
திருக்கண்டியூர்
ஈசனின் அலகிலா விளையாடல்களின் அடிநாதமாக ஆணவமுற்றோர் அழிவார் என்ற கருத்து பொதிந்திருக்கும். அது ஈசனுக்கு அருகேயிருப்போராயினும் அதிலிருந்து தப்பிக்க முடியாது. அது போன்றொரு நிகழ்வுக்கு நெருக்கமான தலமே திருக்கண்டியூர். இலக்கானவர் நான்முகனான பிரம்மா. ஐம்முகனான ஈசனின் மூச்சுக்காற்றின் அதிர்வுகள் வேதசப்தங்களாக விண்ணில் நிறைந்தன. நான் மறைகளும் ஒட்டுமொத்தமாக அதை வெளிவிட்டபடி வேதத்தின் திரண்ட வடிவாக பிரம்மா விளங்கினார். அதனாலேயே பிரம்மா வேதசொரூபன் எனும் ஏற்றம் பெற்றார். நான்மறைகளும் நான்கு சிரசாக அவரை அலங்கரிக்க இன்னும் அழகராக ஒளிர்ந்தார். வேதசப்தங்களின் அசைவுகள் சொல்லும் விதம் பார்த்து பிரபஞ்சம் படைத்தார். அனந்தகோடி உயிரினங்களாக பிரபஞ்சம் பல்கிப் பெருகியது.
ஆனால், ஒருமுறை அப்படிப் பெருகியதைப் பார்க்க அவருக்குள் பெருமையை வளர்த்தது. பிரபஞ்சத் தோற்றம் கொடுத்த பிரமிப்பு, நான் படைத்ததா இவையெல்லாம் எனும் கர்வ எண்ணத்துக்கு வித்திட்டது. நீயே யாவினிலும் முதல்வன் என்று யாரேனும் தன்னை சொல்ல மாட்டார்களா என்று ஏக்கம் அதிகரித்தது. கர்வக் கொம்பு நான்கு முகங்களையும் பிளந்ததுபோல் செங்குத்தாக வளர்ந்தது. நான்கு முகங்களாக விளங்கும் வேதங்களை பின்னுக் குத் தள்ளியதுபோல் ஐந்தாவது முகம் ஆணவக்கோளமாக உருண்டு எழுந்தது. பிரம்மா முதன் முதலாக தான் வேறு, பிரபஞ்சம் வேறு என்று உணர்ந்தார். தான் படைத்த வஸ்துகள்தான் இவை என்று பேதம் பிரித்தார்.
தன்னால் இவையெல்லாம் படைக்கப்பட்டதெனில் தானே இவற்றையெல்லாம் ஆளும் அதிபதி என்று விபரீதமாக சிந்தித்தார். பரமசிவனுக்கும் தன்னைப்போல் ஐந்து முகம்தான்.... செருக்கு அவரைச் சிதைத்தது. கயிலாயம் நோக்கி ஆர்ப்பாட்டமாக பயணித்தார். அகந்தை வெள்ளம் பெருகப் பெருக, பல்கிப் பெருகிய உயிர்களின் எண்ணிக்கை குறைந்து, அழிவு அதிகமாக, பிரபஞ்சம் தடம் புரண்டது. ஈசன் வெகுதொலைவே ஆர்ப்பரித்து வரும் பிரம்மனைப் பார்த்தார். அகங்காரத்தில் உருண்டு வரும் கோள மான ஐந்தாவது தலையைக் கவனித்தார். இது பிரம்மனின் இயல்பல்லவே என கவலையுற்றார். வேதசொரூபனான பிரம்மனே இவ்வாறு அகங்காரத்து டன் திரிந்தால் சாமானிய மானிடர்களின் கதி என்ன என்று பிரம்மனின் மீது கோபமுற்றார்.
ஆணவ போதை, ஈசனையே நீயார் என ஏறிட்டுப் பார்க்க வைத்தது, பிரம்மனை. சிவனின் முகம் சினத்தில் சிவந்தது. ‘‘உமக்கும் ஐந்து முகம் எனக்கும் ஐந்து முகம்’’ என்ற பிரம்மனின் செருக்குப் பேச்சு, ருத்ரனை ரௌத்ரமாக்கியது. ‘‘ஐம்முகங்கள் கொண்ட நீர் இந்த பிரபஞ்சத்திற்கு அதிபதி யானால் நானும் உமக்கு இணையானவர்தானே!’’ என்ற அதீத போதைக் கேள்வி இளக்காரமாகக் கேட்கப்பட்டபோது, கயிலைநாயகன் எழுந்தார். துள் ளிக் குதித்துக் கிடந்த ஊர்த்துவமாக விளங்கிய ஐந்தாவது முகத்தை தம் இரு கைகளாலும் அழுத்தினார். பிரம்மா தான் எனும் அகங்காரத்தை விடமு டியாது அலறினார். ஈசன் பிரம்மாவின் ஐந்தாவது தலையை முறுக்கித் தனியே துண்டமாய் எடுத்தார். ஈசனின் கைகளை பிரம்மகபாலம் எனும் அந்த எச்சம் இறுகப் பற்றிக் கொண்டது.
பிரம்மனை அவனது ஆணவப் பிசாசிடமிருந்து காப்பாற்றியவர் இப்போது வேறொரு சிக்கலில் சிக்கிக் கொண்டார். என்ன இருந்தாலும் வேதத்தை சுமந்தவனின் தலையல்லவா அது. எனவே பிரம்மஹத்தி தோஷம் அவரைச் சூழ்ந்தது. அது நீங்கும் வழியையும் அறிந்த ஈசன் தோஷம் நீக்கிக்கொள்ள பயணமானார். மூவிலைகளுக்குள் முக்கண்ணன் இலகும் அதிசயத் தலமான ஆதிவில்வாரண்யம் எனும் தலம் நோக்கி நகர்ந்தான், பிரம்மன். உடன் வந்த சரஸ்வதி யுடன் பிரம்மன் தவத்தில் ஆழ்ந் தான். இப்படியாக ஈசனின் வீர விளையாடலால் புகழ் பெற்று, அட்டவீரட்டத்தலங்களில், ஆதிவில்வாரண்யம் முதன் மை பெற்றது. அது தவிர, சப்த ஸ்தானங்களிலும் ஒன்று இது.
நந்தியம்பெருமானின் திருமணம் நடைபெற்ற திருமழபாடிக்கு இங்கிருந்து பல்லக்கு சுமந்து செல்வர். கட்டுசாதக் கூடையும் கூடவே செல்லும்.
திருக்கண்டியூரின் கடைத்தெரு நெரிசலுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கிறது கோயிலின் ராஜகோபுரம். சாதாரணமாக பிரம்மாவுக்கு வெறெங்கும் இத்தனை புராணச் சிறப்பு கொண்ட கோயிலே இல்லை எனலாம். பொதுவாக தேவ கோஷ்டத்தில் தனியே வீற்றிருப்பார் பிரம்மா. ஆனால், இத்தலத்தில் பிரம்மாவும் சரஸ்வதியும் தம்பதி சமேதராக வீற்றிருக்கும் காட்சி காண்போரை பரவசப்படுத்தும். ராஜகோபுரம் கடந்து இடப்புறம் மங்களாம்பிகை சந்நதி தெற்கு நோக்கி உள்ளது. பிரம்மாவின் தலையைத் திருகி எ டுத்ததால் பிரம்மசிரகண்டீசர் எனும் திருநாமம் இவருக்கு. வில்வத்தின் கீழ் அமர்ந்ததால் ஆதிவில்வநாதர். பிரம்மனின் அகங்காரத்தை அறுத்த சக்தி நம் அகத்துள்ளும் ஊடுருவும் அற்புதச் சாந்நித்யம்மிக்க சந்நதி.
பிரம்மா ஜீவக்களை ததும்பி நிற்கும் சிலையாகத் திகழ்கிறார். நான்கு முகங்களிலும் ஞானப் பூரிப்பு பரவிக் கிடக்கிறது. பேரானந்தச் சிரிப்பொன்று இடையறாது உதட்டில் பொங்குகிறது. அழகிய ஜடையின் அலங்காரமும் மார்பின் மேல் பரவியிருக்கும் ஹாரங்களும் பூணூலின் மெல்லிய நுணுக்க மும் பார்ப்போரை மயக்கும் கலையழகு. மகா சரஸ்வதி எழில் வடிவினள். கல்வியும் ஞானமும் சேர்ந்திழைத்துத் தரும் ஞானவாணி. அதுமட்டுமல் லாது தனது கணவனோடு அடக்கமாக அமர்ந்திருக்கும் சரஸ்வதி நான்கு கரங்களோடு வீற்றிருக்கிறாள். சிருஷ்டிக்கு அதிதேவதை பிரம்மாவெனில், கலை, காவியம், சாஸ்திரப் புராணங்கள் என்று சிருஷ்டியின் நீட்சியை இவள் பெருக்கி அனுக்கிரகம் செய்கிறாள்.
இவ்விரு தொழில்களுக்கும் அப்பால் வேதவாணியாக, ஞானபூரணியாக இவள் விளங்குகிறாள். அதனாலேயே பிரம்மாவையும் சரஸ்வதியையும் திவ்ய தம்பதியராக இதிகாசங்கள் வர்ணிக் கின்றன. எத்தனை ஞானிகளின் பூப்பாதங்கள் பட்ட புண்ணிய பூமி இது. அப்பரும் சம்பந்தரும் உருகி நின்ற கோயில் இது. அப்பெரியோர்கள் உணர்ந்து அனுபவித்த இப்பெருங்கோ யிலை வலம் வந்து கொடிமரத்தின் கீழ் வீழ்ந்து பரவுகிறபோது அலைஅலையாக தெய்வீகச் சக்தி நமக்குள்ளும் குடிகொள்வதை உணரலாம். தஞ்சாவூர்-திருவையாறு பாதையில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது, திருக்கண்டியூர்.
கிருஷ்ணா


