இந்த
விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து
கோலமிட்டு மண்டபம் அமைத்து அதில் ஒரு சதுர அடி அளவிற்கு நெல் அல்லது
அரிசியைப் பரப்பி அதன்மேல் ஒரு வெள்ளி அல்லது செப்புக் குடத்தை வைத்து அதை
அரிசி அல்லது நீரால் நிரப்பிக் கொள்ளுங்கள். அதன்மீது மாவிலைக் கொத்து,
தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம், புஷ்பம் போன்றவற்றால் அலங்கரித்து
கலசத்தில் லட்சுமி தேவியின் திருமுகத்தை வைத்து பூஜிக்க வேண்டும். ஒன்பது
முடிச்சுள்ள நோன்புக் கயிற்றை ஒவ்வொரு முடிச்சிலும் அக்ஷதை, புஷ்பம் கொண்டு
அர்ச்சித்து பிறகு, வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும். இந்த பூஜாமுறைகள்
தெரிந்த சாஸ்திரிகளைக் கொண்டு செய்து கொள்வது நல்லது. நிவேதனமாக இட்லி,
கொழுக்கட்டை, வடை போன்றவற்றை தயாரித்து, ‘லக்ஷ்மி, ராவே மா இன்டிக்கி,
பாக்யத லக்ஷ்மி’ போன்ற பாடல்களைப் பாடி பூஜிக்க வேண்டும். இதனால் மங்கல
வாழ்வு கிட்டும். லட்சுமி தேவி வேண்டும் வரங்களைத் தருவாள்.



