Pages

திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் பக்தர்களுக்கு எள் உருண்டை பிரசாதம்


காரைக்கால்: காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தெர்பாராண்யேஸ்வரர் கோயிலில் சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோயிலுக்கு சனிப்பெயர்ச்சி சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். சனி பகவானுக்கு எள் மிகவும் விசேஷமான உணவு என்பதால் தரிசனத்திற்கு பிறகு பெரும்பாலான பக்தர்கள் எள் தீபம் ஏற்றுவதும், எள் சாதத்தை படைத்து காக்கைக்கு வைப்பதும், எள் பொடியில் நைவேத்தியம் செய்வதும் வழக்கம்.
இந்நிலையில் கோயில் நிர்வாக அதிகாரியாக அண்மையில் பதவியேற்றுக்கொண்ட ராஜராஜன் வீராசாமி சனிபகவான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சில வாரங்களாக சோதனை முறையில் எள் உருண்டை வழங்கி வந்தார்.

இது பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருப்பதையொட்டி ஒவ்வொரு சனிக்கிழமைதோறும் பக்தர்களுக்கு எள் உருண்டை இலவசமாக வழங்கும் திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார். இது குறித்து அவர் கூறுகையில், திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு வரும் பக்தர்களுக்கு லட்டு வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தை போல் திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என கடந்த பல நாட்களாக யோசித்து பலரது ஆலோசனைகளை பெற்று இத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம் என்றார்.