Pages

கவலை களைவார் கபாலீஸ்வரர்



சிவபெருமானைப் போலவே தன்னை எண்ணிக் கொண்டிருந்தார் பிரம்மன். படைக்கும் தொழிலை மேற்கொண்டிருந்த அவர், தனக்கும் சிவனைப் போலவே ஐந்து தலைகள் இருப்பதில் செருக்கு அந்த ஐந்து தலைகளிலும் ஏறிக் கொண்டது. இதை அறிந்து, சிவன் சினமுற்று, பிரம்மனை சபித்ததோடு, அவனுடைய ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளி எறிந்தார்.

இவ்வாறு செருக்குறுவதற்கும் தலை இழந்ததற்கும் காரணம், பிரம்மதேவனை ஏழரைச் சனி பிடித்து இருந்ததுதான் என்கிறது நாடி. அப்படி தலையை இழந்து, படைக்கும் தொழிலை விட்ட பிரம்மதேவன், ரிஷிகளின் ஆலோசனையின் பேரில், பூலோகத்தில், கயிலாயத்துக்குச் சிறிதும் குறைவில்லாத, வேதங்கள் போற்றும் வேத புரியாம் சுக்கிரபுரி என்ற தலத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து உளமாற பூஜையில் ஈடுபட்டார். இத்தலத்திற்கு கயிலாய மயிலை என பெயரும் சூட்டினார். இதுவே இன்றைய மயிலை என்னும் மயிலாப்பூர்.

இந்தக் கோயிலில் கபாலீஸ்வரர் என்று சிவன் போற்றப்படுகிறார். இவரை இங்கே பிரதிஷ்டை செய்தபோது, பகவான் மகாவிஷ்ணு ரிஷிகள் புடைசூழ கலந்துகொண்டார். இப்பூவுலகில் இதற்கு சமமான ஒரு புண்ணிய தேசம் கிடையாது என்று விஷ்ணுவே கூறியிருக்கிறார் என்றால், இதன் முக்கியத்துவமும் பராக்கிரமும் எழுத்தில் வடிக்க இயலாதது. மகாலட்சுமி தேவியே கற்பகாம்பாளுக்கு ஆராதனை செய்தார் என்கிறது ஓலைச்சுவடி.

வெள்ளிக்கிழமைகளில், தங்க காசு மாலையிட்டு அம்பாள் கற்பகவல்லி வீற்றிருக்கையில், மகாலட்சுமியும் சரஸ்வதிதேவியும் எதிரே அமர்ந்து வழிபாடு செய்கிறார்கள். ஆடி வெள்ளிக்கிழமைகளில் அன்னை கற்பகாம்பாளை வழிபடுபவருக்கு கண்டிப்பாக மாங்கல்ய பலம் சேருவதுடன் சகல ஐஸ்வர்யங்களும் குவியும் என்கிறார், அகஸ்தியர்.

மயில் ரூபத்தில் பார்வதி பிராட்டியார் இந்த கயிலாய மயிலையில் தவமிருந்து சிவதரிசனம் பெற்றதால் மயிலை என்றும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

பார்வதி தேவியை பிரார்த்தித்து, ஆறுமுகப் பெருமான், சூரபத்மன் என்ற அசுரனுடன் யுத்தத்திற்கு புறப்பட்டார். தேவர்கள் துயர் துடைக்கப் புறப்பட்ட தன் அழகிய மகனை கற்பகாம்பாள் அன்புடன் அழைத்து, தன்னுடைய சக்தி மிகுந்த ஒரு வேலை அவன் கையில் கொடுத்தார். அதுவே சக்திவேல், வெற்றிவேல், வேலாயுதம். அப்படி சக்தி தேவியிடம் இருந்து அந்த வேலை முருகன் பெற்றது இந்த கற்பகாம்பாள் சந்நதியில்தான். அன்றுதொட்டு இன்றுவரை, ஏன், இனி என்றுமே முருகன் என்றவுடன் நமது கண்ணில் முதலில் தெரிவது அந்த வேல்தான்.

பத்துமலை முருகன் சந்நதி என்று ஒன்று மலேசிய நாட்டில் உள்ளது. இங்கு வேலாயுதம்தான் இருக்கும்; மூலவர் சந்நதியில் முருகனுக்குத் தனி உருவம் இல்லை. இந்த அளவிற்கு வேலும் முருகனும் ஒன்றாகி உள்ளனர் என்றால் அது கற்பகாம்பாளின் அருள்தான். இறைவனின் அருளாகிய காந்த அலைகள் நிரம்பித் ததும்பும் அற்புதம் இந்த கபாலீஸ்வரன் சந்நதியில் வினாடி பிசகாமல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த ஈசனின் கிருபையாலேயே பிரம்மன் தான் இழந்தவற்றையெல்லாம் மீண்டும் பெற்றான்.

‘யார் ஒருவருக்கு தொழிலில் தடையோ, யார் ஒருவருக்கு திருமணத்திற்கு முன்னும் பின்னும் சிக்கலோ, அவர்கள் விரதம் இருந்து கபாலீஸ்வரரையும் அன்னை கற்பகவல்லியையும் ஆராதித்தால், இன்னல் தீர்ந்து, வற்றாத பேரின்பம் பெற ஏதுவாகும்’ என்கிறது நாடி.

‘‘மணத் தால் வரும் துயரகல
வந்த துக்கமு மோட
நாசமான பணி நலமுடனே
சேர கபாலீஸனை போற்றுமினே’’
-என்கிறார், போகர். வேதங்கள் நான்கும் அனுதினமும் வந்திருந்து மந்திரம் சொல்லி, ஆராதிக்கும் கோயில் இது. வாமன அவதாரம் எடுத்து, மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார் மகாவிஷ்ணு. மன்னவனும் எந்தத் தயக்கமும் இல்லாமல் சம்மதித்துத் தனது கையில் இருந்த கமண்டலத்திலிருந்து தண்ணீர் ஊற்றி தானம் செய்ய முற்பட்டான். வாமனனாக வந்திருப்பது மகாவிஷ்ணுவே, தனது சிஷ்யனை ஏமாற்றவே வந்திருக்கிறார் என்று தெரிந்து கொண்ட சுக்கிராச்சார்யார், வண்டு ரூபம் கொண்டு கமண்டலத்தின் துவாரத்தை அடைத்துக் கொண்டார். இதை புன்சிரிப்புடன் கவனித்த வாமனன், தர்ப்பைப் புல் ஒன்றினால் அந்த துவாரத்தைக் குத்த, சுக்கிராச்சார்யார் ஒரு கண்ணை இழந்தார்.

பிறகு அவர், சிவபெருமானை நோக்கி தவம் செய்ய, இந்த கபாலீஸ்வர சந்நதியை அடைந்து தொழுது நிற்க, சிவனும் மனம் இரங்கி, சுக்கிராச்சியாரின் இழந்த பார்வையை மீண்டும் ஒளிவீச செய்தார். ஆக, பார்வை இழந்த சுக்கிர பகவானே பார்வை பெற்ற தலம் இந்த கபாலீஸ்வர க்ஷேத்திரம். எப்படிப்பட்ட நோயாயினும் குணம் பெறும் என்பது, இன்றும் கண்கூடு.

தனது மனைவி சீதாபிராட்டியை மீட்டுவர ராமன், கடலில் சேதுபந்தனம் என்ற அணையை, வானர சேனைகளை கொண்டு கட்டினார். ராவணேஸ்வரனோ, மிகுந்த பராக்கிரமசாலி, சிவனடியான். அவனுக்கு நவக்கிரக நாயகர்களும் சேவை செய்கிறார்கள். இப்படிப்பட்டவனை எப்படி போரில் வெல்வது என்று ராமன் தயங்கியபோது, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி போன்ற ரிஷிகள், ராமனிடம், ‘‘மயிலை கபாலீஸ்வரனை தொழுது சென்றால் வெற்றி நிச்சயம்’’ என்று உறுதியளித்தனர்.

உடனே ராமன், லட்சுமணனுடன், தனது முக்கிய சேனைத் தலைவர்களுடன், குல குருக்களுடன், ஆராதித்த தலம் இந்த கபாலீஸ்வரர் சந்நதி. அப்போது அங்கு ‘ஜெய ஜெய ராமா, ஜெய ஜெய ரகுராமா, ஜெய ஜெய சீதாராமா,’ என அசரீரி முழங்கியது. பின் ராமர் ராவணேஸ்வரனை எளிதில் வென்று, சீதையை மீட்டார். ஜெயராமனானார். ‘இன்றளவும் இனி என்றும் ஆஞ்சநேயன் இந்த ராமநாமத்தையே மந்திரமாக்கி பாடி வருகிறார்’ என்கிறார் அகஸ்தியர்.

வெற்றி பெற எண்ணுபவர்கள் எல்லாம், ஸ்ரீராமா, ஜெயராமா, சீதாராமா என்று ஒரு மந்திரமாக தினமும் பலமுறை முடிந்த மட்டும் பாராயணம் பண்ணுங்கள். எதையும் சாதிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டாகும். ஆயிரத்து முன்னூற்று முப்பது திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு முதல் அடியான ‘அகர முதல எழுத்தெல்லாம்...’ என எடுத்து தந்து ஆசி ஈந்தது, இங்குள்ள கற்பகவல்லி நாயகி என்று நாடி கூறுகிறது. இந்த மயிலை மாடவீதியில்தான், கற்பகவல்லி சந்நதிக்கு நேர் எதிராக இருந்த வீட்டில்தான் திருவள்ளுவர் பிறந்தார் என்பது அகஸ்தியர் வாக்கு.

இறந்து போனவர் பிறப்பது ஏது என்கிறது சாஸ்திரம். ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீள்வதில்லை என்கிறது வேதம். ‘கறந்த பால் முலை புகா’ என்கிறார் சித்தர். ஆனால் கபாலீசன் அருளால், இறந்து போன சிவநேச செட்டியின் மகள் அங்கம் பூம்பாவை உயிர் பெற்று மீண்டார் என்றால், சிவனின் கீர்த்தியை, கபாலீஸ்வரனின் கிருபையை என்னென்பது! வாயிலார் நாயனார் முக்தி பெற்ற தலம் இது. ஞானசம்பந்தர் உள்ளிட்ட நால்வரால் போற்றிப் பூஜிக்கப்படுவது கபாலீஸ்வரன் ஆலயம். உற்சவ காலங்களில், அதிகார நந்தி மற்றும் கிளி வாகனங்களில் ஈஸ்வரன் வருகையில், தேவர்களும், சப்த ரிஷிகளும், சப்த மாதாக்களும், சித்தர்களும், இன்னபிற சித்தர்களும் அரூபமாக கலந்து கொண்டு சிவனை ஆராதிக்கின்றனர். இதனை நான் கண்ணார கண்டேன் என்கிறார் அகஸ்தியர். தாமும் கற்பகவல்லித் தாயார் உடனமர் கபாலீஸ்வரரை தொழுது வெற்றிமேல் வெற்றி பெற்று, மகிழ்ச்சியாக வாழ்வோம்.