Pages

ராகு-கேது பெயர்ச்சி பொதுப்பலன்



நிகழும் மங்களகரமான நந்தன வருஷம், தக்ஷிணாயனம், சரத்ருது, கார்த்திகை மாதம், 17ம் தேதி(2.12.2012) ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ண சதுர்த்தியும் புனர்பூசம் நட்சத்திரமும் சுப்ரம நாம யோகமும் பவ கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில், உதயாதி காலை 10.53க்கு மகர லக்னத்தில் ராகு பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கும் கேது பகவான் ரிஷபத்திலிருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியாகின்றார்கள். மக்கள் அநேக அரசாங்க சலுகைகளை பெறுவார்கள். மின்சாரத் தட்டுப்பாடு நீங்கி ஒளி பிறக்கும். நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம், கால்நடை வளர்ச்சிப் பெறும்.

இதர துறைகளிலும் நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறும். செவ்வாய் வீட்டில் கேது அமர்வதால் நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் தொல்லைப்படுத்தும் சமூக சீர்கேடர்கள் அழிக்கப்படுவர். ரியல் எஸ்டேட் துறையில் அசுர வளர்ச்சி ஏற்படும். பூமி அதிக அளவிற்கு விலை போகும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும். பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் புதிய மாற்றம் ஏற்படும். நாட்டையே உலுக்கும் அளவுக்கு சில சம்பவங்கள் ஏற்படலாம். பல ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அடிக்கடி முக்கிய கடல்களின் நீர்மட்டங்களில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும்.

அதனால் முக்கிய துறைமுகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம். வயல்வெளியில் வசிக்கும் முட்டையிடும் ஜீவராசிகள் கடுமையாக பாதிக்கப்படலாம். முக்கிய ஆலயங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் 2013ம் ஆண்டு வைகாசிக்கு மேல் முறைப்படி சமாதானம் ஆகும். இவ்வாண்டு நடைபெறும் அலகாபாத் கும்பமேளா சிறப்பான முறையில் நடந்தாலும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. புண்ணிய க்ஷேத்திரங்களில் விபத்துகள் ஏற்படலாம். மலைவாசஸ்தலங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். நிலச்சரிவுகள் ஏற்படலாம். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். ஆனால், அரசாங்கம் அவற்றை பறிமுதல் செய்யும். வெள்ளிக்கிழமைகளில் நல்ல விஷயங்களை ஆரம்பிப்பதும் செய்வதும் நன்மையைத் தரும்.

இந்தோனேஷியா, பர்மா, சுமத்ரா, கரீபியன் தீவுகள், கொரியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா போன்ற இடங்களில் இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்படலாம். வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க தேசங்களில் கலவரங்கள் ஏற்பட்டு மறையும். சனியுடன் ராகு இணைவதால் மத்திய அரசில் குழப்ப நிலைமை உருவாகி, பல புதிய மாற்றங்கள் ஏற்படும். பொன், பொருள், பித்தளை போன்ற உலோகங்கள் விலை கடுமையாக உயரும். நாட்டின் பாதுகாப்புச் செலவை உயர்த்த வேண்டி வரும். அண்டை நாடுகள் அடிக்கடி மறைமுகத் தாக்குதல்கள் நடத்துதலும், அதனை நமது அரசு சாதுர்யமாக கையாளுதலுமாக இருக்கும். எல்லைகளில் நமது ராணுவம் கண்காணிப்பை பலப்படுத்தும்.

நாட்டின் பொருளாதாரம் அவ்வப்போது கடுமையாக பாதிக்கப்பட்டாலும், மே 2013க்குப் பின் மிக வலுவான நிலையை அடையும். பாலைவனத்தில் உஷ்ண நிலை மேலும் அதிகரிக்கும். கடல் அவ்வப்போது உள்வாங்குவதோடு, நீண்ட காலம் நிசப்தமாகவும் இருக்கும். பேப்பர், முடி, விவசாயம் சம்பந்தப்பட்ட பொருட்கள் பற்றாக்குறையாக இருக்கும். வடகிழக்கு மாநிலங்களில் மழை அதிகமாக பொழிந்து சேதம் விளைவிக்கும். அயல்நாட்டு வியாபாரம் செழிக்கும். தென்மாநிலங்களில் அவ்வப்போது கலவரங்கள் உருவாவதும், அவற்றை அரசு அடக்குதலும் நடக்கும்.

ஏரி, குளம், அணைகள் நிரம்பி வழியும். கடுமையான உஷ்ணத்தால் மக்கள் பாதிக்கப்படலாம். மே 2013க்குப் பின் யாத்ரீகர்களுக்கு மிகுந்த நற்காலமாக இருக்கும். காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய க்ஷேத்திரங்களில் கர்ம காரியங்கள் தொய்வின்றி நடைபெறும். வாசனை திரவியங்கள் அதிக அளவில் விற்பனையாகும். புதிதாக ஒரு கிரகத்தை வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டிபிடிப்பார்கள். அறிவியல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் மைல்கல்லை எட்டும். புதிது புதிதாக மக்களுக்குப் பயன்படும் பொருட்களை வியாபாரிகள் அறிமுகம் செய்வார்கள். வீண் வதந்தி செய்வோர், மக்களுக்கு குந்தகம் விளைவிப்போர் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.