Pages

நவராத்திரி துளிகள்!


மைசூரில் பெரும்பாலோர் மண் பொம்மைகளால் கொலு வைப்பதில்லை. வித விதமான அலங்காரங்களில் மரப்பாச்சி பொம்மைகளையே கொலுவில் வைக்கின்றனர்.

மகிஷாசுரனோடு தேவி புரிந்த போரை தாவரம், விலங்குகள், பறவைகள், மனிதர்கள், தேவர்கள் என அனைவரும் பொம்மை போல் சிலையாக நின்று வேடிக்கை பார்த்தனர். அதை நினைவுறுத்தும் வண்ணமே பொம்மைக்கொலு வைக்கும் வழக்கம் வந்தது என்பர்.

மைசூரில் நவராத்திரியை அடுத்த 10வது நாளான விஜயதசமியையும் சேர்த்துக் கொண்டாடுகிறார்கள். 10வது நாள் தசமி என்பதால் அன்றைய தினத்தை தசராத்திரி என அழைக்கின்றனர். அதுவே சுருங்கி தசராவாயிற்று.

மேற்கு வங்கத்தில் நவராத்திரியை துர்க்காபூஜை, காளி பூஜையாகக் கொண்டாடுகிறார்கள்.

விஜயதசமி தினத்தன்று வன்னி மரத்தை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும்.

நவராத்திரி நாட்களில் தேவி மகாத்மியம், தேவி பாகவதம் போன்றவற்றை படிப்பதும் கேட்பதும் பாவங்களை விரட்டும்.

சந்திரகுப்தர் காலத்தில் நவராத்திரி விழா, வீர விழாவாகக் கொண்டாடப்பட்டது.

குஜராத்தில் நவராத்திரி 9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து கோலாட்டம் போட்டு மகிழ்வர். அந்த நடனம் கர்பா என்றும் தாண்டியா என்றும் அழைக்கப்படுகிறது.

நவராத்தியின்போது போடப்படும் கோலத்தைச் சுற்றி செம்மண் இட, தேவி மகிழ்ந்து எழுந்தருள்வாள்.

கொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவகிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும் நவகிரக பலன்களும் கிடைக்கும்.

மது-கைடப சம்ஹாரம் செய்தவள் துர்க்கை என்றும், மஹிஷனை மாய்த்தவள் அஷ்டதசபுஜமஹாலக்ஷ்மி என்றும், சும்ப-நிசும்பர்களை வதைத்தவள் மகாசரஸ்வதி என்றும் தேவி மகாத்மியம் கூறுகிறது.

மும்பையில் தன் ஆலயத்தில் ரிஷப வாகனத்தில் அமர்ந்து அருள்கிறாள் தேவி. நவராத்திரி 9 நாட்களும் தேங்காயை உடைத்து இளநீரை அந்த வாகனத்துக்கு அபிஷேகம் செய்கின்றனர். நவராத்திரியின் போது செய்யப்படும் ஹோம சாம்பலை புருவத்தில் தடவிக்கொள்கின்றனர்.