Pages

ஆரூடம் வகுத்துத் தந்த அக்னீஸ்வரர் கோயில்



திருவள்ளூர் - நெய்வேலி

கயிலையில் வாசம் செய்யும் நாதன் பக்தர்களுக்காக கனிந்து, பல்வேறு காலங்களில் பல லீலைகளைப் புரிந்து அதன் அடையாளமாய் நாடு நெடுக கோயில் கொண்டு அருள்கிறார். அப்படி அரனாய் ஆலயம் கொண்டு எழுந்த தலங்களில் சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை வழியில் பூண்டி நீர்த்தேக்கத்தின் அருகில் அமைந்துள்ள பூண்டி கிராமமும் ஒன்று. சுந்திரமூர்த்தி நாயனார் பார்வையை இழந்து இங்குள்ள இறை வனை வேண்டித்தான் வழிகாட்டு ஊன்றுகோல் பெற்றார். இதனாலேயே இறைவன் ஊன்றீஸ்வரரானார். இத்தலம் வந்த பக்தர்களுக்கு, இன்னொரு தலத்தைக் காட்டி அதன் புராணப் பெருமையை புதுப்பிக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அது 2004ம் ஆண்டு, அக்டோபர் மாதம். இரு சிவநேய அன்பர்கள் இந்த ஊன்றீஸ்வர பெருமானை வழிபட்டு வெளிவந்த சமயம், ஒரு சிறுவன் அவர்களிடம் வந்து, ‘‘சார்... பக்கத்துல நெய்வேலின்னு ஒரு ஊர் இருக்கு. அங்க ஒரு சிவன் கோயில் இருக்கு. காட்டுல இருக்கும் அந்த சாமிய பாருங்க’’ என்று கூறினான்.

தெய்வ வாக்கிற்கு கட்டுப்பட்டது போல அந்த சிறுவனின் வார்த்தையை கேட்டு, நெய்வேலி கிராமத்திற்கு விரைந்தார்கள் அந்த சிவபக்தர்கள். அந்த ஊர் எல்லையில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்த வனாந்திர பகுதியில் ஒரு முதிர்ந்த கல்லால மரத்தின் கீழ் சிதைவுற்ற ஒரு கருவறையைக் கண்டார் கள். அதில் புதையுண்டு, ருத்ரபாகம் மட்டும் வெளியே தெரிந்த ஒளிமிக்க சிவலிங்கத் திருமேனியை தரிசித்தார்கள். இந்த ஆலயம் மீண்டும் பொலிவு பெற திருப்பணி செய்ய முடிவெடுத்தார்கள். உடனே இக்கிராம மக்களின் ஒத்துழைப்புடன் இறைவனுக்கு ஒரு சிறு ஓலைகுடில் அமைத்து, வழிபாடு கள் நடத்த ஆரம்பித்தார்கள். இன்றளவும் இது தொடர்கிறது. இந்த சிவலிங்க திருமேனியை தவிர ஆலயத்தின் ஏனைய பகுதிகள் காலப்போக்கில் மறைந்துவிட்டன. அருகிலேயே ஒரு திருக்குளம் இருந்த அடையாளங்களை கொண்டு அந்த இடத்தை தூர்வாரி இப்போது திருக்குளமும் அமைக்கப் பட்டது.

இத்திருக்கோயிலின் புராண வரலாற்றை அறியும் பொருட்டு, தேவப்ரசன்னம் என்ற புராதன ஆரூட முறையில் கணித்துச் சொல்லும் இரு வல்லுனர் களை சந்தித்துப் பேச சென்னையை சேர்ந்தவரும், கேரள நம்பூதிரியும் ஒரே குரலாக சொன்ன விஷயங்கள் ஆச்சர்யமூட்டும் ரகம். இத்தல நாதனின் திருநாமம் அக்னீஸ்வரர். அன்னையின் அழகுப் பெயர் லலிதாம்பிகை. பதினெண் சித்தர் பெருமக்களால் தோற்றுவிக்கப்பட்டு இன்றளவும் அனுதினமும் நள்ளிரவில் அவர்களால் வழிபட்டு வரப்படும் இறைவன் இவர். இவர்களில் முக்கியமானவர்கள் கருவூர்தேவர் என்ற கருவூராரும், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரரும் ஆவர். இவ்வாலயத்தை மீண்டும் சீர் அமைக்க வேண்டுமாயின், கருவூரார் மற்றும் நெரூவூரார்களின் அனுமதி பெற வேண்டும் என்றும் ஒரு திங்கட் கிழமையன்று கருவூராரின் சிவ சந்நதியில் வஸ்திர தானம் செய்ய வேண்டும் என்றும் அதை சித்தர் பெருமானே வலிய வந்து ஏற்றுக்கொள்வார் என்றும் ஆரூடம் சொன்னார்கள்.

(அதன்படி, சிவ பக்தர் கரூர் சென்று வழிபட்ட சமயம், அதிஷ்டான அலங்காரத்திலிருந்த வஸ்திரத்தை பிரசாதமாக அளித்தும் அடுத்த திங்கட்கிழமை ஒரு முதியவராக சென்னையில் பக்தரின் வீடு தேடி வந்து வஸ்திர தானத்தை விரும்பி கேட்டு, ஏற்று அருள்பாலித்த அதிசயமும் நிகழ்ந்தது. இது கரூவூராரின் அற்புத திருவிளையாடலே!) இங்கு ஓங்கி வளர்ந்து அடர்ந்து பரந்திருக்கும் கல்லால மரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. அன்னை மாகாளி இக்கோயிலின் காவல் தெய்வமாக இம்மரத்தில் உறைகின்றார். இம்மரத்தின் அடியில் ஒன்பது மாமுனிவர்கள் அமர்ந்து இன்றளவும் தவமியற்றி வருகின்றனர். இவர்களே நாகங்களாகவும் கருவண்டுகளாகவும் உருக்கொண்டு இம்மர பொந்துகளில் வாழ்கின்றனர்.

இது சிறந்த நாகதோஷ நிவர்த்தி தலமாகவும் புத்திரபாக்யம் அருளும் தலமாகவும் விளங்குகிறது. விரைவில் இத்திருக்கோயிலை நாடி பக்தர்கள் நாட் டின் பல பாகங்களிலிருந்தும் வருவார்கள் என்றும் ஜோதிடர்கள் கூறியிருக்கிறார்கள். புனித கல்லால மரம் விழுதுகளற்ற ஆலமர இனத்தை சேர்ந்தது. இம்மரமே சிவஸ்வரூபமானது. தட்சிணாமூர்த்தி பெருமான், மௌன குருவாக இம்மரத்தடியிலிருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்ததாக நம் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. சிவனாரின் முக்கண்ணிலிருந்து தோன்றிய இத்திருக்குள அக்னி தீர்த்தத்தில் நீராடி அக்னீஸ்வரரை வணங்கினால், தீராத வியாதிகளும் குணமாகும். திருமணம், புத்ர பாக்கிய சம்பத்துகளும் கைகூடும் என்றும் ப்ரசன்னத்தில் குறிப்பிட்டார்கள்.

அதன் பிறகு சித்தர்களின் அனுமதியோடு பாலாலயம் செய்யப்பட்டு ஆலயத் திருப்பணிகள் நடந்து வருகிறது. தற்சமயம் விநாயகர் சந்நதி அமைக்கப் பட்டு, திருக்குளம் மற்றும் சுற்றுச் சுவர் திருப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. கிராமத்திலிருந்து கோயிலுக்கு செல்ல ஒரு பாதையும் அமைத்தாகி விட்டது. முக்கியமாக சுவாமி, அம்பாள், வன துர்க்கை, மகா மண்டபம் முதலிய திருப்பணிகள் நடைபெற வேண்டியுள்ளது. திருத்தலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று, விரைவில் குடமுழக்கு காண பக்தர்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறார்கள், திருப்பணி குழுவினர். 9940398648, 9445004908, 9840789096 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு இந்தத் திருப்பணியில் உளமாற பங்கேற்கலாம். திருவள்ளூர் கலெக்டர் ஆபீஸிலிருந்து ஊத்துக்கோட்டை சாலையில், பூண்டி கூட்டு ரோட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது, நெய்வேலி அக் னீஸ்வரர் ஆலயம்.