் வந்து, சாப்பிட ஆரம்பிக்கின்றது. இதை நாம் தெரிந்து கொள்வது நலம்.