Pages

ராகு பெயர்ச்சியையொட்டி திருநாகேஸ்வரத்தில் லட்சார்ச்சனை விழா


திருவிடைமருதூர்: கும்பகோணம் அருகே உள்ள நாகநாத சுவாமி கோயிலில் வரும் 2ம் தேதி ராகு பெயர்ச்சி விழா நடக்கிறது. இதையொட்டி லட்சார்ச்சனை
நேற்று துவங்கியது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் ராகுபகவான் இரு தேவியருடன் அருள் பாலித்து வருகிறார். இத்தலத்தில் ராகு பகவான் நாகநாத சுவாமியை வழிபட்டார் என்பது புராண வரலாறு. இந்த
கோயிலில் டிசம்பர் 2ம் தேதி ராகு பெயர்ச்சி விழா நடக்கிறது. விருச்சிக ராசியிலிருந்து 10.53க்கு ராகு பகவான் துலாம் ராசிக்கு பெயர்ச்சியடைகிறார்.

ராகு பெயர்ச்சியையொட்டி வரும் 30ம் தேதி மாலை 6 மணிக்கு ராகு பகவானுக்கு முதல் கால யாக பூஜை துவங்குகிறது. டிசம்பர் 1ம் தேதி 2 மற்றும் 3ம் கால யாகபூஜை நடக்கிறது. 2ம் தேதி 4ம் கால யாகபூஜை, சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையரும் செயல் அலுவலருமான பரணிதரன், தக்கார் மற்றும் உதவி ஆணையர் மாரியப்பன், பணியாளர்கள் செய்து வருகின்றனர். மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம் போன்றவை தோஷ பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளாகும். இதையொட்டி ராகு பகவானுக்கு முதல் கட்ட லட்சார்ச்சனை நேற்று துவங்கியது. இது 29ம் தேதி வரை நடக்கிறது. 2ம் கட்ட லட்சார்ச்சனை டிசம்பர் 3ல் துவங்கி 5ம் தேதி வரை நடக்கிறது.