Pages

காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோயில்


வீரப்பெருமாநல்லூரைச் சேர்ந்த அந்த முதியவருக்குத் தீராத வயிற்று வலி. ஒருவர் சொன்ன யோசனையின்படி காட்டுப்பரூர் வந்த அவர், தினமும் ஆதிகேசவப் பெருமாளை வணங்கினார். ஏழு நாட்கள் ஆகியும் வலி குறையவில்லை. எட்டாவது நாளும் குளத்தில் நீராடிய முதியவர், பெருமாளிடம் ‘ஐயனே, நோய் தீர்ப்பாய் என்ற நம்பிக்கையோடு வந்தேன். பலனில்லை. என் பக்தியில்தான் ஏதோ குறை. இதோ என் காணிக்கை’ என்றார். உடனே பளிச்சென்று தனது நாக்கை அறுத்து ஒரு வெற்றிலையின் மீது வைத்துவிட்டு, ரத்தம் வழிய கோயிலை வலம் வரத் தொடங்கினார். அந்தக் கணமே, கருணைக் கடலான கேசவன் முதியவரின் வலியை நீக்கினார். வெட்டுப்பட்ட நாக்கும் ஒட்டிக் கொண்டது. ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்று ஆனந்தக் கூச்சலிட்டார் முதியவர்.

300 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்துக்கு சாட்சியாக முதியவர் செய்து வைத்த காளிங்க நர்த்தன கோபாலன் சிலை இன்றும் கோயிலில் இருக்கிறது.
அதற்கும் 150 ஆண்டுகளுக்கு முன்பு காடாக இருந்த இந்தப் பகுதியில், சுயம்புவாகத் தோன்றியவர் இந்த பெருமாள். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வேமண்ணா என்னும் யோகி இந்தக் கோயிலுக்கு வந்து யந்திர ஸ்தாபனம் செய்து பூஜித்துள்ளார். இத்தல அன்னையின் திருநாமம் வேதவல்லி நாச்சியார். இவரை வழிபட உடனே திருமணம் கைகூடும்.

சின்ன கிராமத்தில் பெரிய திருக்குளம், ராஜகோபுரம் விசாலமான கோயில் என அப்பகுதிக்கு ஆன்மிக மகுடமாய் ஒளிவீசும் இந்த ஆலயத்தைப் புதுப்பிக்கும் திருப்பணி நடைபெற்று வருகிறது. மக்களின் உடல் பிணியையும் பிறவிப் பிணியையும் தீர்க்கும் கேசவனின் திருக்கோயில் திருப்பணியில், பங்கெடுக்க விரும்புவோர், பரம்பரை அறங்காவலர், ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், காட்டுப்பரூர் கிராமம், மங்கலம்பேட்டை வழி, விருத்தாசலம் தாலுகா, கடலூர் மாவட்டம்&606104 என்ற முகவரியிலும் 9715055701, 9443844050 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.