Pages

கவலைகள் களைவாள் கருமாரி திரிபுரசுந்தரி


 

எங்கும் நிறைந்திருக்கும் அம்பிகையின் அருளைப் பெற வேண்டி நிற்கும் மெய்யடியார்கள் அநேகர். அனைவரின் மனமும் மகிழ்ந்திட அவளின் அருளை வாரி வாரி இறைத்த வண்ணம் ஆங்காங்கே காட்சி அளிக்கின்றாள் அன்னை. அதே வகையில் சென்னை-அசோக் நகரின் மையப் பகுதியான சாமியார் தோட்டத் தெருவில் அன்னை கருமாரி திரிபுரசுந்தரி, தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். இங்கு எழுந்தருளியிருக்கும் அன்னை கருமாரி திரிபுரசுந்தரி, சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு இலந்தை மரத்தடியில் சூல வழிபாடு மூலம் பூஜிக்கப்பட்டவள். சக்தி உபாசகர் சக்தி சுந்தரேசன் என்பவர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இலந்தை மரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சூல வடிவிலான அன்னை கருமாரி திரிபுரசுந்தரிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வார். அதன்பிறகு அங்கு வரும் பக்தர்களுக்கு சக்தி தேவியின் அருள்வாக்கும் சொல்வார்.

நாளடைவில் பக்தர்களின் வருகை அதிகரித்தது. அன்னைக்கு ஒரு கோயில் அமைத்து ஆராதிக்க எண்ணம் கொண்டு, அதை தமது நெருங்கிய நண்பர்களிடம் வெளிப்படுத்தி, அன்னை திரிபுரசுந்தரிக்கு ஒரு கோயில் அமைக்க திட்டங்கள் மேற்கொண்டார். அன்னை கருமாரி திரிபுரசுந்தரி விரைவாகக் கோயில் கொண்டாள். ஒரு ஆலயத்தின் சிறப்பு, அங்கு அமைந்துள்ள தல மரமும் தீர்த்தமும்தான். அந்த வகையில் இலந்தை மரத்தை தல மரமாக இத்தலம் பெற்றிருப்பது மிகச் சிறப்பானதாகும். மரம், செடி, கொடி யாவும் நம் வாழ்வின் ஒரு அங்கம். அவை இல்லாவிட்டால் நம் வாழ்வே இல்லை. மா, பலா, வாழை, வேம்பு, ஆலமரம், அரசமரம், வில்வம், எழிஞ்சல் மரம் போன்ற ஒவ்வொரு மரத்திலும், இயற்கையாகவே பல மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இதனால்தான் அனைத்துத் தாவரங்களையும் நாம் போற்றி வழிபடுகிறோம். இந்த வகையில் இலந்தை மரத்தையும் புனித மரமாகவே போற்றுகின்றனர்.
அன்னை கருமாரி திரிபுரசுந்தரி, நான்கு கரங்களில் வரதம், அபயம், உடுக்கை, திரிசூலம் தாங்கி வீராசனமாக வலது காலை தரையில் நிறுத்தி, இடது காலை மடக்கி வீற்றிருக்கிறாள். ஐந்து தலை நாகம், தலைமீது குடைபிடிக்க பூர்ண மேருவை ஆதாரமாகக் கொண்டு அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். அன்னை ஆசியுடன் செல்வங்களை தடையின்றி வழங்கவல்ல செல்வமுத்து கணபதி, அன்னையின் செல்லப்பிள்ளை செல்வ முத்துக்குமரன், நாமம் சொன்னால் நன்மை தருபவளான துர்க்கை, அனைத்து வரங்களையும் அளிக்கவல்ல ஸ்ரீநிவாசர், தம்முடைய ஆயுதமான இடது கையில் கதையை கீழ்நோக்கி வைத்துக்கொண்டு, வலது கையால் சஞ்சீவி மலையை தாங்கி பிடித்த வீர சஞ்சீவி சாந்த ஆஞ்சநேயர் மற்றும் நவகிரக சந்நதிகள் உருவாயின.

பின்பு 1980ம் ஆண்டுவாக்கில் கைலாசபதியான சிவபெருமான் த்ரயம்பகேஸ்வரராக மனைவி மக்களை காண வந்தவர், இங்கு நிரந்தரமாகத் தங்கி விட்டார் என்றே சொல்ல வேண்டும். ஆம், அர்த்தநாரியான இறைவன், இவ்வாலயத்தில் ஸ்படிகலிங்கத்துள் பச்சை மரகதத்திலே சிவலிங்க வடிவில் அமைந்தார். இதுபோன்ற பச்சை மரகத லிங்க ஸ்படிக லிங்கம் பாரத தேசத்தில் சில இடங்களில் மட்டுமே காணத்தக்கது. மிக அற்புதமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதன் கிரகத்துக்கு உரிய ரத்னமாக மரகதம் கருதப்படுகிறது. இதனால் புதனுக்குரிய மரகதத்தை லிங்க வடிவில் வழிபடுவதன் மூலம் நாம் கேட்ட வரத்தைப் பெறலாம். எந்த தோஷத்திலிருந்து விடுபடுவதும், கல்வி, ஆரோக்கியம், உயர் பதவிகளில் அமரும் யோகம் பெறுவதும் இந்த மரகத லிங்க வழிபாட்டால் கைகூடும். நம் முன்னோர்கள் ஸ்படிகங்களை மாலைகளாக அணியும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். இதனால் உடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் திகழ்கிறது; நோய்களும் அண்டுவதில்லை என்பார்கள்.

1989ம் ஆண்டு இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தபோது மாமுனி, தமிழ் வளர்த்த அகத்தியர், அவரது துணைவியார் லோபாமுத்ரா மற்றும் கால பைரவர் ஆகியோருக்கு சந்நதிகள் அமைக்கப்பட்டன. இரட்டைக் கோயில் என்று சொல்லும் அளவிற்கு கோயிலுக்குள் கோயிலாக பத்மாவதித் தாயார் உடனுறை ஸ்ரீநிவாசர் சந்நதி அமைந்துள்ளது. சுதர்சனர் சந்நதி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நரசிம்மரின் உக்கிரத்தைப் போக்கிய சரபேஸ்வரருக்கு ஒரு தனி சந்நதி உள்ளது. ஞாயிற்றுக் கிழமை தோறும் ராகு காலத்தின்போது சரபேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. வீர சஞ்சீவி சாந்த ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியின்போது ஒரு லட்சத்து எட்டு வடைகளால் மாலைகள் தொடுக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுவது இத்தல வழக்கம். சென்னை, அசோக் நகர், சாமியார் தோட்டத் தெருவில், நிரந்தரமாக அருள்மாரிப் பொழிகிறாள், அம்பிகை, கருமாரி திரிபுரசுந்தரி.