ஆதி அந்தம் இல்லாதவரும், அளப்பரிய ஆற்றல் உள்ளவருமான மகாதேவன் பெருங் கருணையால் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பல இடங்களில் ஆத்தூர் முக்தீஸ்வரமும் ஒன்று.
பல்லவர்களும், சோழர்களும் போட்டியிட்டுக் கொண்டு இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்து மகிழ்ந்திருக்கின்றனர். வரலாறு இத்தலத்தை ‘நதிப்புறம்’ என்று பதிவு செய்தது. தல மரமான வில்வத்தின் வாசத்தின் மத்தியில், பாலாறு பாய தன் நாயகி தர்மசம்வர்த்தினியோடு அருட்கோலம் காட்டியருள்கிறார், ஈசன். பிரம்ம சூத்திரம் எனும் அபூர்வ ரேகை களோடு அருளும் பரமன் திருக்காட்சி காணுதற்கரியது. இத்தகைய லிங்கம் ‘சிருஷ்டி லிங்கம்’ எனப்படும். பிள்ளை வரம் தருவதில் இந்த லிங்கம் நிகரற்றது என்று நூல்கள் பேசுகின்றன. ஐயனின் கருவறையின் அடிப்பகுதி கருங்கற்களால் ஆனது. அதன் மேல் ஏகதள விமானம். அர்த்த மண்டபமும், மகா மண்டபமும் கொண்ட இந்தக் கருவறையில் தல நாயகன், முக்தீஸ்வரன் எனும் திருநாமத்தோடு அருளாட்சி செய்கிறார்.
அன்னை தர்மசம்வர்த்தினி, அறம் வளர்த்த நாயகி என்றும் பெயர் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறாள். கோஷ்ட தெய்வங்களாக தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகியோருடன் சண்டிகேஸ்வரரும் உள்ளார்.
ஒருசுற்றுப் பிராகாரம் கொண்ட இத்தலத்தில் ஆறடி உயரத்தில் ஆறுமுகப் பெருமான் அதியற்புத மாக நீல மயில் மீதமர்ந்து காட்சி தருகிறார். கண்களை கவரும் திருவுருவம்.
துர்க்காதேவி, விஷ்ணு துர்க்கையாக த்ரிபங்க நிலையில் வனப்போடு தரிசனம் அருள்கிறாள். ராகுகால வேளைகளில் எலுமிச்சம்பழ மூடிகளில் விளக்கேற்றி இவளை பக்தர்கள் வழிபடுகின்றனர். உற்சவ மூர்த்திகளாக சந்திரசேகரர், விநாயகர், முருகன், நடராஜர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள்கின்றனர். காமீக ஆகமபடி இருகால பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன.
அபூர்வமான ஜேஷ்டாதேவி வழிபாடு இத்தலத்தின் தனிச் சிறப்பு. நான்கு திருக்கரங்கள் கொண்ட இத்தேவியின் ஆராதனை, சோழர் காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்துள்ளது. அமிர்தம் பெறுவதற்காக அசுரர்களும், தேவர்களும் திருப்பாற்கடலை கடைந்தபோது ஆலகால விஷத்தையடுத்து பாரிஜாத மரம், மந்தார மரம், கற்பக விருட்சம், காமதேனு, ஐராவதம் என்ற யானை, உச்சைச்ரவஸ் என்ற குதிரை, சந்திரன், சங்கநிதி, பதுமநிதி, அமிர்த கலசத்தோடு தன்வந்திரி, திருமகளோடு இந்த ஜேஷ்டா தேவியும் தோன்றியதாக ஐதீகம். ‘சித்தாந்த சாராவளி’ எனும் ஆகம நூலில் இந்த அம்பிகையின் வழிபாடு விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இவளை வழிபடின் சகல செல்வங்களும் பெறலாம் என்பது நிஜம். செய்வினை, ஏவல் போன்ற பாதிப்புகளிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.
ஆங்காங்கே நந்தியம் பெருமானின் சுதை உருவைத் தாங்கிய நீண்ட மதில்கள் கொண்ட இக்கோயில் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது. தில்லை அம்பல நடராஜனுக்கு இந்த ஆத்தூர் கிராம வருவாயை ஒதுக்கி, தில்லை தெற்கு கோபுரத்தை அமைத்து, ‘சொக்கச் சீயன் திருநிலை’ எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தான் என்கிறது கல்வெட்டு.
ஆண்டு முழுவதும் ஆருத்ரா தரிசனம், பிரதோஷ வழிபாடு, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், சதுர்த்தி, நவராத்திரி பெருவிழா எனக் கோலாகலம் கொள்ளும் ஆலயம் இது. திருக்கார்த்திகை தீபத்தின் போது ஏற்றிய அகல் விளக்குகளை உலக நன்மைக்காக பாலாற்றில் மிதக்க விடுவது இத்தல விசேஷம்.
திருக்கோயில் காலை 6.30 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் பாதையில் 5 கி.மீ. தூரத்தில் ஆத்தூர் உள்ளது.



