
சிவ ஆலயங்கள் பற்பலவற்றுள் தானே தோன்றி, முனிவர்களும் சித்தர்களும் அடியவர்களும் வழிபட்ட சுயம்புலிங்க மூர்த்திகள் அறுபத்து நான்கு ஆகும். இப்படி சுயமாக தோன்றிய லிங்க ஸ்வரூபத்தில் அதி அற்புதம் வாய்ந்ததாக போற்றப்படுபவர், திருப்புங்கூர் உறை சிவலோகநாதர். இவர் முன் உறையும் நந்திகேஸ்வர சுவாமியும் சுயம்புவானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பிகை சௌந்தர்ய நாயகி அம்பாள்.
சிவபெருமானின் ஆணைப்படி, சிவகணங்களைக் கொண்டு, கணபதி ஒரு குளம் வெட்டினார். பக்தர்கள் நீராடி தாகம் தணிக்கவும் அவ்வூரில் நீர் வளம் பெருகவும் பணித்த திருப்பணியை விநாயகப் பெருமான் சிரமேற்கொண்டு உரிய காலத்தில் செய்து முடித்தமையால், சிவலோகநாதர், விநாயகரை அன்பின் மிகுதியால் ‘குளம் வெட்டி நின்ற மகன்’ என்றார். அன்று தொட்டு இங்குள்ள கணபதிக்கு ‘குளம் வெட்டிய விநாயகர்’ என்று பெயர். இந்த விநாயகர் பக்தர்களின் குறைகளை எளிதில் களைந்தெறிபவர்; மகா வரப்பிரசாதி.
தேர்வு எழுதும்முன் இவரை மனத்தால் பிரார்த்தித்து எழுதினால், புகழும், மகிழ்வும் வெற்றியும் சேரும். இது அனுபவபூர்வமான உண்மை. கடன் சுமை தீர, நல்ல மனை அமைய, விவாகத் தடை விலக இந்த குளம் வெட்டிய விநாயகரை பக்தியுடன் தொழுது வந்தால், கண்டிப்பாக வெற்றி நிச்சயம்.
‘குளந் தோண்டிய கணநாதனை
கை தொழுதக் கால் மாடு
மனை யொடு நல் மனையா
ளுங் சேருஞ் சத்தியமே’
-என்கிறது அகத்தியர் வாக்கு.
ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்தவர் நந்தனார். சிதம்பரம் போய் தில்லை நடராஜப் பெருமானைத் தொழுது இன்புற வேண்டுமென்று அவருக்கு நீண்ட நாள் ஆவல். ஆனால் வேலைப்பளு மிகுதியாலும் நாற்பது வேலி நிலம் இவரது பராமரிப்பில் இருந்ததினாலும் இவரால் சிதம்பரம் நடராஜப் பெருமானை தரிசிக்க இயலாது போனது. ‘ஏன் தில்லை போய் நடராஜரை தொழவில்லையா?’ என நண்பர்கள் கேட்டால், ‘நாளை போவேன்’ என்றே அனுதினமும் சொல்லி வந்தார். எனவே இவரைத் ‘திருநாளைப் போவார்’ என்றே நண்பர்களும் சுற்றத்தவரும் கூறி வந்தனர். இவரது குலதெய்வம் சங்கலி கருப்பண்ணசுவாமி. சிவகணங்களில் சிறந்தவர். இவரை மனம் உருகி பிரார்த்தித்து எப்படியாயினும் சிவதரிசனம் கிடைக்க வேணும் என வேண்டி நின்றார். சிவலோகநாதன் இவருடைய கனவில் தோன்றி, ‘நந்தனே, நீ யாமிருக்கும் திருப்புங்கூர் வர ஆணை’ என கூறினார்.
‘‘நந்தனாரவருக்கு கனவினிலே சிவலோகநாதன் தோன்றி புங்கூர் வந்தருள் பெருக என்றான்’’ என்கிறது நாடி. பின் திருப்புங்கூர் சென்று கோயிலின் வெளியே நின்று சிவபெருமானை தரிசித்தார். அந்நாளில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் பிரவேசம் செய்ய முடியாத ஏக்கத்தில் தவித்தனர். ஆகவே கோயிலுக்கு வெளியே இருந்தவாறே ஈசனைத் தொழ நினைத்த நந்தனாருக்கு அந்த தரிசனம் கிட்டவில்லை. சிவலிங்கம் அவரது பார்வையில் படாததற்குக் காரணம், குறுக்கே நின்றிருந்த நந்திதான். நந்தனார் கதறி அழுது சிவனை மனதார தொழுது நின்றார். சிவபெருமானும் தன் வாகனமான நந்தியை ‘‘ஒதுங்கி நில்’’ என்றார். கோபம் கொண்ட நந்தி, பல்லை இறுக கடித்து ஒதுங்கி நின்றார். ஆனால் இந்நிகழ்ச்சி கண்ட அக்கோயில் துவாரபாலகர்களும் வானோரும் தேவர்களும் பூமாரி பொழிந்து போற்றி பரவசப்பட்டனர்.
நந்தனார், சிவபெருமானாகிய சிவலோகநாதரை கண்ணாரக் கண்டு நெஞ்சார கண்ணீர் மல்க தொழுது பரவசப்பட்டார். இன்றும் இங்குள்ள நந்தி தேவரின் தாடை பிளவுபட்டு, பற்களை கடித்தபடி சிவபெருமானின் பார்வையிலிருந்து ஒதுங்கி நிற்பதைக் காணலாம். துவார பாலகர்கள் தலையும் சாய்ந்து நிற்பது நந்தனாரின் பெருமையை பறை சாற்றுகிறது. நந்தனார் பாதம் பட்ட பூமியே புங்கூர். பிரம்ம தேவர் ஒருமுறை தர்ப்பைப் புல்லை பந்துபோல் சுற்றி வீசினார். அப்படி வீசி எறியப்பட்ட அந்தப் பந்து நந்தனாரின் பாதம் பட்ட இடத்தில் வந்து நின்றது.
சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் யார் அழகில் சிறந்தவர் என்ற வாதம் எழுந்தது. உடனே நாரத மகரிஷியும் மகாவிஷ்ணுவும் கயிலாயத்தில் எழுந்தருளி, ‘‘திருப்புங்கூர் தலத்தில் இதற்கு விடை கிடைக்குமே...’’ என்றனர்.
‘‘சுந்தரமென செப்ப ஒருவருண்டெனில் அஃது யாமோ நூமோ யென சதிபதியாஞ் சிவசக்தி வாதிட, நந்தனார் தம் பொருட்டுத் தள்ளியமர்ந்த நந்தி நாடாம் புங்கூர் நல் விடையளிக்குமென்றான் இடையனுமே’’ என்றார், அகத்தியர்.
சிவபெருமானாகிய சிவலோக
நாதனும் பார்வதி தேவியான சௌந்தர்யநாயகியும் தத்தம் ஒளியுடலுடன் கயிலாயத்தில் இருந்து பூமிக்கு விரைந்து வந்து நின்ற இடம் இந்த திருப்புங்கூர் தலம். இந்த காணக் கிடைக்காத காட்சியைக் காண எல்லா தேவர்களும் முனிவர்களும் சித்தர்களும் கந்தர்வர்களும் கின்னரர் கிம்புருடர்களும் மகா விஷ்ணுவும் பிரம்மா, சரஸ்வதி, திருமகள் அனைவரும் கூடி நின்ற தலம் இது. இந்த புண்ணிய பூமி திருக்கயிலாய மலையைவிட, மகா கீர்த்தி வாய்ந்தது என்று முனிவர்களால் போற்றப்பட்ட புண்ணிய பூமி.
‘‘முன்னை வினை அகல
மூதாதையர் தம் சாபமகல
சம்பத்தெல்லாம் கொழிக்க
கொழிக்குஞ் சம்பத்து தழைக்க
யீடிணையிலா இன்பம் வளர
திருப் புங்கூரானை குலத்தோடு
கூடித் தொழுவீர். புண்ணிய
மீது வோதினோம் யறிவீர் பூவுலகீரே’’
-என்கிறது நாடி. சிவபெருமானின் அழகில் பார்வதி தேவி மயங்க, பார்வதி தேவி அழகில் சிவபெருமான் மயங்க, ‘‘நீயே ஒப்பற்ற அழகு’’ என ஒருவரை ஒருவர் பாராட்டி மனமொருமித்த தலம் இது. ஒடுக்கப்பட்ட இனத்தானானாலும் நந்தனாருக்கு தம் தரிசனம் காட்டித் தந்த கருணை வள்ளல் கயிலைநாதன் அருள்பாலிக்கும் புண்ணியத் தலம், இந்த இத்திருப்புங்கூர். இன்றும் மனம் வேறுபட்ட, கருத்தொற்றுமை ஏற்படாத, பிரிந்த தம்பதியர், மனமுருகி இங்கு வந்து சிவலோகநாதரையும் சௌந்தர்ய நாயகியையும் தொழுது நின்றால், மன இடைவெளி மறைந்துபோய் இணை பிரியாது இணைந்து நீடுழிவாழ்வர் என்பது திண்ணமே.


