திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் உள்ள பெரிய கிராமம் நல்லூர். இந்த கிராமத்தில் சுந்தரவரதராஜப் பெருமாள், சிவன், வள்ளலார் ஆகியோரோடு, திரெளபதி அம்மனுக்கும் தனிக் கோயில் சிறப்புடன் விளங்குகிறது.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் நல்லூரில் ஆட்சி நடத்திய பாளையக்கார குடும்பத்துப் பெண்மணி ஒருவர் மீது அம்மன் அருள் வந்தது. அதன்படி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டை அடிவாரத்தில் இருந்து மண் எடுத்து வந்து, கிராம மக்கள் உதவியுடன் திரெளபதி அம்மன் கோயில் கட்டப்பட்டது.
இந்த கோயிலில் உள்ள திரெளபதி அம்மன் செல்வங்களை அள்ளித்தரும் தாயாக இருந்து அருள்பாலிக்கிறார். நல்லூரை பூர்வீகமாக கொண்டவர்கள் தற்பொழுது சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசித்து வருகின்றனர். ஆனாலும் அவர்கள் வாங்கும் பஸ், லாரி முதலான வாகனங்களை தங்களது சொந்த கிராமமான நல்லூரில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலுக்கு கொண்டு வந்து சிறப்பு பூஜைகளை செய்த பிறகுதான் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.
கடன் பிரச்னைகள் நீங்கவும் உழைப்புக்கேற்ற வருமானம் பெறவும் செல்வ வளம் கொழிக்கவும் இக்கோயிலில் வேண்டுதல் செய்தால் நிறைவேறும் என்பது கிராம மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
கிருஷ்ண&பஞ்சபாண்டவ&திரெளபதி அம்மன் ஆலயம் என்றே இந்தக் கோயிலுக்குப் பெயர். கருவறையில் திரெளபதி அம்மனுக்கு அருகில் வலது புறத்தில் அர்ஜுனன், பீமன், இடது புறத்தில் விஷ்ணு, இடது கோடியில் போத்துராஜா ஆகியோர் உள்ளனர். போத்துராஜாவின் சொந்த கிராமம் நல்லூர் என்று கூறப்படுகிறது. மகாபாரத போரில் பஞ்ச
பாண்டவர்களுக்கு ஆதரவாக சண்டையில் போத்துராஜா கலந்து கொண்டாராம்.
சிறப்பு வாய்ந்த இந்த கோயில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை ஓட்டு கூரையுடன்தான் இருந்தது. ஆனால், கிராம மக்களும் திரெளபதி அம்மனின் அருளால் நல்ல நிலைக்கு உயர்ந்தவர்களும் ஒன்றுகூடி கருவறை, கோபுரம், மண்டபம் என அமைத்து, புதிய பொலிவுடன் கோயிலை கட்டியிருக்கிறார்கள். வந்தவாசி தாலுகாவில் திரெளபதி அம்மன் கோயில் மண்டபத்துடன் இருப்பது நல்லூரில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
திரெளபதியம்மன் கோயிலுக்கு சமீபத்தில் வெகு விமரிசையாக மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. வந்தவாசியில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் நல்லூரில் இந்த கோயில் அமைந்துள்ளது. பஸ் வசதி உண்டு.



