பூமிக்கு மனிதனால் வரையப்பட்ட கற்பனை ரேகைகள்.
ஒரு பொருளின்
இருப்பிடத்தைக் குறிப்பிட, குறைந்தது 2 ஆயத்தொலைவுகள் ( 2 Coordinates,
namely X, Y) வேண்டும். உதாரணத்திற்கு வேலைக்கு போகும் அவசரத்தில்
செல்பேசியை எடுத்துக் கொடுக்க மனைவியிடம் சொல்லும்போது, பெட்ரூமில் வலது
பக்கத்தில் உள்ள அலமாரியில் வைத்து இருக்கிறேன், எடுத்துக் கொடு என்று
கேட்போம். இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் அவர் பெட்ரூம் மற்றும் வலது
அலமாரி என்ற இரண்டு ஆயத்தொலைவுகளை வைத்து செல்பேசியின் இருப்பிடத்தை அறிய
சொல்கிறார். அதைப்போல பூமியில் நம்முடைய ஊரின் இருப்பிடத்தை அறிய
அட்சாம்சம் (Latitude), ரேகாம்சம் (Longitude) ஆகிய இரண்டு ஆயத்தொலைவுகளை
பயன்படுத்துகிறோம்.
நாம் ஏற்கனவே கடந்த பதிவில் கூறியதைப்போல
கிரீன்விச்சை ஆதாரமாக வைத்து அதன் வழியாக வடக்கிலிருந்து தெற்காக போகும்
ஒரு கற்பனை ரேகையை பூஜ்ய பாகை ரேகாம்சமாக ( 00.00 degree Longitude)
எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த கோட்டில் இருந்து கிழக்கே 180 பாகைகளும்,
மேற்கே 180 பாகைகளும் (ஆக 360 பாகைகள்) கணக்கிட்டு அதில் எத்தனையாவது
பாகையில் தங்கள் ஊர் உள்ளது என்று சொல்லவேண்டும்.
சென்னை மாநகரம்,
கிரீன்விச்சிற்கு கிழக்கே தோராயமாக 80 ஆவது பாகையில் உள்ளது. அதனைக்
குறிப்பிட ரேகாம்சம் 80 பாகை கிழக்கு என்று குறிப்பிடுவார்கள். (80 degree
East). மிகச் சரியாக சொல்வதென்றால் சென்னை 80° 17' E. அதாவது சென்னை
கிரீன்விச்சிலிருந்து 80 பாகை 17 கலையில் கிழக்கே உள்ளது.