Pages

தங்க கோபுரம் வேயப்பட்ட முதல் விநாயகர் கோயில்!


 

புதுவை மக்களின் உற்ற தெய்வமாக மணக்குள விநாயகர் விளங்குகிறார். வங்கக் கடல் தாலாட்டும் கடலோரத்தில் உயர்ந்து நிற்கும் மணக்குள விநாயகர் கோயிலின் மூலவர் அமைந்துள்ள விமானம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. 10 கிலோ எடையில் தங்கக் கோபுரம் அமைந்துள்ளது. இந்தியாவில் தங்க கோபுரம் வேயப்பட்ட விநாயகர் கோயில் இது மட்டுமே.

சித்தி - புத்தி சமேதராகவும் அருள்பாலிக்கிறார். ஆவணி மாத பிரமோற்சவத்தின் 5ம் நாள் திருவிழாவின்போது திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. விநாயகர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும் ஒரேகோயில் இது தான். திருமணமாகாதவர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக சிறப்பு திருக்கல்யாண நிகழ்ச்சியும் கோயிலில் நடைபெறுகிறது.

இக்கோயிலில் 10 அடி உயர தங்கத் தேர் உள்ளது. கோயிலின் நுழைவு வாயிலில் 18 அடி உயர தங்க கொடி கம்பம் உள்ளது. புதுச்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பிறக்கும் குழந்தைகளை முதன் முதலில் மணக்குள விநாயகர் ஆலயத்துக்கு எடுத்துச் சென்று முக்கண் முதல்வனின் ஆசியை பெற்ற பிறகே பிற கோயில்களுக்கு அழைத்துச் செல்வதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.