Pages

மாணவச் செல்வங்கள் தேர்வில் வெற்றி பெற... கல்விச் செல்வம் அருளும் கலைமகள்


கல்வியின் சிறப்பை அறியாதவர்கள் இல்லை. வாழ்வை வளப்படுத்தும் அடித்தளமாக அது இருக்கிறது. இதை முறையாக பிள்ளைகளுக்கு வழங்க வேண்டியது பெற்ற வர்களின் கடமையாக இருக்கிறது. அந்தக் கடமையை சுலபமாக்குபவள் கலைமகள்.

'அனைத்து உயிர்களின் நாவினிலும் கலைமகள் வீற்றிருக்கிறாள்'என்கிறது கந்த புராணம். பிள்ளைகளுக்கு ஞானப்பால் ஊட்டி வளர்ப்பவள் சரஸ்வதி தேவி.

அட்சராப்பியாசம் குழந்தைக்கு மூன்று வயதானதும், அட்சராப்பியாசம் செய்து வைப்பது பண்டைய நாட்களில் வழக்கம். புத்தாடை உடுத்தி, கலைமகளை வணங்கி, ஆசான் மடியில் அமர்த்தி, நெல்லை ஒரு தட்டில் பரப்பி, அதில் அந்தப் பிஞ்சுக்கரங்களின் விரலால் 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எழுதச் செய்து, 'அட்சர' அப்பியாசத்தை துவக்கி வைப்பார்கள். இது, அந்தக் குழந்தைக்கு சரஸ்வதியின் அருள் கிடைக்கச் செய்யும். இதன் பின்னரே குழந்தைகளை பள்ளி யில் சேர்ப்பார்கள்.

சரஸ்வதி கோயில்பிரம்மாவுக்கே தனியாக கோயில் இல்லாத போது, கலைமகளுக்கு மட்டும் எப்படி தனிக் கோயில் அமைந்தது? அதுதான் கூத்தனூர் தல வரலாறு. சத்ய லோகத்தில் பிரம்மாவும் சரஸ்வதியும் தேவர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் கலைவாணி சற்றே தற்பெருமை கொண்டாள். 'தான் அமர்ந்திருப்பதால்தான் பிரம்ம லோகமே பெருமை பெறுகிறது' என்ற எண்ணம் தலைதூக்கியது. இதை அவள் பிரம்மாவிடம் சொல்ல, அதுவே அவர்களிடையே வாதமாக உருவெடுத்து, பூதாகரமாகக் கிளம்பியது. அவ்வளவுதான்!

ஒருவரையொருவர் சபித்துக் கொண்டு இருவருமே பூவுலகில் மானிடராகப் பிறந்தனர். அதுவும் அண்ணன், தங்கையாக! அரிசொல் ஆற்றங்கரையில் புண்ணியகீர்த்தி என்பவனுக்கு குழந்தைகளாக பிறந்த அவர்கள் பகுகாந்தன், சிரத்தை என்று திருநாமம் கொண்டனர். இனிதே வளர்ந்து திருமணப் பருவம் எய்தினர். அண்ணன், தங்கையாக பிறந்தவர், மீண்டும் எப்படி ஒன்று கூடுவர்?

அப்போது அசரீரி எழுந்தது. ‘அருகிலுள்ள ருத்ர கங்கையில் நீராடி, பிரம்மதேவன் சத்ய லோகம் செல்ல வேண்டும் என்றும், சிரத்தை அந்தத் தலத்திலேயே தனிக் கோயில் கொண்டு, பூவுலக மக்களுக்கு கல்விச் செல்வத்தை வாரி வழங்கிட வேண்டும்’ என்றும் அசரீரி சொன்னது. அன்றைய தினம் உருவானதுதான் சரஸ்வதி சந்நதி.

இரண்டாம் ராஜராஜ சோழனின் அவைப் புலவராக இருந்த ஒட்டக் கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர் என்பதால் இது ‘கூத்தனூர்’ என்று பெயர் பெற்றது.

கருவறையில், தாமரை மலரில் அமர்ந்த கோலத்தில் வெண்ணிற ஆடை தரித்து அருள்பாலிக்கிறாள் சரஸ்வதி. அவளுக்கு மூன்று கண்கள். கருணை புரியும் இருவிழிகளோடு, 'ஞானச்சஸ்' என்ற மூன்றாவது கண் கல்விச் செல்வம் வழங்குவதாகும்.

வலது கரம் சின் முத்திரையும், இடது கரத்தில் புத்தகமும், மேற்கரங்களில் அட்சர மாலையும், அமிர்த கலசமும் ஏந்தியுள்ள அருட்கோலம். கிழக்கு நோக்கிய சந்நதி.

கலைவாணியின் காலடியில் நோட்டு, புத்தகம், பேனா ஆகியவற்றை சமர்ப்பித்து, அவளது ஆசியுடன் கல்விக் கொடை பெற்றிடக் காத்திருப்போரை ஆலயத்தில் எப்போதும் காணலாம்.

நவராத்திரி சமயத்தில் கூத்தனூர் விழாக்கோலம் காண்கிறது. நீண்ட வரிசையில் மாணவ - மாணவியர் வாகீசுவரியின் அருள் வேண்டி நிற்பர். தேங்காய்-பழம்-பூ விற்பனையை விட கடைகளில் நோட்டுப் புத்தகம் - பேனா விற்பனை அதிகம்!

நாக்கில் 'ஓம்' குழந்தைகளின் நாக்கில், சரஸ்வதி தேவியின் சந்நதியில் தேன் கொண்டு 'ஓம்' என எழுதி ஆசீர்வதிக்கிறார் சிவாச்சாரியார். அதுதான் அட்சராப்பியாசம். மாடு மேய்ப்பவனின் நாக்கில் தனது சூலத்தால் எழுதி ‘காளிதாசன்’ என்ற மாபெரும் புலவனாக்கினாள் துர்க்கை வடிவம் கொண்ட சக்தி. தனது மைந்தர்களை சிறந்த கல்விமான்களாக்கிட கூத்தனூர் சரஸ்வதியும், நாவில் ஓங்காரத்தை எழுதி, அருள்பாலிக்கிறாள். பள்ளி மாணவர்கள் இத்தல நாயகியை வணங்கி தேர்வெழுத வெற்றி உறுதி என்பது பலமான நம்பிக்கை.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகிலுள்ளது கூத்தனூர். மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் 20 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் சந்திப்பிற்கு மேற்கில் 2 கி.மீ. தொலைவில் அரிசிலாற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய கோயில்.