Pages


(நவம்பர் 1999)

மிருகங்களில் ஆண், பெண் என்ற நிலை இருக்கப்படும்பொழுது, ஆணுக்கு, ஆணே போர் செய்கின்றன. பெண் மிருகங்களை, போரில் இணைப்பதில்லை.


மிருகங்களில் ஆணுக்கு, ஆண்தான் மோதுகின்றதே தவிர, பெண் பாலை அரவணைத்தே செல்கின்றது. ஆனால், மனிதர்களாக இருக்கும் நாம், பெண்களைத் துன்புறுத்தும் நிலையே இருக்கின்றது.


பெண்களைத் துன்புறுத்தும் நிலையில், வேதனை என்ற உணர்வுகள் கலந்தால், ஆண், பெண் என்று இருவருடைய உணர்வுகளிலும், வேதனை என்ற விஷத்தின் தன்மை கலக்கின்றது என்பதை உணர்வதில்லை.


காரணம், பெண்பாலில் உருவாகும் வேதனை என்ற விஷத்தின் தன்மையினை, ஆண்பால் நுகர நேர்ந்தால், வெறுப்பாகவோ, வேதனையாகவோ இருந்து, அதனின் விஷத்தன்மை அதிகரித்து அங்கே படர்கின்றது. பெண்பால் வேதனை என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது, கேட்போர் மற்றும் வேடிக்கை பார்ப்போரின் உணர்வுகளிலும்கூட, அது பதிவாகின்றது.


ஆகவே, பெண்களைத் துன்புறுத்தும் நிலையினை விடுத்துப் பழகவேண்டும். ஏனென்றால், பெண்பால் எத்தகைய துன்பங்களை அனுபவிக்கின்றதோ, அதன் உணர்வின் தன்மையினை வெளிப்படுத்தும் பொழுது, இந்த வேதனையின் உணர்வுகள் புவியின் காற்றில் பரவுகின்றது.


பெண்களைத் துன்புறுத்தும் உணர்வுகள் அதிகரித்தால், ஆண்களும் நரகவேதனை என்ற நிலைகளை, அனுபவிக்க நேரும்.

ஒவ்வொரு குடும்பத்திலும், பெண்கள் திருமணமானபின், எத்தனையோ துன்பங்களை அனுபவிக்கின்றனர். இவர்கள் விடும் மூச்சலைகளெல்லாம், காற்று மண்டலத்தில் படர்கின்றன.


சோகமும், வேதனையும், கொண்ட இத்தகைய உணர்வுகள் காற்றில் படரும்பொழுது, நம் பூமியின் நிலைகளில் மாற்றங்களே ஏற்படும்.


இங்கு மட்டுமல்ல, உலகெங்கிலுமே, பெண் இனத்தைத் துன்புறுத்தும் நிலை இருக்கின்றது. மற்ற உயிரினங்களில், பெண்பாலை அரவணைத்துச் செல்லும் தன்மை இருக்கின்றது. அதனில், அன்பு கலந்த சந்தோஷமும் பெறுகின்றன.


மனிதனானபின், பெண்களைத் துன்புறுத்தும் நிலை அதிகரிக்கும்பொழுது, இதனின் உணர்வுகள் நமது உடலில் மட்டுமல்ல, வேடிக்கை பார்ப்போரின் உடல்களிலும் கூட வேதனையும், சோகமும் உருவாக்கப்படுகின்றது. ஆகையால், இணைத்துக் கொண்ட உணர்வின் தன்மைக்கேற்ப, இப்படி மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமல்லாதபடி, புவியின் காற்று மண்டலத்திலும் கலந்திருக்கும் நிலையில், இதனைச் சாப அலைகள் என்று சொல்வார்கள்.

துன்புறுத்தும் உணர்வுகளும் சரி, வேடிக்கை பார்க்கும் உணர்வுகளும் சரி, இன்று மனிதருக்குள் தீய உணர்வின் தன்மை அதிகரிக்கும் நிலைகளில், மனிதர்களிடையே ஒருவருக்கொருவர் கொன்று குவிக்கும் நிலையே வருகின்றது.


இவைகள் அனைத்தையும் நாம் சிந்தித்து, பெண்பால் என்ற உணர்வினை அரவணைத்து, அன்பு கலந்த உணர்வினைச் சேர்த்து, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்கி, இருளை அகற்றி, நம்மையும், நம் நாட்டு மக்களையும், இனிப் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையச் செய்வோம்.


இன்று விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. இரும்பு உலோகத்தில், தென் துருவம், வட துருவம் என்பது, வட துருவத்தில் இருக்கக் கூடிய காந்தப்புலன், ஈர்க்கும் சக்தி பெற்றது, தென் துருவத்தில் இருக்கக்கூடிய காந்தப்புலன், ஒதுக்கும் சக்தி பெற்றது. சூரியனின் நிலைகள் வரப்படும் பொழுது, இதனுடைய அளவுகோல்படி, மிதக்கும் தன்மை வருகின்றது.


இன்று, காந்தத்தின் துருவங்கள் ஒன்றைக் கண்டு, ஒன்று அழுத்தங்களாக இருக்கின்றன. ஒரு காந்தப்புலனுக்குள், மறைந்துள்ள இத்தகைய ஆற்றலை மனிதர்கள் கண்டுணர்ந்து, அதற்குத் தக்க எந்திரங்களை உருவாக்குகின்றனர்.


நமது பூமி, மற்ற பொருள் தனக்கு கிடைக்கும் நிலையில், தன் வெப்பத்தின் துணை கொண்டு, அதனைத் தன்னில் இணைத்து வாழும் தன்மை கொண்டுள்ளது. ஆண், பெண் என்ற நிலைகளில், பெண்களும் ஆண்களை மதித்து, அவர் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கங்களைக் கொண்டால், ஆண்கள் உயரந்த நிலைகள் பெறுகின்றனர், தொழில் வளம் பெறுகின்றனர், குடும்பத்தில் மகிழ்ச்சி என்ற நிலை உருவாகின்றது.


மகரிஷிகள் என்பவர்கள், தாங்கள் காட்டிற்குள் வசித்தாலும், கணவனும், மனைவியுமாக ஒன்று சேர்ந்து வாழ்ந்து, உணர்வின் சக்தியினை வளர்த்தனர். அதன் தொடர் கொண்டே, நமக்கு காவிய தொகுப்புகள் கிடைத்தன.


ஆனால். பிற்காலத்தவர்களோ, இந்தக் காவியத் தொகுப்புகளை அவரவர் நலங்களுக்கேற்ப மாற்றியமைத்து, உண்மைகளை மறைத்துவிட்டனர். இதன் நிலையாக, இன்று மனித இனமே அழிந்து போகும் நிலைக்கு, பிரபஞ்சம் முழுவதும் விஷத் தன்மை கொண்டதாக, மாறிவிட்டது.


தான் சுகமாக வாழவேண்டும், என்ற உணர்வின் அறிவுகள் வளர்ந்து, வளர்ந்து, தீமைகளை அடக்கி, உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற இந்த மனிதச் சரீரத்தில், நாட்டாசையும், உடலாசையும், பொன்னாசையும், பெண்ணாசையும் கொண்ட உணர்வின் தன்மையை வளர்த்து, மனித குலத்தைச் சீர்குலைத்து அழிக்கச் செய்யும் நிலைகளையே, வளர்த்துள்ளனர். மனித குலத்தையே கூண்டோடு அழிக்கச் செய்யும் மிருக உணர்வுகள், புவியில், துரித நிலைகளில் இயங்கிக் கொண்டுள்ளது.


இந்த சந்ததிக்குப்பின், பெரும்புயல்களை போன்று, சூறாவளிகளைப் போன்று, பெரும் நில நடுக்கங்களைப் போன்று உருவாகி, பெரும், பெரும் கட்டிடங்களே நொறுங்குவது போன்று, மனித உணர்வின் தன்மை சீர்குலைந்து, மனிதனுக்கு மனிதன் நொறுங்கி மடியும் தன்மையும், மனித இனமே கூண்டோடு அழியும் தன்மையும், வந்துகொண்டே இருக்கின்றது.


இது போன்ற தீமைகளிலிருந்து, நாம் அனைவரும் மீளவேண்டும். நமது குருநாதர் காட்டிய அருள்வழியில், ஒவ்வொரு குடும்பத்திலும், கணவனும், மனைவியும் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைக் கவர்ந்து, உயர்ந்த நிலைகளைத் தங்களுக்குள் உருவாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.


இதற்காகத் தான், குருநாதர் நமக்கு நல்வழியைக் காண்பித்தார். ஆகவே, ஒவ்வொரு நிமிடமும், பெண்கள் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று எண்ணி, நாமும் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று எண்ணினால், நமக்குள் உயர்வு தரும்.


ஏனென்றால், குறுகிய காலமே நமக்கு இருக்கின்றது. இராமாயணத்தில், இராமன் நேரமாகிவிட்டது என்று, இராமேஸ்வரத்தில், இதுவே கடைசி நிலை என்று மணலைக் குவித்து, சிவலிங்கம் அமைத்து பூஜித்தார் என்று காண்பிக்கப்பட்டது. ஏனென்றால், இராமன் என்ற எண்ணங்கள், இந்த மனித உடலில் கடைசி நிலையில் இருக்கின்றது.


ஆகவே, “நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்” என்ற உணர்வை நமக்குள் கலந்துவிட்டால், கடைசி என்ற நிலைகள் வரும், “தனுஸ்கோடி”. ஆக, நம்முடைய கடைசி எண்ணத்தின் நிலைகளாக, துருவ நட்சத்திரத்தின் உணர்வை, தனுசாக நமக்குள் உட்செலுத்தி, தீமை என்ற நிலைகளை அகற்றி, உணர்வை ஒளி என்ற நிலைகளில் மாற்றி, இனிப் பிறவி இல்லை என்ற நிலைக்கு நாம் அனைவரும் செல்ல வேண்டும். 


(டிசம்பர் 1999)
ஜாதகம், ஜோசியம் பார்த்து மணமக்களுக்கு எல்லாப் பொருத்தங்களும் இருக்கின்றதா என்று பார்த்து, நல்ல நேரம் பார்த்துதான் திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.


ஆனாலும், திருமணம் முடிந்து வந்தவுடன், இல்லற வாழ்க்கை தொடங்கும் காலத்தில், இல்லத்தில் பல இன்னல்கள் வந்து சேர்கின்றன. இதனால், கணவன், மனைவிக்குள் வேறுபட்ட உணர்வுகள் தோன்றுகின்றன. இப்படி வேறுபட்ட உணர்வுகள் வரும் பொழுது, பெரும்பாலான பெண்கள் அனுபவிக்கும் அவஸ்தைகளாலும், வேதனைகளாலும் வெளிப்படும் உணர்வுகள் எல்லோரையும்தான் சாரும்.


ஏனென்றால், பெண்கள் வெளிப்படுத்தும் வேதனையின் உணர்வுகளை, சூரியனின் காந்தப்புலனறிவுகள் கவர்ந்து வைத்துக் கொள்கின்றன. நாம் இவ்வேதனையின் உணர்வுகளை கேட்டறிய நேரும் பொழுது, இவ்வேதனையின் உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகின்றது. பதிவின் நிலைகொண்டு, நாம் நுகர்கின்றோம். ஆகவே, நம்மை அறியாமலே அவர்களுடைய வேதனைகளை நுகர்ந்து, நமக்குள்ளும் வேதனையான உணர்வுகளாகவே மாற்றிவிடுகின்றோம். அதனின் உணர்ச்சியும் நம்முள் அதிகரித்து விடுகின்றது.


கணவனும், மனைவியும் பிரிந்து வாழ்பவர்களாக இருந்தால், அது சமயம், வெறுப்பு என்ற நிலைகளோ, வேதனை என்ற உணர்வுகளோ இல்லாதபடி, காலையில் துருவ தியானத்தில் அமர்ந்து, “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நான் பெறவேண்டும், என் கணவர் / மனைவி பெறவேண்டும், எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும், எங்கள் வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறவேண்டும்” என்ற உணர்வினை இருவரும் பெருக்குதல் வேண்டும்.


ஆக, இது போன்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை தங்களுக்குள் பெருக்கி, இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறுங்கள். நாம் நமது வாழ்க்கையில், இயற்கையின் உண்மைகளை, அறிந்து கொள்தல் வேண்டும்.


வெப்பம், காந்தம், விஷம் என்று இந்த மூன்று நிலைகளும் இணைந்து, ஒரு அணுத் தன்மை அடைகின்றது.
காந்தம் “ஆதிலஷ்மி”, எதையும் ஈர்க்கும் சக்தி கொண்டு, எதனையும் தன்னுள் இழுத்து வளர்க்கும் தன்மை என்றும்,
வெப்பம் “ஆதிபராசக்தி”, அனைத்தையும் உருவாக்கும் தன்மை பெற்றது என்றும்,
விஷம் “ஆதிசக்தி”, எதனிலும் மோதலாகி, அது இயக்க உணர்வுகளை இயக்கும் என்றும்
நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
அதாவது, பெண்பால் ஆகித்தான், ஆண்பால் ஆகின்றது. ஆகவே பெண்பால் என்னும் பொழுது, அது தாயாகின்றது. பெண்பால், தான் தாய் என்னும் நிலையில், தன் குழந்தைகளையோ, மற்ற நிலைகளையோ, சீர்படுத்தி வளர்க்கும் நிலையில் செயல்படுகின்றது. ஆகவே, நாம் பெண்களைத் தாயாகவும், நம்மை ஒரு சேயாகவும், மதித்து பழகுதல் வேண்டும்.


இது போன்று, பெண்கள் ஒவ்வொருவரும், தான் ஒரு தாயாகவும், தான் ஒரு சேயாகவும் இருந்து பழகுதல் வேண்டும் என்பதைத்தான், இராமாயணமும் மற்ற காவியங்களும் நமக்கு உணர்த்துகின்றன.


ஆகவே, நம்முடைய எண்ணங்களை ஒன்று சேர்த்து, இணைத்த உணர்வின் தன்மை கொண்டுதான், நாம் விண் செல்ல வேண்டும்.


ஆகவே, நாம் தினமும் அதிகாலையில் சிறிது நேரமாவது, துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டு வருவோமேயானால், நமக்குள் அருள் உணர்வுகள் பெருகும். நம்மையறியாது சேர்ந்த இருளை நீக்கி, இல்லத்தில் ஒன்று சேர்ந்து வாழும் தன்மை உருவாகும். அங்கே மகிழ்ந்து வாழச் செய்யும், உணர்வுகள் படரும்.


ஒரு இல்லத்தில், பெண்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பொழுது, அந்த இல்லம் சொர்க்கலோகமாக மாறுகின்றது.


அந்த இல்லத்தில் உள்ள பெண்களில், யாரேனும் வாட நேர்ந்தாலும் அந்த இல்லமே, குடும்பமே நரகலோகமாக மாறிவிடும். ஆகவே, நாம் பெண்களைத் துன்புறுத்தும் நிலைகளிலிருந்து விடுபட்டு, பெண்களை உயர்வாக எண்ணிப் பழகுதல் வேண்டும்.


ஆகவே, இல்லத்தில் பெண்களை எந்தளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கச் செய்கின்றோமோ, பெண்களிடத்தில் அன்பு கலந்த உணர்வுகளைச் செலுத்துகின்றோமோ, இதனின் உணர்வுகள் கொண்டு,
அங்கே ஒன்று சேர்ந்து வாழும் தன்மையும்,
இருளை அகற்றும் சக்தியும்,
அருள் ஞானத்தைப் பெருக்கும் நிலையும்,
குடும்பத்தைச் சீர்படச் செய்யும் பண்புகள் வளரவும்,
அன்பின் உணர்வுகள் நமக்குள் பெருகவும்,
மகிழ்ந்து வாழ செய்யும் உணர்ச்சிகள் வளரவும்,
பிறவியில்லா நிலை என்ற நிலைக்கு அழைத்து செல்லும் சக்தியும், பெண்களுக்கு உண்டு.


ஆகவே, நீங்கள் பெண்களை மதித்து நடங்கள், ஆதிசக்தி அதுதான்.


இந்தச் சக்தியின் தன்மை வரும் பொழுதுதான், உடல் சிவமாகின்றது. நுகர்ந்த உணர்வுகள் பிரம்மமாகின்றது. பிரம்மத்தின் தன்மை உடலாகின்றது. எந்த குணத்தின் தன்மை உடலானதோ, அதனின் உணர்ச்சியாக, ஞானமான சரஸ்வதி, நம்மை வழிநடத்திச் செல்லும் என்பதை, நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.




ஒரு குடும்பத்தில், தாய்மார்கள் சில நிலைகளில் வெறுப்படைந்து விட்டால், அந்த இல்லத்தில் இருக்கும் முதியவர்கள், குறைகளின் உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றனர்.

இப்போது என்ன செய்கிறார்கள் என்றால், வீட்டிற்கு ஒரு மருமகள் வருகிறாள் என்றால், அந்த வீட்டிலிருக்கும் முதியவர்கள், மருமகளாக வந்த பெண்ணிடத்தில் குறைகளைக் கண்டு, குறை கூறும் நிலையில், அங்கே குறையின் உணர்வுகளே வந்துவிடுகின்றது.

முதியவர்களாக இருப்பவர்கள் அனைவரும், இந்த உடலை விட்டு செல்லும் பொழுது, எதைக் கொண்டு செல்லுகின்றோம் என்பதை சிந்திக்க வேண்டும்? முதுமை நிலையில் இருக்கும் நாம், நமக்குள் தெளிந்துணர்ந்து வளர்ந்த நாம்,

காலையில் துருவ தியானத்திலிருந்து,

“தன் மகன், மருமகளுடன் இருமனமும்

ஒரு மனமாக ஒன்றுபட்டு வாழவேண்டும்,

தெளிந்த மனம் பெறவேண்டும்,

தெளிவான வாழ்க்கை வாழவேண்டும்”

என்று முதியவர்கள், இதனின் உணர்வுகளை பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.




ஏனெனில், ஒரு குடும்பத்தில், பெண்கள் வாடிய நிலைகளிலிருந்தால், அவர்கள் எத்தகைய பயிர் செய்தாலும், அது வாடியே போகும். நல்ல பலன் இருக்காது. பெண்கள் வாடிய முகத்துடன் இருக்கும் பொழுது, செய்யும் தொழிலும் சிறப்பாக இருக்காது, அந்தத் தொழிலும் குன்றிவிடும்.




ஆகவே, அருள்ஞானிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து, நமக்குள் ஒன்றுபட்டு வாழும் நிலையும், வீட்டில் மகிழ்ச்சியான உணர்வுகள் பெறவேண்டும் என்ற உணர்வுகளையும், நமக்குள் எடுத்துப் பழகுதல் வேண்டும்.




இது போன்று செய்து வரும் பொழுது, நமது இல்லத்தில் செய்வினைகள் இருந்தாலும் சரி, தோஷங்கள் ஆகிவிட்டது அல்லது நம்மை அறியாமலேயே சாப வினைகள் ஆகிவிட்டது, என்பது போன்ற, எத்தனை பெரிய நிலைகள் இருந்தாலும் சரி, அருள் மகரிஷிகளின் அருள் துணை கொண்டு, இத்தகைய தீய நிலைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.




குடும்பத்தில் உள்ளோர் அனைவரும், “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்” என்ற உணர்வினை தினமும் எடுத்து பழகுதல் வேண்டும். இது உங்களிடத்தில் எத்தனையோ நற்பயன்களை விளைவிக்கும்.

உண்மையான யாகம் எதுவென்றால், அந்தக் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும், “துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வைப் பெறவேண்டும்” என்ற உணர்வை, நமது உயிரான நெருப்பினுள் போட்டு, இதனின் உணர்வின் அலைகளை நமது வீடு முழுவதும் பரப்பினால், வீட்டினுள் எத்தகைய சாப நிலைகள் இருந்தாலும், எத்தகைய கொடிய நிலைகள் இருந்தாலும் அவையனைத்தும் அகன்றுவிடும்.

கணவன், மனைவிக்கிடையே, எத்தனையோ வேறுபட்ட உணர்வுகளும், மனஸ்தாபங்களும் இருக்கும். ஒவ்வொரு குடும்பத்திலும், பெண்கள் நரக வேதனையைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வெளியிடும் வேதனையின் உணர்வலைகள், இங்கே புவியில் படர்கின்றது. இது போன்ற வேதனையின் உணர்வுகளை, நாம் நுகர்ந்து அறியும் பொழுது, நம்மிடத்தில் இருள் சூழும் நிலைகள் வருகின்றது என்பதை அறிந்த நாம், இனியாவது,

நமது குடும்பம்,

நமது குழந்தைகள்,

நமது ஊர்,

நமது நாடு

என்ற நிலைகளில் ஒருங்கிணைந்த நிலை பெறவேண்டும், அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழவேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

நமது குடும்பமும், நமது ஊரும் நலம் பெறவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சும் பொழுது, இதனின் உணர்வுகள் ஊர் மக்கள் ஒன்றுபட்டு வாழ உதவும். ஆகவே, நாம் ஒவ்வொரு நாளும்,

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்

நாங்கள் பெறவேண்டும்,

எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்,

எங்கள் ஜீவ ஆன்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும்,

என் கணவர் பெறவேண்டும்,

எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பெறவேண்டும்,

எங்கள் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் பெறவேண்டும்,

எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் பெறவேண்டும்.

இந்த உலக மக்கள் அனைவரும் பெறவேண்டும்

என்று இதனின் உணர்வுகளை, நாம் எல்லோரும் பரப்புவோம்.

இதனின் தொடர் கொண்டு, நமது குடும்பத்திலும், நமது ஊரிலும் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மையும், இருளை அகற்றும் வல்லமையும், மகிழ்ந்து வாழும் தன்மையும் உருவாகும்.

குடும்பமும், ஊரும், நலமாகும் பொழுது நமது உணர்வுகள் அடுத்திருக்கும் ஊரிலும் படர்ந்து, அவர்களையும் பண்படச் செய்து, மகிழ்ச்சியுடன் வாழ செய்கின்றது.

மனிதர்களான நாம், கோடிக்கரை (மனித உடல்) எனும் கடைசி நிலையிலிருக்கிறோம் என்று உணர்ந்து, தனுஸ்கோடி என்னும் கடைசி எண்ணத்தின் நிலைகளாக, அனைவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மை கொண்டு, தம் உயிருடன் ஒன்றிய உணர்வினை ஒளியாக்கி, இனிப் பிறவியில்லை என்ற நிலை அடைதல் வேண்டும். இதனின் உணர்வு கொண்டு, மகரிஷிகள் காண்பித்த அருள்வழியில் செயல்படும் அனைவரும்,

அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று,

இருளை வென்று, மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று,

ஒன்றுபட்டு வாழும் நிலை பெற்று,

மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று,

பிறவியில்லா நிலை என்னும் அருள் சக்தி பெற்று,

பெரு வீடு பெரு நிலை எனும் நிலையைப் பெறும் நிலையாக,

பேரின்பப் பெருவாழ்வாக, வாழ்ந்து வளர்ந்திட எமது அருள் ஆசிகள்.


தொழில்நுட்பம் சம்பந்தமான பாடத்தைப் படிக்கும் பொழுது நீங்கள் “எஞ்ஜினியராக” ஆகின்றீர்கள். விஞ்ஞானம் சம்பந்தமான பாடத்தைப் படிக்கும் பொழுது நீங்கள் “விஞ்ஞானியாக” ஆகின்றீர்கள். மருத்துவம் சம்பந்தமான பாடத்தைப் படிக்கும் பொழுது நீங்கள் “டாக்டராக” ஆகின்றீர்கள்.


இதே போன்று, மெய்ஞானத்தின் உணர்வுகளை உங்களில் வளர்க்கும் பொழுது, நீங்கள் “மெய்ஞானியாகி” மெய்ஞானிகளின் அருள்வட்டத்தில் இணைகின்றீர்கள்.


“தன் உடலைக் காக்கும்” எண்ணத்தாலே, பரிணாம வளர்ச்சியில் மனித பிறப்பைப் பெற்றோம். இந்த மனிதப் பிறப்பில், “தன் உயிரான்மாவைக் காக்கும்” உணர்வை வளர்த்து, ரிஷி நிலை பெறுவோம்.


யாம் உபதேசிக்கும் தத்துவங்களை அறிபவர்கள், தங்களால் இந்த தத்துவங்களைக் கடைப்பிடிக்க முடியுமா? அதன் பலன்களைப் பெற முடியுமா? என்று தங்களுள் தன்னம்பிக்கையின்றி கேள்வி கேட்டு, சோர்வடைந்துவிட்டால், அதுவே உங்களுக்கு தடைக்கல்லாகிவிடும்.


ஆனால், “பெறுவோம், முடியும்", என்ற நம்பிக்கையுடன் கடைப்பிடித்தால், அதன் பலன்கள் உங்களில் நிச்சயம் விளையும்.